Thursday, December 11, 2008

தாய் மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்-விஞ்ஞானி ம.அண்ணாதுரை

நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது.

இதில் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவின் சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது. நமது நாடு 2020ல் வல்லரசு ஆகும் என அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரது ஆசை அதற்கு முன்பே நிறைவேறும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சந்திராயன்-1.

நிலவுக்கு சென்ற எந்த நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றது இல்லை ஆனால் இந்தியா தான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது.

நாம் விழித்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் அது. தற்போது நமது இளைஞர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் தங்களையும் உயர்த்தி கொள்ள வேண்டும்.

வேலைக்காக அமெரிக்கா செல்லும் நிலையை மாறி சுற்றுலா செல்ல மட்டுமே அமெரிக்கா என்ற நிலைவரும். சந்திராயனின் வெற்றி முடிவல்ல துவக்கம் தான்.

பெட்ரோல் தங்கம் போன்றவை மட்டும் ஒரு நாட்டின் செல்வம் அல்ல. மனிதவளம் தான் நாட்டிற்கு மிகப் பெரிய செல்வம்.

நமக்கு அந்த செல்வம் அதிகமாக உள்ளது. நமது மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக சாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

குழந்தைகள் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள் அவர்களின் விருப்பப்படி விரும்பும் துறையில் படிக்க வையுங்கள். எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் முதல் இடத்தை பெற வேண்டும். எல்லோரும் எல்லா துறைகளிலும் முதல் இடத்தை பிடித்தால் இந்தியா எளிதில் முன்னேறிவிடும்.

இந்தியாவை கொலம்பஸ் தேடிய போது கிடைத்தது தான் அமெரிக்கா, பல நாட்டினரின் உழைப்பால் உயர்ந்தது தான் அமெரிக்கா.

இந்தியாவின் கல்பனா சாவ்லா, வில்லியம்ஸ் போன்றோர் அங்கு சென்று சாதித்ததை இங்குள்ள நம்மால் சாதிக்க முடியாதா ? முடியும் என்பது தான் சந்திராயன்.

தாய் மொழியில் படித்தால் மன இருக்கம் குறையும். முதல் 5 வருடங்கள் குழந்தைகளை தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்.

விரக்தி அடைந்த இளைஞர்கள் கூட்டம் தான் வன்முறையை நாடுகிறார்கள், எங்கோ,எதிலோ கிடைத்த ஏமாற்றம் தான் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுகிறது. இது போன்ற செயல்கள் பலம் மிக்க நமது நாட்டை தடுமாற வைத்துவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி: தமிழ்முரசு

8 comments:

Sathis Kumar said...

//தாய் மொழியில் படித்தால் மன இருக்கம் குறையும். முதல் 5 வருடங்கள் குழந்தைகளை தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்.//

முற்றிலும் உண்மை, வழிமொழிகிறேன்..

சுப.நற்குணன்,மலேசியா. said...

தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கும் அறிவியலாளர் ம.அண்ணாதுரை அவர்களின் இந்தச் செய்தியைப் படிக்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது.

எங்கள் நாட்டில் கணிதம் அறிவியல் பாடம் 6 ஆண்டுகளுக்கு முன்புவரை தாய்மொழியில்தான் (தமிழ் உள்பட) பயிற்றுவிக்கப்பட்டது.

2003 தொடங்கி ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.

இப்போது மீண்டும் தாய்மொழிக்கே மாற்ற வேண்டுமென மலாய்க்காரர், சீனர், தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

எங்கள் நாட்டின் சூழலுக்கு இந்தச் செய்தி பெரும் பயனாக உள்ளது.

இதனை எங்கள் நாட்டு அரசியலாளர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய 'திருத்தமிழ்' வலைப்பதிவில் பதிவு செய்துள்ளேன்.

நன்றி!

அரியாங்குப்பத்தார் said...

தமிழ்நாட்டில் இது பற்றி பேசுவதற்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.
செயல்படுத்தத்தான் யாரும் இல்லை.

தமிழ்நாடு அரசுக்கும் புதுச்சேரி அரசுக்கும் தாய்மொழி வழிகல்வி பற்றி எந்தவித புரிதலும் இல்லை.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் தமிழன் மேன்மையடைய இதுபோன்று ஆக்கப்பணிகளைப் பற்றி சிந்திப்பதே இல்லை.

தாய்மொழி வழிக்கல்வியை மக்களுக்கு கொடுக்காத எந்த அரசாக இருந்தாலும் அது மக்களை ஏமாற்றும் அரசுதான். மக்கள் சிந்தனையற்ற அடிமைகளாக இருப்பதையே இந்திய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க.

தாய்மொழிக் கல்வியில் பாடங்களைக் கற்கின்ற போதுதான் மாணவர்களால் எளிதில் கற்றுக் கொள்ள முடியும். வாழ்க தமிழ்.

கோவி.மதிவரன் said...

வணக்கம் வாழ்க

தாய்மொழியில் கல்வி கற்கின்ற போது மாணவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். வாழ்க தமிழ்.

அரியாங்குப்பத்தார் said...

ஆம். இக்கருத்து கல்வியாளர்களாலும், அறிஞர் பெருமக்களாலும், அறிவியலாளர்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இக்கருத்தை காதில்வாங்கி செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமே உள்ளது.

ஆனால் அரசிடம் இக்கோரிக்கையை வைக்கவும், இக்கோரிக்கையை நிறைவேற்ற தயங்குகிற அரசை எதிர்க்கவும் அனைவரும் தயங்குகிறோம்.

தமிழின உணர்வாளர்கள் பலர் தன் ஆயுள் முழுவதும் போராடி பார்த்து பலர் மாண்டுவிட்டனர். மக்களைப் பற்றி சிந்திக்கும் தலைவர்கள் ஒருசிலரே எஞ்சியுள்ளனர். அவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிதான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட நல்ல கோரிக்கைகளை மக்களும் கவனிப்பதில்லை ஆட்சியாளர்களும் ஏற்பதில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் கல்வி வியாபாரத்திற்கும் உள்ள உறவே இதற்கு தடையாக உள்ளது.

நாம் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி?

நா. கணேசன் said...

நண்பரே,

நிலவூர்தி என்னும் பொருள்தரும் சந்திரயான்
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html
சந்திராயன் என்பது சரியல்ல.

நன்றி!

அரியாங்குப்பத்தார் said...

“நிலவூர்தி” என்னும் சொல்லே சிறப்பாக உள்ளது.

தமிழன் நிலவுக்கு ஊர்தி அனுப்பும் போது “நிலவூர்தி” என்னும் சொல்லை எடுத்தாளலாம்.

தகவலுக்கு நன்றி!