Monday, September 10, 2007

தி.க. தொழிலதிபர் திரு. கி. வீரமணி அவர்களுக்கு தெரிவிப்பது யாதெனில்...

தந்தை பெரியாரும் திராவிடர் கழகத் தொண்டர்களும் ஊணையும் உயரிரையும் உருக்கி வளர்த்து தமிழர்களின் விடியலுக்காக போராடிய "திராவிடர் கழகம்" என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை ஒரு நிறுவனமாக (Private Limited) மாற்றி பெரியாரின் பெயரை வைத்து தொழில் செய்யும் "தி.க. தொழிலதிபர் திரு.கி.வீரமணி" அவர்கள் மருத்துவர் தமிழ்குடிதாங்கியைப் பற்றி கருத்துரைக்க தகுதியற்றவர் என்பதை தமிழுலகம் நன்கு அறியும்.


தந்தை பெரியாருக்குப் பிறகு அந்த இயக்கத்தை அதன் இலக்கு நோக்கி நகர்த்தாமல் பெரியார் திடலிலும் நிதி நிறுவனத்திலும் முடக்கியவர்தான் தி.க. தொழிலதிபர் திரு. கி. வீரமணி அவர்கள்.


பெரியாரின் உண்மைத் தொண்டர்கள்; பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் தோழர். வே.ஆணைமுத்து, தோழர். திருவாரூர் தங்கராசு, தோழர். கொளத்தூர் மணி, தோழர். கோவை இராமகிருட்டிணன், தோழர். விடுதலை இராசேந்திரன் போன்றோர் தலைமையில் அணிதிரண்டு பெரியார் சேர்த்துவைத்த சொத்துக்களை தி.க. தொழிலதிபர் வீரமணியிடம் விட்டுவிட்டு தந்தை பெரியாரின் கொள்கைகளை மட்டும் உள்ளத்தில் நிறுத்தி சொல்லிலும் செயலிலும் இலக்கு நோக்கி பயணிக்கிறார்கள் என்பதை யார் மறைத்தாலும் மறைக்கமுடியாது மறுக்கமுடியாது.


12.09.2007 குமுதம் வார இதழில் தி.க. தொழிலதிபர் வீரமணியார் அவர்கள் மருத்துவர் தமிழ்குடிதாங்கி அவர்களைப் பற்றி பொறுப்பற்ற முறையில் கருத்துரைத்திருப்பது, தான் அண்டிப்பிழைக்கும் ஆட்சியாளர்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன் என்பதை காட்டிக்கொள்வதற்காகவே அன்றி வேறொன்றுமில்லை...


கள்ளச்சாராயம் விற்றவர்கள், ஊழல் பணங்களை பதுக்கி வைத்தவர்கள் எல்லாம் இன்று திடீர் கல்வி வள்ளல்களாக மாறியதுபோல்... தனது அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நிகர்நிலை பல்கலைக்கழகம் தொடங்கி திடீர் கல்வி வள்ளலாக மாற திட்டமிட்டுள்ள தி.க. தொழிலதிபர் திரு. வீரமணியார் போன்றவர்கள் ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசித்தான் ஆகவேண்டும் என்பது ஊரரிந்த தொழில் இரகசியம்...



ஒரு இயக்கத்தை தொடங்கியவர் அந்த இயக்கத்தை கட்டமைக்கும்போது சில வரைமுறைகளை வகுப்பதும் பிறகு அதை மாற்றிக்கொள்வதும் அந்த இயக்கத்தையும் இயக்கத்தில் இருப்பவர்களையும் சார்ந்தது. இதனால் சமூகத்தில் எந்தவித தீங்கும் நிகழ்ந்துவிடப்போவதில்லை.


இயக்கம் எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, எந்தெந்தெந்த கொள்கைகளை முன்னிருத்தியதோ, தன்னுடைய இயக்கத்தின் கொள்கை இதுதான் என்று எதை முழங்கியதோ, அதை பின்னுக்குத் தள்ளாமல், மறுக்காமல், மறைக்காமல் மேலும் மேலும் அதை செழுமையாக்கி தன் ஆற்றலுக்கு இயன்றவரை எல்லா நிலைகளிலும் செல்படுத்துவதுதான் அந்த இயக்கத்தின் கடமையாகும். அந்தப்பணியை மருத்துவர் தமிழ்குடிதாங்கி அவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் சொல்லிலும் செயலிலும் சிறப்பாகவே செய்கிறது.


கொண்ட கொள்கைகளை மறந்து அல்லது மறைத்து தன்மானமில்லா தமிழினத்தை உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு அள்ளும்பகலும் அயராது உழைக்கும் தலைவர்களுடன் கொஞ்சிக்குலாவும் தி.க. தொழிலதிபர் திரு. வீரமணியார் கொள்கை வழுவலைப்பற்றி பேச தனக்கு தகுதியில்லை என்பதை அவரே உணரவேண்டும்.


மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு ஒதுக்கியது கருணாநிதிதான் என்றும் இதில் இராமதாசுக்கு துளியும் தொடர்பில்லையென்றும் குமுதம் நேர்காணலில் தி.க. தொழிலதிபர் திரு. வீரமணியார் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் அல்லது மருத்துவர் இராமதாசு என்றால் சுயநினைவு உள்ளர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற தொடர் சாலைமறியல் போராட்டம்தான். அதற்காக உயிரை ஈகம் செய்தது மருத்துவர் இராமதாசு தலைமையேற்ற இயக்கம் தான். சமூகநீதிக்கான இந்தப்போராட்டத்தை தொடங்க மருத்துவர் இராமதாசு அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் தந்தைபெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் நாள்.


இந்தப்போராட்டத்தை இழித்தும் பழித்தும் பேசிய 102 சாதியினரையும், சாதிப்பற்றால் தனது சாதியையும் சேர்த்துக்கொண்டு வன்னியர்களின் தியாகத்தால் விளைந்த பயனை திருடியது யார் என்பதை உலகம் அறியும்...

துணை நகரம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்பதை யாரும் மறுக்கவில்லை. தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த மண்ணின் மீதுள்ள உள்ள உரிமைகளை பரித்துவிட்டு அந்த மண்ணில் யாரை குடியமர்த்தப்போகிறீர்கள்?. துணைநகரத் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், துறைமுகத் திட்டம், அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுமார் 50,000 ஏக்கர் நிலம் தமிழர்களிடமிருந்து பிடுங்கி தமிழரல்லாதவரிடம் ஒப்படைக்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தமிழின துரோகச்செயலை தமிழரல்லாதோர் வேண்டுமானால் தலையில் வைத்து கொண்டாடலாம், தன்மானமுள்ளத் தமிழர்கள் ஒருபோது இந்த இழிசெயலை ஏற்கமாட்டார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள வந்தேறிகளுக்கு தமிழர்கள் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்: "எங்கள் இழிவை நாங்கள் போக்கிக்கொள்கிறோம்... எங்கள் இலக்கை நாங்கள் இறுதிசெய்கிறோம்... "



செந்தமிழன், புதுச்சேரி.

No comments: