Wednesday, October 22, 2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மாணவர்களின் தொடர் போராட்டம்

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதை கண்டித்தும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16.10.2008 அன்று புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதை உடனே நிறுத்தக்கோரி இந்திய தலைமை அமைச்சருக்கு தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்பினர்.

17.10.2008 அன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாகூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

20.10.2008 அன்று புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு நடுவம், சமுதாயக் கல்லூரி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளி, அரசு தொழில்நுட்ப மேநிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்து இலாசுப்பேட்டை கூட்டுப்பாதையில் ஒன்றுகூடினர். மாணவர்கள் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி சிங்கள அதிபர் இராசபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து எழுச்சியாக நடைபெறுகிறது.

2 comments:

Anonymous said...

நன்றிகள் பல...

Anonymous said...

Good News Friend.