Tuesday, September 30, 2008

புதுச்சேரி அரசின் தொடர் சனநாயகப் படுகொலை

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் இந்திய அரசை கண்டித்து கடந்த 28.11.2007 அன்று புதுச்சேரியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

“தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக இக்கூட்டத்தில் பேசுவீர்கள் என அரசு சந்தேகிக்கிறது” அதனால் கூட்டம் நடத்த அனுமதியில்லை என கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை தடைவிதித்தது.

இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.ஐயப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சோதிமணி பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

தீர்ப்பின் அடிப்படையில் 21.03.2008 அன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதால் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறையினர் மீண்டும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் “ஒரு சனநாயக நாட்டில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லையா? சட்டத்திற்கு உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளிக்க வேண்டும்.” என தீர்ப்பு வழங்கினர்.

இந்நிலையில் அண்மையில் வவுனியாவில் உள்ள சிங்கள இனவெறி இராணுவ படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் மும்முனை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலால் சிங்கள இராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இத்தாக்குதலில் இந்திய இராணுவத்தின் தொழிற்நுட்பப் பிரிவைச்சேர்ந்த இருவர் படுகாயமுற்றதாகவும், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் உள்ளதாகவும் செய்தி வெளியானது.

சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி செய்வது உறுதியான நிலையில் இதை கண்டித்து 29.09.2008 அன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. வழக்கம்போல் அதே காரணத்தைச் சொல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு சனநாயக நாட்டில் சனநாயக முறைப்படி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது சனநாயகப் படுகொலையாகும்.

“சட்டத்தை மதிப்பவர்களுக்கு அதை மாற்றவும் தெரியும் அதை மீறவும் தெரியும்” என்பது வரலாறு நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் புதுவை அரசு இதை உணரவேண்டும்.

No comments: