Wednesday, September 24, 2008

வீரமணியை காப்பாற்றுவதற்காகவாவது பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும்-தோழர் தியாகு

வீரமணியைக் கண்டித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கக் கோரியும், 25.8.2008 அன்று சென்னையில் நடந்த கழக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுப் செயலாளர் தோழர் தியாகு ஆற்றிய உரை:

தந்தை பெரியார் வாழ்க்கை முழுவதிலும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தவர். எதிர்ப்புக் கண்டு அஞ்சாதவர். எப்போதும் பெரியாருடைய பாதை சரளமானதாக, தடையற்றதாக இருந்ததில்லை. அதற்கு பொருத்தமாகவே இப்போது பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்புகளாக வெளியிடும் முயற்சிக்கும் தடைபோட துடிக்கிறார்கள்.

பெரியாருடைய கூட்டங்களுக்கும், உரை வீச்சுகளுக்கும், பார்ப்பனர்கள், சனாதனிகள், ஆட்சியாளர்கள் தடை போட்டார்கள். இப்போது பெரியாருடைய நூல்களை வெளியிடுவதைத் தடுப்பது வரலாற்றில் மிகப்பெரும் பின்னடைவு. இது பெரியார் திடலிலிருந்தே வந்திருக்கிறது என்பதுதான் வேதனை.

பெரியாரின் நூல்கள் வெளிவரப்போகிற செய்தி தமிழ்நாடெங்கும் தெரிய வேண்டும். அக்கரையுள்ள எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

பெரியார் திராவிடர் கழகம் செய்திருக்கிற பரப்புரை, விளம்பரம் போதுமானதல்ல என்று கருதியோ என்னவோ இந்தச் செய்தியை விளம்பரப்படுத்துவதற்கு நேரடி உதவி செய்திருக்கிறார் வீரமணி. அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். (கைதட்டல்)

எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர் கூறியிருக்கிற காரணங்கள் என்ன? முதலாவதாக இவைகளுக்கெல்லாம் அறிவுசார் காப்புரிமையை கோருகிறார். இது மிகவும் வேடிக்கையானது. சட்டம் என்ன சொன்னாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். தோழர் கொளத்தூர் மணி ‘நல்லது சந்திப்போம்’ என மிகப் பொருத்தமாக பதிலளித்து இருக்கிறார்.

நாம் சொல்ல விரும்புவதெல்லாம் பைபிள் என்கிற புதிய நூலுக்கு அறிவு காப்புரிமை கோரவில்லை. போப் பாண்டவர் பார்த்துத்தான் பைபிள் வெளியிட வேண்டுமென்றால் உலகத்தில் இத்தனை மொழிகளில் பைபிள் வெளிவந்திருக்காது. தமிழிலேயே எத்தனை மொழிப்பெயர்ப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? இவைகளை எல்லாம் போப் ஆண்டவர் அங்கிகரிக்க வேண்டும் என்றால் பைபிள் உலகிலே பரவியிருக்காது.

மார்க்சின் ‘மூலதனம்’ தொகுப்பு அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு தொகுதிதான் வெளிவந்தது. ஆங்கிலத்தில் அதை ஏங்கல்சு மொழி பெயர்த்து வெளியிட்டார். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில்;

மார்க்சும், ஏங்கல்சும் மறைந்த பிறகுதான் மற்ற தொகுப்புகளும், தொகுதிகளும் வந்தன. மாஸ்கோவிலிருந்து மூலதன நூலின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. அந்த மொழிபெயர்ப்புகளில் நிறைய தடைகள், இடையூறுகள் இருப்பதாகக் கருதி வேறு மொழிப் பெயர்ப்புகள் இருக்கின்றனவா எனத்தேடினோம்.

‘பென்குயின்’ என்ற முதலாளித்துவ வெளியீட்டு நிறுவனம், மிகப் பெரிய பொருளியல் வாதியான மார்க்சின் ‘மூலதனம்’ முழுமையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அதை வைத்துத் தான் நாங்கள் தமிழில் மொழி பெயர்த்து மூலதனம் முழுவதையும் சீர் செய்தோம். இப்படி மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர்களுடைய நூல்கள் எல்லாம் உலகில் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. முறையாக தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் அழகிய அச்சு வடிவிலே.

இதற்கெல்லாம் அன்றைக்கு சோவியத் அரசோ, மற்றவர்களோ தடை போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்குமான உறவு பிரிந்ததற்கு பிறகு எழுதின நூல்களையெல்லாம் சீனாவிலிருந்து புதிதாக மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள். இதற்கு யாரும் அறிவு சார் காப்புரிமை கோரவில்லை.

நம்மைப் பொருத்தவரை தந்தை பெரியார் தமிழ்நாட்டினுடைய லெனினாக, தமிழ் நாட்டினுடைய தேசிய தந்தையாக நாம் மதிக்கிறோம். இந்தியாவிற்கு எப்படி காந்தியை முக்கியமாகக் கருதுகிறார்களோ, அதுபோல் தமிழ்நாட்டிற்கு தந்தை பெரியார் தான். பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியாருடைய அறிவுக்களஞ்சியம் என்பது நம்முடைய சொத்து. அவர்கள் ஒரு திடலை, ஒரு கட்டிடத்தை ஒரு சிலையை சொந்தமாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை.

பவுத்தம் என்பது போருக்கெதிரான - சிந்தனைதான். ஆனால் சிங்கள பவுத்தவாதிகள் தமிழர்களுக்கு எதிராக போர் வெறிபிடித்து அலைகிறார்கள். அவர்களிடம் என்னயிருக்கிறது என்றால், புத்தருடைய பல் இருக்கிறது. ஒரு இடத்திலே புத்தருடைய முடியை வைத்திருக்கிறார்கள். ஆனால் பவுத்தம் அவர்களிடம் காணாமல் போய்விட்டது.

அந்த பவுத்தத்தை பெரியாரும், அம்பேத்கரும் தான் இந்த நாட்டுக்குரிய, மக்களுக்குரிய கருத்துகளாக வழங்கினார்கள்.புத்தருடைய பல்லையும், முடியையும் வைத்துக் கொண்டு - பவுத்தர்களாக உரிமை கோரும் சிங்களர் - பவுத்தத்தின் சிந்தனைக்கு எதிராக போர் வெறிபிடித்து அலைகிறார்கள்.

இங்கே பெரியாருடைய உடைமைகளை வைத்திருப்போர் - பெரியார் நூல்களை வெளியிட தடை கோருகிறார்கள். அம்பேத்கருடைய நூல்களை மராட்டிய அரசு ஆங்கிலத்திலே வெளியிட்டது மட்டுமல்ல, தமிழிலேயும் அரசு துணையோடு வெளியிட்டது. நானும் ஒரு சில தொகுதிகளை மொழி பெயர்த்து கொடுத்திருக்கிறேன்.

இப்படி நூல்கள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.தந்தை பெரியாருடைய கருத்துகளுக்கு அவருடைய சொற்களில், அவருடைய பதப் பிரயோகத்தில் கால வரிசைப்படியான சிந்தனையில்தான் பணி மலர்ச்சியை புரிந்துகொள்ள முடியும். அப்படி வெளியிடப்படாத ஒரு பிழை இருக்கிறது.

அந்த வரலாற்றுப் பிழையை நிறைவு செய்கிற முயற்சியை பெரியார் திடலே செய்திருக்குமானால் நாம் மெத்த மகிழ்ந்திருப்போம். அப்படி அவர்கள் செய்யத் தவறியிருக்கிற நிலையிலேதான் அவர்கள் அறிக்கையிலே கூறியிருப்பதைப் போல பல ஆண்டுகளுக்கு முன்பு இவற்றையெல்லாம் முறைப்படி எழுதி ஒப்படைத்தும்கூட அவற்றை வெளியிட முயற்சி செய்யாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம் அரும்பாடுபட்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக் கொண்டுவர முயல்கிறது.

தந்தை பெரியாருடைய தமிழ்நாடு தமிழருக்கே என்பதை உயிர் முழக்கமாக கொண்டிருக்கிற எங்களது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ இதற்காக நன்றிப் பாராட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

வீரமணி அவர்களும் நன்றி சொல்லியிருந்தால் கண்ணியமான, மரியாதையாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வீரமணி கண்டுகொள்ளாமலாவது இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அவர் விளம்பரம் கொடுக்கிறார். இவைகளை எல்லாம் தடை செய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். இது தேவையில்லாத வேலை.

நாங்கள் பெரியார் நூல்களை வெளியிடவில்லையா என்று வீரமணி கேட்கிறார். நீங்கள் எதையுமே வெளியிடவில்லை என்பதல்ல எங்கள் வாதம். நீங்கள் சுவரொட்டி அடித்து விளம்பரபடுத்தித்தான் நீங்கள் வெளியிட்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

தந்தை பெரியார் காலத்திலேயே அவருடைய எழுத்துக்கள் வெளிவந்தன. எத்தனையோ கூட்டங்களில் பெரியாரே புத்தகங்களையெல்லாம் வண்டிகளில் எடுத்துக் கொண்டு வந்து விற்றுவிட்டுவா என்று சொல்லுவார். திரும்ப வண்டியிலே ஏறுகிற பொழுது எவ்வளவு புத்தகங்கள் விற்றன என்று கேட்பார். முப்பது புத்தகம் விற்றது என்றால், ஆகா முப்பது பேர் படிப்பார்கள் அல்லவா என்று பெரியார் மகிழ்ச்சி யடைவார். அப்படித்தான் தன்னுடைய சிந்தனைகளை பரப்புவதற்கு எளிய முயற்சிகளை செய்தார்.

பெரியார் காலத்தில் சின்ன சின்ன புத்தகங்கள் வெளிவந்தன. அவைகளை தொகுத்து வெளியிடுகிறபோது தான் பெரியாருடைய சிந்தனை பனி மலர்ச்சியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

நாம் ஒரு செய்தியை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர்கள், மார்க்சியவாதிகள், அறிவாளிகள் என்று பிறப்பிலேயே எவனும் பிறப்பதாக நாம் நம்புவதில்லை.

பிறந்த பிறகுதான் அறிவு வருகிறது. அதுவும் படிப்படியாகத்தான் வருகிறது. மரத்தடியிலே உட்கார்ந்தால் ஞானம் வந்துவிடும் என நாம் நம்புவதில்லை.

இது எல்லோருக்கும் பொருந்துகிற செய்தி. பெரியாருடைய சிந்தனை வளர்ச்சி என்பது நமக்குத் தேவையானது. அது எப்போது கிடைக்கும் என்றால், பெரியாருடைய எழுத்துக்கள் காலவரிசைப்படி முழுமையாக எதையும் நீக்காமல், திருத்தாமல், மறைக்காமல் வெளியிடபடுகிறபோது மட்டுந்தான் கிடைக்கும்.

அப்படித்தான் ஆய்வாளர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். தங்களைத் தவிர, மற்றவர்கள் பெரியார் நூல்களை வெளியிட்டால் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.

பெரியார் எழுதியதை ஒன்றை வைத்துக் கொள்ளலாம். இன்னொன்றை நீக்கிவிடலாம், ஒரு சொல்லை விட்டு விடலாம், இன்னொரு சொல்லை சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்குப் பெயர்தான் திரிபுவாதம், புரட்டல் வேலை.

இந்த புரட்டல் வாதம், திரிபுவேலை கூடாது என்பதால்தான் உள்ளது உள்ளபடியே தொகுத்து வெளியிடுகிற முயற்சியை, கடினமானபணியை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் கேட்கிறேன், வீரமணி சொல்வது போல இப்படியெல்லாம் வெளியிட்டால் தவறாகப் பயன்படுத்தி விடுவார்கள் என்று கூறுகிறாரே;

பெரியாரை யார் தவறாகப் பயன்படுத்த முடியும். அதனுடைய எழுத்துக்களை திருத்தி விடுவார்கள், பதிப்பிக்கிறோம் என்ற பெயரில் மாற்றி விடுவார்கள் என்கிறார் வீரமணி.

அப்படி இருந்தால் நீங்கள் அம்பலப்படுத்துங்கள். உங்கள் கையிலுள்ள ஏட்டில் எழுதலாம். “பாருங்கள் பெரியார் எழுதியது ஒன்று, அவர்கள் வேறொன்றை காட்டுகிறார்கள்“ என்று.

மார்க்சு அவர்கள் தன்னை மார்க்சியவாதியாக அறிவித்துக் கொள்வதற்கு முன்னால் நிறைய எழுதிக்குவித்தார். கையெழுத்துப் படிகளாகவே அவையெல்லாம் இருந்தன. அதற்குப் பெயரே (Early Manuscripts) அதாவது, தொடக்கக்கால கையெழுத்துச் சுவடிகள்.

இன்றைக்கு பல ஆய்வாளர்கள் பிற்காலத்தில் மார்க்சியத்தோடு முரண்பட்டவர்கள் எல்லாம் உண்மையான மார்க்சியமே அந்தக் கையெழுத்துச் சுவடிகளில்தான் இருக்கின்றது. அவற்றை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பெரியாரைப் பற்றி எத்தனைக் கருத்துக்கள் வேண்டுமானாலும் வரட்டும், முட்டி மோதட்டும், இதுதான் பெரியாரியல் வாதம், விவாதம் அரங்கேறட்டும். அதற்கெல்லாம் அடிப்படையாக பெரியாருடைய படைப்புகள் அவருடைய எழுத்தில், மொழியில், சொல்லில், காலவரிசைப்படி வரவேண்டும்.

வீரமணி அவர்களே! நீங்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்டிருப்பதாலேயே மற்றவர்கள் வெளியிடக்கூடாது என்பதில்லை. நீங்கள் வெளியிடாதவற்றையும் வெளியிடலாம். நீங்கள் வெளியிட்டவற்றையும் மீண்டும் வெளியிடலாம்.

அய்யா ஆனைமுத்து அவர்கள் பல நூல்களை கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல ‘பெரியார் சிந்தனைகள்’ என்று மூன்று பெரிய தொகுப்பையும் கொண்டு வந்தார். அதற்கும் ‘குடிஅரசு’ தொகுப்பிற்கும் வேறுபாடு உண்டு. அது பொருள் குறித்த வரிசையிலே கொண்டு வரப்பட்டது. ஆனால், ‘குடிஅரசு’ காலவரிசைப்படி வருகிறது.
இதில் எல்லா வகையான சிந்தனைகளும் இருக்கும். அப்படிப்பட்ட நல்ல நூல் வருவது இன்றியமையாதது.பெரியார் ஒரு காலத்திலே சொன்னதற்கும், இன்னொரு காலத்திலே சொன்னதற்கும் முரண்பாடுகள் இருக்குமோ என்றெல்லாம் வீரமணி கவலைப்படு கின்றார்.

எங்களுக்கோ இன்றைக்கு கலைஞர் அவர்களைப் பற்றி வீரமணி எழுதி கொண்டிருப் பனவற்றையும், பேசிக் கொண்டிருப்பனவற்றையும், அன்றைக்கு ஜெயலலிதாவைப் பற்றி எழுதிக் கொண் டிருந்தவற்றையும் பேசிக் கொண்டிருந்தனவற்றையும் ஒரே தொகுதியாக நாங்கள் வெளியிட்டால் (சிரிப்பு, கைதட்டல்) முரண்பாடுகள் தெரியும். அதை நாமே கூட அவருக்காக வெளியிடலாம். (கைதட்டல்)

வீரமணி அவர்களை கேட்க விரும்புகிறேன், பெரியாரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பெரியார் காசிக்குப் போன நிகழ்ச்சி காட்டினீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் காட்டினீர்கள் என்றால் நமக்கு பெரிதும் வேதனையாக இருந்தது. சாதாரணமாக ஒரு குறியீட்டின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு செய்தி. எச்சில் இலையை பெரியார் வழித்துச் சாப்பிடுவதாக காட்டினீர்கள்.

நீங்கள் காட்டாமல் விட்டது 1938 ஆம் ஆண்டு மொழிப்போர் நிறைவடைகிற பொழுது சென்னைக் கடற்கரையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டாரே அதை நீங்கள் அடியோடு மறைத்து விட்டீர்கள். ஏன்? எச்சில் இலையை வழித்து சாப்பிடுகிற மாதிரி காட்டும் அளவுக்கு கலையதார்த்த உணர்வு இருக்கிறது.

ஆனால் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியதை நீங்கள் காட்ட மாட்டீர்கள். ‘குடிஅரசு’ தொகுதிகள் எல்லாம் வெளிவருமானால் பெரியார் கொள்கை எதுவென்று தெரிந்து விடும்.

வீரமணிக்கு கொள்கை கிடையாது. யுக்தி மட்டுந்தான் உண்டு. அந்த யுக்தியால் மட்டுமே தான் பெரியாரைப் பார்க்கிறார். தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொன்னதெல்லாம் கொள்கையல்ல, யுக்தி என்று வீரமணி அவர்கள் விடுதலை இராசேந்திரனுக்கும், எஸ்.வி. இராசதுரைக்கும் பதில் சொன்னதை நான் மறக்கவில்லை.

அது யுக்தியா கொள்கையா என்பதை பெரியார் எழுத்திலேயே படித்து தெரிந்து கொள்கிற வாய்ப்பு பெரியாருடைய ‘குடிஅரசு நூல்கள் வெளி வருகிறபோது நமக்கு கிடைக்கும்.

உருவமில்லாத பொம்மையல்ல பெரியார். உயிருள்ள பெரியாரின் கொள்கைகள் நமக்கு இன்றியமையாதது என்றால், பெரியாரின் சிந்தனைக் களஞ்சியம் நூல்களாக வெளிவரும் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு ‘குடிஅரசு’ தொகுப்பு வெளி வரும் என்பது உறுதி.

தமிழக அரசு வீரமணியை காப்பாற்றுவதற்காகவாவது (கைதட்டல்) பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். எங்களுக்காகக்கூட அல்ல.

இத்தனையும் மீறி குடிஅரசு நூல்கள் வெளியிடுகிறபொழுது வீரமணி என்ன செய்வார் பாவம். அந்த ஒரு காரணத்திற்காகவாவது இந்த நேரத்தில் உங்கள் நண்பர் வீரமணியைக் காப்பாற்றுங்கள். அவருக்கான நன்றிக் கடனை செலுத்துங்கள்.

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் பெரியார் நூல்கள் அரசுடையாக்கப் பட்டன என்ற அறிவிப்பு வரட்டும்.

பெரியார்வழியில் சமத்துவபுரம் கண்டவர், பெரியாருக்காக நீங்கள் நிறைய செய்திருக்கலாம். ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பெரியார் தன் வாழ்நாளில் தனி மனிதருக்கு சிலை வைக்க சொன்னார் என்றால் அது கலைஞருக்கு மட்டுந்தான்.

இன்றைக்கு நீங்கள் பெரியாருக்கு சிலை கூட வைக்க வேண்டாம். பெரியாரின் நூல்களை நிரந்தரமாக வரலாற்றிலே பதியச் செய்யுங்கள். வருங்கால தலைமுறைக்கு படிக்கக் கொடுங்கள். ஆய்வாளர்கள் அதைப் படித்து தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டட்டும்.

நன்றி: புரட்சி பெரியார் முழக்கம்

3 comments:

சந்திப்பு said...

பெரியாரை கார்ப்பரேட் சந்தையாக்கும் முயற்சிதான் வீரமணியுனுடையது. மொத்தத்தில் பெரியாரை இந்த கார்ப்பரேட் தாதாவிடம் இருந்து மீட்க வேண்டியது மானமுள்ள தமிழ்ச் சிந்தனைவாதிகளின் கடமையாகிறது.

சந்திப்பு said...

இது குறித்து என்னுடைய பதிவையும் வாசிக்கவும்.


http://santhipu.blogspot.com/2008/09/blog-post_05.html

தமிழகத்தின் சீரிய சிந்தனையாளர்களில் முன்னணியில் நிற்பவர் தந்தை பெரியார். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சமூக விடுதலை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்ற புரட்சிகரமான கொள்கைகளை தமிழகத்தில் துணிந்து பேசியும், எழுதியும், எதிர்ப்பு காட்டியும் களத்திலிறங்கி போராடியவர் தந்தை பெரியார்.

ஜாதிய சகதியில் மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழக மக்களை விடுவிப்பதில் பெரும் பாத்திரம் வகித்தவர். ஜாதி மறுப்புக்கு எதிராக தனது கருத்துக்களை துணிந்து கூறியவர். பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் தனது கருத்துக்களை கூறுவதற்கு என்றைக்குமே தயங்கியதில்லை.

இவரது சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றனர். இவரது சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததே திராவிடர் சித்தாந்தம்.

1925 - 30களில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலருடன் இணைந்து ஈரோட்டுப் பாதையை அமைத்து ஒரு சோசலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பயணித்தவர் பெரியார். பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். இந்த இரண்டு சிகரங்களும் ஒன்றிணைந்த புள்ளிகளும் - விலகிய புள்ளிகளும் சீர்தூக்கிப் பார்த்து. இன்றைக்கு பெரியார் இருந்திருந்தால் அவரது இலக்கு எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை நின்று நிதாணித்து சிந்திக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் இடதுசாரி முகாமிலேதான் இருப்பார். (இது கற்பனா வாதம் ஆகாது) பெரியாரிய சிந்தனையின் எதார்த்தம்.

அந்த அடிப்படையில் இன்றைக்கு பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட சித்தாந்தம் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு முனை மழுங்கிப் போய் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற புதிய சீரழிவிற்கு இட்டுச் சென்றது.

பெரியாருக்குப் பின் பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் பரவலான வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதற்கு மாறாக அவரது திராவிடர் கழகம் ஒரு கார்ப்பரேட் அலுவலகமாக மாறியதோடு, அவரது பெயரில் கல்லூரிகளைத் துவக்குவது, பெனிபிட் பண்ட் நடத்துவது, பெரியார் புறா நடத்துவது... என்று திசை மாறி அவரது கொள்கையிலிருந்து முற்றிலுமாக விலகி இன்றைக்கு வீரமணியின் சிந்தைக்குள் அடைப்பட்டு கிடக்கிறது திராவிடர் கழகம்.

பெரியாரின் கொள்கைகள் இன்றைக்கு மக்கள் மத்தியில் பேசப்படுவதில்லை. பெயருக்கு ஒரிரு மாநாடுகள் நடத்துவதும், பொதுக்கூட்டங்கள் நடத்துவமாக நின்று விடுகிறது. மேலும் தமிழகத்தில் ஆட்சியில் வரும் அதி்முக, திமுக என மாறி, மாறி தனது சொத்திற்கு பாதுகாப்பு தேடும் கழகமாக மாறிவிட்டது.

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்க வேண்டிய திராவிடர் கழகம் பல நேரங்களில் வெறும் அறிக்கையோடு நின்று விடுகிறது. அதற்கான களப்பணிகள் எதனையும் செய்வதில்லை.

இந்நிலையில் வீரமணியோடு கருத்து வேறுபாடு கொண்டு வேறு களம் கண்டு பெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல முனைந்திருக்கும் பெரியார் திராவிடர் கழகத்தின் மீது வழக்குத் தொடுப்பதும். பெரியாரின் கொள்கைகளை - கருத்துக்களை முழுக்க முழுக்க தனதாக்கிக் கொண்டு உரிமைக் கொண்டாடுவதும் பெரியாருக்கு இழைக்கும் துரோகமாக கருத முடிகிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உப்புச் சப்பில்லாத சொத்தை காரணம் மட்டுமே. அதாவது, யார் வேண்டும் என்றாலும் பெரியார் கருத்தை வெளியிடலாம் என்றுச் சொன்னால் அவரது கருத்தை திரித்து விடுவார்களாம்.

திரு வீரமணி அவர்கள் இதுவரை அப்படி எந்த வகையில் பெரியாரின் கருத்துக்களை அவரது எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள் திரித்திருக்கிறார்கள்? அல்லது வேறு யார் திரித்திருக்கிறார்கள் என்று உலகுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளார்.

மொத்தத்தில் ஒரு புரட்சிக்கரமான சிந்தனையாளரின் கருத்துக்களை கழகத்திற்குள் பூட்ட முனைவது பெரியாரின் சுதந்திர கொள்கைக்கு எதிரானது. எனவே தமிழக மக்கள் பெரியாரின் கருத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைக்க வரவேண்டும். அப்போதுதான் பெரியாரையே நாம் மீட்க முடியும். பெரியாருக்கு சிலை வைத்தால் போதாது அவரது சிந்தனையை விதைக்க வேண்டும் அதுவே தமிழகமும் - இந்தியாவும் எதிர்பார்க்கிறது. அதற்கு தடையாக இருக்கும் சக்திகள் பெரியாரிய எதிர் சிந்தனை சக்திகளே!

இணையத்தில் திராவிடம் பேசுபவர்கள் - அல்லது பெரியார் பெயரை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் இதுபற்றி சிந்திப்பார்களா? செயல்படுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்! அது வரை பெரியாரை மீட்கும் சக்திகளுடன் துணை நிற்போம். இணையத்தில் இதற்காக தமிழச்சி அவர்கள் சிறப்பான போராட்டத்தை தொடுத்து வருகிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

விரைவில் இணையத்தில் "பெரியார் சிந்தனை மீட்பு கழகம்" ஏதாவது ஒன்று உருவானால் நாட்டுக்கு நல்லது என்று முடிக்கிறேன்.

அரியாங்குப்பத்தார் said...

பெரியாரையும், பெரியார் திடலையும், பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தையும் அதன் சொத்துக்களையும் தமிழர்களின் நன்மைக்காக வீரமணியிடமிருந்து மீட்க தமிழர்கள் அனைவரும் விரைந்து பணியாற்றவேண்டும்