Tuesday, March 31, 2009

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் முதல்வர்: நெடுமாறன் கண்டனம்

ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழீழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வருக்கு, இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களவர் என்பதும், 30 சதவீதமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாதா?

ஈழத் தமிழரிடையே வாக்கெடுப்பு என்று கூறாமல் இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவது பிரச்சினையை வேண்டுமென்றே குழப்புவதாகும்.

1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ பிரச்சினை முன்வைக்கப்பட்டு மிகப்பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் தமிழீழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழீழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் கருணாநிதியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

No comments: