Wednesday, July 30, 2008

வங்கி சேவைப் படிவங்கள் தமிழில் வழங்கவேண்டும்: ரிசர்வ் வங்கி ஆணை

வங்கிகளின் பல்வேறு சேவைகள், திட்டங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழில் விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் வணிக வங்கிகளை சாதாரண மக்கள் எளிதில் அணுகி, பல்வேறு சேவை வசதிகளை தயக்கம் இன்றி எளிதில் பெறச் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது. தற்போது இதுகுறித்து வழிகாட்டும் கையேடுகளை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விண்ணப்பங்களையும் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்பட வட்டார மொழிகளில் புரியும் வகையில் வெளியிட வேண்டும்.

கணக்குகளைத் தொடங்கவும், பணம் செலுத்தவும் தினமும் பயன்படுத்தும் படிவங்கள், சேமிப்புக் கணக்குப் புத்தகங்களையும் மும்மொழிகளிலும் வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளர் குறித்த பல்வேறு விவரங்களை மிகவும் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும். தனியார் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது.

பண பரிமாற்றம் குறித்த முழு விவரங்களையும் வாடிக்கையாளரின் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். கணக்குப் புத்தகம், மாத கணக்கு அறிக்கையை இலவசமாக வங்கிகள் வழங்க வேண்டும்.

கடன் அட்டைகள் வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான விதிமுறைகள் குறித்து தமிழில் வெளியிட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கான சேவை தொடர்பாக மேலும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நன்றி: தினமணி, 30.07.2008.

No comments: