Tuesday, March 10, 2009

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திடம் பிரான்ஸ் துணைத் தூதுவர் உறுதி

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திடம் பிரான்ஸ் துணைத் தூதுவர் உறுதி

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட் உறுதியளித்துள்ளார்.


இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக மனு அளிக்கச் சென்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்களிடம் அவர் இந்த உறுதிமொழியை அளித்தார்.

இலங்கையில் போரை நிறுத்துவதற்காக போராடி வரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் முனைவர் இராமதாஸ், சட்டப்பேரவை உறுப்பினர் அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ந.ரா.கலைநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமார், பாரதிய ஜனதா கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் புதுச்சேரியில் உள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட்டை சந்தித்து உரையாற்றினர்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து அவரிடம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் விரிவாக விளக்கினர். ஈழத் தமிழர் நலனில் அக்கறை செலுத்தி வரும் பிரான்ஸ் அரசு இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மனுவையும் அவர்கள் அளித்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட், இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு, அதனால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்ததாகப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரியும், அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரியும், மருத்துவமனையில் மருத்துவம் பெறும் அப்பாவித் தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரியும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும், ஐரோப்பிய கூட்டணி நாடுகளும், பிரான்ஸ் நாடும் சேர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். ஈழத் தமிழர்களுக்கு உலக நாடுகளில் அதிகம் பாதுகாப்புக் கொடுத்த நாடு பிரான்ஸ் நாடு. இதற்குக் காரணம் புதுச்சேரியில் தமிழ் மக்களுடன் பிரான்ஸ் நாடு அதிக நெருக்கத்தைக் கொண்டுள்ளதுதான். தமிழின மக்கள் இலங்கையில் வாழ்வதால் தான் அவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு அளித்தனர். இதன் அடிப்படையிலியே பிரான்சிடம் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம் என்றும் வைகோ தெரிவித்தார்.

இலங்கை இனப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இரண்டு முறை விவாதம் நடைபெற இருந்தது. ஆனால் சீனாவும், ரசியாவும் அந்த விவாதத்தை தடுத்து நிறுத்திவிட்டனர். இதற்குக் காரணம், இந்திய அரசின் தூண்டுதல்தான் என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்ற வகையில் பிரான்ஸ் அரசு அனைத்துலக அளவில் செல்வாக்கு பெற்றிருக்கிறது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிலையான உறுப்பினர்களில் பிரான்சும் ஒன்று என்ற முறையில், போரை நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் சபை மூலமாக பிரான்ஸ் வலியுறுத்த முடியும். எனவேதான் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரான்சிடம் வலியுறுத்துகிறோம் என்று பிரான்ஸ் துணைத் தூதுவரிடம் பாட்டாளி மக்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவர் முனைவர் இராமதாஸ் கூறினார்.

நன்றி புதினம்.காம்

No comments: