Thursday, March 12, 2009

த‌மி‌ழின‌த் துரோ‌கி கருணா‌நி‌தி : ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று

தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, தன்னுடைய அறிக்கையின் மூலம் தான் ஒரு "தமிழினத் துரோகி' என்பதை நிரூபித்து விட்டார் எ‌ன்று அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல்'; "பிரதமருக்கு தந்தி'; "இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி, என்னுடைய அறிக்கையை நகைச்சுவை என்று கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றவுடன், ஒரே நாளில் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து, அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது சாத்தியமா? என்று தன்னுடைய அறிக்கையில் வினவியிருக்கிறார் தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்ற அறிவிப்பு 5.3.2009 அன்றே வெளிடப்பட்டு விட்டது. அதற்கான ஏற்பாடுகளை மூன்று, நான்கு நாட்களில் மத்திய அரசு தாராளமாக செய்யலாம். அனைத்தையும் தெரிந்திருந்தும், ஒன்றும் தெரியாதது போல் நடிக்கும் கருணாநிதியை என்னவென்று சொல்வது?

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக மத்திய அரசு ஆயுதங்களையும், அதிநவீன சாதனங்களையும் அளித்த போதும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்த போதும் வாய்திறக்காத கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க அருகதை இல்லை என்பதை முதலில் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏதோ இரண்டு இடங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதை வாழ்த்தியதாக தெரிவித்துள்ள கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்க ஒத்துழைப்பு கொடுத்ததற்காக தமிழக மக்கள் கருணாநிதியை விரட்டி அடிக்கத் தயாராகி விட்டார்கள் என்பதை உணரவில்லை போலும்!

தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ, வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தத் தொகையையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக் கூட தெரிந்துகொள்ளாமல் நான் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதியினுடைய அறிக்கையின் வரிகளைப் பார்த்தால், அ.இ.அ.தி.மு.க சார்பில் திரட்டப்பட்ட நிதி இலங்கைத் தமிழர்களை சென்றடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. நல்லது செய்வதைக் கெடுப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதி தான். கருணாநிதியின் தீய எண்ணத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். "வில்லன்' கருணாநிதியின் வேடம் கலைந்துவிட்டது. எனக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் எதிராக கருணாநிதி ஏற்படுத்திய எத்தனையோ தடைகளை நான் முறியடித்திருக்கிறேன்.

அந்த வகையில், இந்தத் தடையையும் நான் முறியடிப்பேன் என்பதை கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, அ.இ.அ.தி.மு.க.வால் திரட்டப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான நிதி முறையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.

தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் தான் செய்த துரோகத்தை மறைக்க என்னை வசைபாடி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, தன்னுடைய அறிக்கையின் மூலம் தான் ஒரு "தமிழினத் துரோகி' என்பதை நிரூபித்து விட்டார். துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை " எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

(மூலம் – வெப்துனியா)

1 comment:

Anonymous said...

இந்த அறிக்கைக்கு பதிலாக நாளையே வழவழா கொழகொழா வென்று புலம்பி ஒரு அறிக்கையை வெளியிடுவார்.

அதில் ஈழத்தமிழருக்கு ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறேன் என்று அவரே சொல்லியிருக்கிறாரா என்பதை தேடினால் அவரது தி.மு.க.காரனுக்கே ஒரு புண்ணாக்கும் வெளங்காது.