Monday, March 16, 2009

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களை தோலுரித்துக் காட்டுவோம்: பழ.நெடுமாறன்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுச்சேரியில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தோலுரித்துக் காட்டுவோம் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 48 நாள்களில் பல ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மக்கள் திரள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆறரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதித்து நடக்கிறோம். இதுவரை 11 இளைஞர்கள், உயிரை துச்சமென மதித்து தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்திய அரசு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் தர வேண்டும் என்றா கேட்கிறோம். யுத்தத்தை நிறுத்தச் சொல்கிறோம். பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போரை நிறுத்தச் சொல்லியிருந்தால் போர் நிறுத்தப்பட்டு இருக்கும்.

1983-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மூவாயிரம் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தில்லி செங்கோட்டையில் இந்திரா காந்தி தேசியக் கொடி ஏற்றி விட்டு இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இருக்காது என்றார். இதைக் கேட்ட ஜெயவர்த்தனே தில்லிக்கு வந்து விட்டார்.

இந்திராகாந்தியிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. இதை மன்மோகன்சிங்கிடம் எதிர்பார்க்க முடியாது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சொல்கிறார் பிரணாப் முகர்ஜி.

இந்திராகாந்தி வழங்கிய ஆயுதங்கள்தான் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இந்த உண்மை காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியாது. அவர்களுக்கு உலக வரலாறும், இந்திய வரலாறும் தெரியவில்லை. காங்கிரஸ் வரலாறும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பாரம்பரியம் உண்டு. மிகப் பெரிய தலைவர்கள் தியாகம் செய்து வளர்த்த கட்சியாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மனிதாபிமான அடிப்படையில் கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை. உள்துறை அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் பிரதமருக்கு அடுத்த பொறுப்பில் இருப்பவர். அவர் சென்னையில் பேசும்போது தமிழர்களுக்கு ஆறுதலாக 4 வார்த்தை கூறுவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் மாறாகப் பேசியுள்ளார். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில் இலங்கைப் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை, அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்.

காங்கிரஸ்காரர்கள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதை தமிழ் இதயங்கள் மன்னிக்காது. இதற்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ளவர்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் 48 நாட்கள் மக்களை ஒற்றுமையாகச் சந்தித்து வருகிறோம்.

தேர்தல் வரும் போகும். வரப்போகும் தேர்தல் களத்தை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றுவோம். யார் யார் துரோகம் செய்தார்கள் என்று தோலுரித்துக் காட்டுவோம் என்றார் அவர்.

நன்றி தமிழ்வின்.காம்

No comments: