Wednesday, October 22, 2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மாணவர்களின் தொடர் போராட்டம்

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதை கண்டித்தும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16.10.2008 அன்று புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதை உடனே நிறுத்தக்கோரி இந்திய தலைமை அமைச்சருக்கு தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்பினர்.

17.10.2008 அன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாகூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

20.10.2008 அன்று புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு நடுவம், சமுதாயக் கல்லூரி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளி, அரசு தொழில்நுட்ப மேநிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்து இலாசுப்பேட்டை கூட்டுப்பாதையில் ஒன்றுகூடினர். மாணவர்கள் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி சிங்கள அதிபர் இராசபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து எழுச்சியாக நடைபெறுகிறது.

Thursday, October 9, 2008

இனமொழிப் பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்!

பெரியார் பேரனுக்கு இழைக்கப்பட்ட அநீதி!முதல்வருக்கு உருக்கமிகு கடிதம்
"முதல்வருக்கு வணக்கம்.

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை" என்ற நிலையற்ற இவ்வுலகில் தன்னுடைய இருத்தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் மனிதனின் விண்ணப்பம். மீண்டும் மீண்டும் என்னுடைய பின்னணி குறித்துக் கூறுவது, தங்களுக்குச் சலிப்பூட்டுவன. என்றாலும் தேவையின் பொருட்டுக் கூறுகிறேன், பொறுத்தருள்க.

அய்யா, நான் பெரியாரின் கொள்கைவழிப் பெயரன். பகுத்தறிவு என் பாதை; அதுவே என்னுடைய இன்றைய நிலைக்கு முதல் காரணமும் கூட. அடுத்து... நான் மொழி, இனப்பற்றாளன். தொப்பூழ் கொடி உறவாம் தமிழீழ மக்கள் படும் இன்னல் கண்டு, இதயம் நொந்தவன். உலகத் தமிழரைப் போல் என்னால் இயன்றதை அவர்களுக்கு இயல்பாகச் செய்தவன். என்னைக் கொலைக் களத்தில் நிறுத்த இந்த காரணங்கள் போதுமானதாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன்... கொலையாளன் அல்ல. இதனை என்னுடைய "தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற நூல் வடிவிலான வாதுரை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

"தடா" சட்டம் என்ற கொடுங்கருவி குறித்துத் தாங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். அந்த ஆட்தூக்கிச் சட்டம், குற்றமற்ற பலரையும் விலங்கினைப் பூட்டி சிறைக் கொட்டடியில் தள்ளிய வரலாற்றினை உணர்ந்தவர் தாங்கள்! அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே அளவில் அச்சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கைவிரித்து வந்த கயவர்கள், பொய்விரித்துப் புலன்கள் மறைத்து, எம்மைக் கொலை யாளியாக்கிய உண்மை உணராதவர் அல்ல தாங்கள்!

மற்றபடி, பிற "தடா"வினருக்கும் எனக்குமுள்ள பெருத்த வேறுபா டெல்லாம், அவர்கள் மீது நல்வாய்ப்பாக முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக அதனினும் சிறிய அளவிலான கொலைக் குற்றங்களில் தொடர்பு படுத்தப்பட்டார்கள். அடுத்து, எனக்குக் கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் இழைத்த பெரும்பிழைகள்.

அய்யா... கட்சி நம்பிக்கை துளியும் அற்றுப்போன மனிதனாக மெள்ள மெள்ள சாவை நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனாக இம்முறையீட்டு மனுவினை எழுது கிறேன். ஏனெனில் இனத்தின்பால், மொழியின்பால் பற்றுக்கொண்ட ஓர் இளைஞன், தன்னுடைய கடுமையான உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால் தமிழர் தம் தலைமையேற்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள "நெஞ்சுக்கு நீதி" அதற் கான விடை பகிர்கிறது. அதன் நாற்பத் தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள் கூறியவற்றை தங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்கு பொறுத்தருள்க.

"இருபது ஆண்டு சாதாரண மானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்துவிடுகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட மனிதனாகத் தான் அவனை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை.

வாலிபத்தைக் கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால், வாழ்வின் சுகத்தை இனிமேல் அனுப விக்க முடியாது என்ற பருவத்தில் சக்கை மனிதனாக அவனை சிறைச்சாலை வெளியே உமிழுகிறது. ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்!"

ஆம், அய்யா...! பதினெட்டு ஆண்டு சிறைவாசம்... அதிலும் தனிமைச் சிறைச்சாலை. இதனினும் கொடியதாக எவ்வித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம்... இவை யெல்லாம் சிறிய துன்பங்களே எனக் கூறும் அளவிற்கு சாவின் நிழலில்தான் வாழ்வே நகர்த்தவேண்டும். அய்யா, கற்பனை செய்ய முடிகிறதா தங்களால்? கற்பனை எல்லைகளுக்கு அப்பாற் பட்டது எம்முடைய துன்பம். அதன் பின்னரும் இம்மனுவினை நல்ல மனநிலையோடு என்னால் எழுத முடிகிறதென்றால், நீதியின் பால் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், கொள்கை எனக்களித்த மன உறுதியுமே காரணங்கள்.

அய்யா, அன்றாடம் எத்தனையோ மனுக்கள் தங்கள் மேசையில் வந்து விழும். எதனையோ எதிர்பார்த்து ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு பல கோரிக்கைகளை முன்வைக்கும் அதுபோன்ற மற்றுமொரு மனுவல்ல இது.

உள்ளபடியே எவ்விதக் குற்றமும் புரியாமல், செய்யாத குற்றத்துக்காகப் பிழைபட்டுப் போன நீதியின் விளைவால் வாழ்வின் பதினெட்டு ஆண்டு கால வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன்.

"யாருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம்!" என்றீர்கள். மகிழ்ந்து போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது "ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங் களை கிழித்து விடாதீர்கள்" எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். "மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்கு கூடாது" என்றீர்கள். வியந்திருக் கிறேன். அண்மையில் "பாகிஸ்தான் சிறை யில் வாடும் சரப்ஜித்சிங் தூக்கினைக் குறைக்க உலக நாடுகள் குரல் எழுப்ப வேண்டும்" என வேண்டுகோள் விடுத் தீர்கள். தங்களுடைய உள்ளக்கிடக் கையைப் புரிந்து, பெருமை கொண்டேன்.

ஆனால் அய்யா... வேதனை யோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்பு வதெல்லாம் பிறகேன் எம்முடைய தூக்கினை மாற்றத் தயங்குகிறீர்கள்? எம்முடைய வழக்கில் "நால்வரையும் தூக்கிலிடுவதில் தனக்கோ தன்னுடைய புதல்வர்களுக்கோ விருப்பமில்லை!" என திருமதி. சோனியா அம்மையார் கூறிய பின்னரும். ஏன் என்னுடைய தூக்கி னைக் குறைக்க முடியவில்லை? திருமதி நளினி அவர்களின் தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள், மகிழ்ச்சி, அவருக்குத் தூக்கினைக் குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால் அதை விடக் கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதைத் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அய்யா, இனியும் நான் தூக்கினைக் குறைக்கும் வேண்டுதலோடு என்னுடைய முறையீட்டைத் தங்கள் முன் வைக்கத் தயாரில்லை. எனக்கு விடுதலை வேண்டும். ஒரு ஆயுள் சிறை வாசியைக் காட்டிலும் கூடுதலான துன்பத்தினைக் கண்டுவிட்டேன். எனவே எனக்கொரு முடிவு, என்னுடைய நிலைக் கோர் முற்றுப்புள்ளி விழவேண்டும்.

"காந்தியடிகள் நூற்றாண்டை ஒட்டி 12-11-68க்கு முன்பு மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டதன் விளைவால் 111 கைதிகள் தூக்கிலிருந்து தப்பினர்" என்ற வரலாற்று நிகழ்வைத் தாங்கள் நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டினையொட்டி மீண்டும் அவ்வரலாற்று நிகழ்வு புதுப்பிக்கப் படவேண்டும் என விரும்புகிறேன்.

ஏனெனில், கடந்த 18 ஆண்டு களாக "தம்முடைய வாழ்வே என்னை மீட்பதுதான்" என சலிக்காது போராடி வரும் என்னுடைய பெற்றோரின் முதுமை தரும் அச்சம் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக என்னுடைய கடமையை செய்யத் தவறி யிருந்தாலும், குறைந்தளவு, என்னுடைய நிலையால் அவர்கள் இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வுகாணவே ஆசை கொள்கிறேன்.

அய்யா, 18 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தூக்கு நிறைவேற்றப் பட்டிருக்குமானால், இன்று என்னுடைய பெற்றோர் தம்முடைய மற்ற பேரப் பிள்ளைகளோடு தன்னுடைய இனி மையைக் கண்டிருப்பர். குறைந்தளவு, தாங்கள் என்னுடைய கருணை மனு வினை தள்ளுபடி செய்த 25-04-2000 அன்று என்னைத் தூக்கிலிட்டிருந்தாலும் இன்று என்னைப் பற்றிய துன்பம் என்னுடைய பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் ஆட்கொண்டிருக் காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை; என்னுடைய பெற்றோருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை. இரண்டுமற்ற இந்த நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

திருமதி. பிரியங்கா, திருமதி நளினி ஆகியோர் சந்திப்பு அதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்களெல்லாம் எம்முடைய துன்பத்தை எதிரொலிப்பதாக உள்ளது. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடிவு கிட்டவில்லையானால், விடுதலை பிறக்கவில்லையானால்... இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை.

வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ... தற்போது இறுதிசெய்யப்பட்டாக வேண்டும். பேரறிஞர் அண்ணா நூற் றாண்டில் பெரியாரின் பேரப்பிள்ளை யொன்று நீதிபெற்றது என்ற வரலாறு எழுதப்படட்டும் அல்லது இனமொழிப் பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்.

வேதனை மிகுந்த இந்த நீண்ட நெடிய 18 ஆண்டு சிறைவாசம் முற்றுப் பெற துணை புரியுங்கள். ஓர் உண்மை மனிதனின் உயிர்ப் போராட்டத்துக்குக் கொள்கையாளனின் மனக்குமுறலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், முடிவுரை எழுதுங்கள்!

தங்கள் உண்மையுள்ள
(அ.ஞா. பேரறிவாளன்)
நன்றி: தென்செய்தி