Wednesday, March 4, 2009

இலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குறித்து கவலைப்பட மாட்டேன்: திருமாவளவன்

இலங்கை தமிழர் பிரச்சினையே முக்கியம், நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. கூட்டணி குறித்து நான் கவலைப்பட மாட்டேன். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தமிழக மக்களை தட்டி எழுப்பும் வகையில் நாம் தமிழர் நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வாலாஜாபாத்தில் நாம் தமிழர் நடைப்பயண நிகழ்ச்சி தொடக்க விழா புதன்கிழமை நடக்கின்றது.

மாவட்டச் செயலர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் த.பார்வேந்தன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் அம்பேத்கர் வளவன், சோகன்பிரபு, கராத்தே பாண்டியன், முன்னிலை வகித்தனர்.

மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சி.இ. சத்யா, மாவட்டச் செயலர் பாலவாக்கம் சோமு, பாமக எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கே.ஆறுமுகம், ஒன்றியக் குழுத் தலைவர் பரந்தூர் சங்கர், பாசறை செல்வராஜ், மக்கள் மன்றம் மகேசு, இளைஞர் எழுச்சி இயக்கம் காஞ்சி அமுதன் வாழ்த்திப் பேசினர்.

திருமாவளவன் பங்கேற்று பேசியது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கள் நடந்தன. மேலும் தற்போது அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் போராடி வருகிறோம்.

இலங்கை தமிழர் பிரச்சினையின் தீவிரத்தை சாதாரண பொதுமக்கள், பாமர மக்களை உணரச் செய்யும் வகையில் நாம்தமிழர் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 800 குழுக்கள் இதில் கலந்து கொள்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 8 நகரங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை தான் எனக்கு முக்கியமே தவிர, நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. கூட்டணி குறித்து நான் கவலைப்பட மாட்டேன்.

மத்தியில் காபந்து அரசு இருந்தாலும், அதிகாரிகள் மனது வைத்தால் இலங்கை பிரச்னையை தீர்க்க முடியும் என்றார் திருமாவளவன்.

வாலாஜாபாத்தில் நாம் தமிழர் நடைப்பயணத்தை பாவலர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். 20 கி.மீ. தூரம் வெங்குடி, ராஜாம்பேட்டை, கருக்குப்பேட்டை, ஐயம்பேட்டை வழியாக காஞ்சிபுரத்தில் நடைப்பயணம் முடிவடைகிறது.

மாலையில் வணிகர் வீதியில் பொதுக் கூட்டம் நடக்கிறது.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காஞ்சிபுரத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் நடைப்பயணம் நிறைவடைகிறது.

நன்றி: தமிழ்வின்.காம்

No comments: