Tuesday, March 24, 2009

போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது: அமைச்சர் நிமால்

இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததேயில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒத்துழைப்புக் காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவு முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்புக்கு ஏற்ப இலங்கை அரசியல் நகர்வை மாற்றியமைக்க முடியாது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் நிமால் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகபெரும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆகியோரே இவ்வாறு கூறினர்.


அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா இது தொடர்பாகக் கூறியவை வருமாறு:

இந்தியாவின் தலையீட்டுடன்தான் 13ஆவது திருத்தச்சட்டம் இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி அதிகாரப் பகிர்வு என்ற இந்தியாவின் ஆசை அப்போது இந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது நிலைமைவேறு.

இலங்கையில் யுத்தம் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. அதற்கான உதவியையும் அது எமக்குச் செய்கின்றது. ஆனால், எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் எமக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.

இந்தியா எமக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அந்நாடு மருந்துப் பொருள்களையும் வைத்தியர்களையும் எமக்குத் தந்துள்ளது. இன்னும் உதவ முன்வந்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திங்கட்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினார். பல உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா தயராக இருப்பதாக தூதுவர் என்னிடம் கூறினார் என்றார்.


ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுயதாவது:

இந்தியா எமது யுத்த நடவடிக்கையை ஏற்றுள்ளது. எமது படையினர் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் அதேவேளை, அப்பாவி மக்களையும் காப்பாற்றுகின்றனர் என்றார்.
யுத்தம் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் எமது படையினர் போல் மனிதாபிமானத்துடன் எவரும் செயற்படுவதில்லை. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இதை நன்கு விளங்கி வைத்துள்ளன. அவை ஒருபோதும் யுத்தத்தை நிறுத்த முற்படமாட்டா என்றார்.


அங்கு வைத்து விமல் வீரவன்ஸ கூறியவை வருமாறு:

இந்தியா நினைத்தால் யுத்தத்தை நிறுத்தவும் முடியும். அதைத் தொடர வைக்கவும் முடியும். ஆனால், இது தொடர்பில் இந்தியா எமக்கு எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. இது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

அதேவேளை, நாம் ஏனைய நாடுகளின் தேவைக்கு ஏற்ப எமது அரசியல் நடத்தைகளை மாற்றியமைக்க முடியாது.

அரசியல் நடத்த வேறு கோஷம் எதுவும் இல்லாதவர்களே இந்தியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்திய வைத்தியர்கள் இங்கு வந்தமை பிழை என்கின்றனர் என்றார்.

நன்றி: தமிழ்வின.காம்

1 comment:

ttpian said...

நாம் தமிழர்கள்!
எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!
சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!