Wednesday, December 31, 2008

இனிய அடிமைகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

உலகெங்கும் பரவியிருக்கும்
ஆங்கிலேயர்களுக்கும்,
அவர்களின் அடிமைகளுக்கும்,
ஆங்கிலேயர்களாக வாழத்துடிப்பவர்களுக்கும்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday, December 28, 2008

தமிழீழ விடுதலைக்கு உலக நாடுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள்

இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அமைந்தகரை புல்லா அவென்யுவில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.



பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி ஆனந்தன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நடிகர் மன்சூர் அலிகான் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

கட்சி கொடியை ஏற்றி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையை திருமாவளவன் தொடங்கிவைத்தார். அப்போது, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில பொறுப்பாளர்கள் கொடி வணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் 'எகிறிப்பாய்', 'கட்டறுந்த புயல்' ஆகிய இறுவட்டுக்கள் இரண்டு வெளியிடப்பட்டன. ஜி.கே.மணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட, கவிஞர் காசி ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி உரையாற்றியதாவது:

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பெறுவதற்காக இந்த இளைஞர் பாசறை செயற்பட வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்தை உணர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எடுத்துக்கூறும் வகையில் தமிழர் ஒருவரை இந்தியத் தூதுவராக அமர்த்த வேண்டும்.
தமிழீழத்தை அங்கீகரிக்க இந்திய அரசு முன்வர வேண்டும். கடந்த ஆண்டில் மட்டும் 700 முறை தமிழர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் குண்டுகள் வீசியுள்ளது.

ஒரு நாளைக்கு 1,000 தொன் குண்டுகள் வீசப்பட்டு அப்பாவித் தமிழர்கள் தவித்து வருகின்றனர் என்றார் ஜி.கே.மணி.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உரையாற்றியதாவது:

இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பது வேறு, யதார்த்தம் வேறு. போரை நிறுத்த வேண்டுமென கலைஞர் தலைமையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை புலிகள் ஏற்கிறார்கள். சிறிலங்கா அரசு மறுக்கிறது. இதுதான் யதார்த்தம். ஆங்கில நாளேடு நடத்திய கருத்துகணிப்பு ஒன்றில் 80 விழுக்காடு மக்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்துள்ளனர். இந்த யதார்த்ததை புரிந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார் காசி ஆனந்தன்.


நிறைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றியதாவது:

இம்மாநாட்டை நடத்துவதற்காகக் காவல்துறை கெடுபிடி செய்தது. எங்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. என்னைக் கைது செய்ய வேண்டும் என்று கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் முரண்பாட்டை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பகடைக் காயாகப் பயன்படுத்த முயல்வதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒற்றை தீர்மானத்தை திருமாவளவன் வாசித்தார்.


அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1948 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் தமிழீழத்தை விட்டு வெறியேறுகிறபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த இறையாண்மை இலங்கை தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களவர் கையில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழீழத்தின் இறையாண்மை சிங்களவரிடம் இருந்து தமிழர் கையில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன் வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

Sunday, December 21, 2008

தமிழர் விரோத சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் போராட்டம்

பெரியார் திராவிரடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய பொதுவுடமை கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், சென்னையில் இயக்குநர் சீமான் அவர்களின் மகிழுந்தை எரித்த காங்கிரசு ரௌடிகளின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும் புதுச்சேரியில் நாளை (22.12.2008) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போரட்டத்தில் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான தமிழர் விரோத, சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கிய பாசறை ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

பெருந்திரளான பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களும், தமிழினின உணர்வாளர்களும் கலந்துகொண்டு தமிழின விரோத காங்கிரசு கட்சியை சவப்பாடையில் ஏற்றவுள்ளனர்.

Friday, December 19, 2008

புதுச்சேரியில் சட்டத்தை வன்புணர்ச்சி செய்யும் சட்டத்தின் காவலர்கள்

“இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” என்று ஆட்சியாளர்களால் சொல்லப்படுகிறது. மக்களும் நம்புகிறார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காகத்தான் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் சட்டத்தை உருவாக்கும் பணியையும் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் அதை நடைமுறைப்படுத்தும் பணியையும் நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே தொடர்புடையவர்கள் உறுமொழி ஏற்றுக்கொண்டு பணியாற்றுகிறார்கள். ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப இவர்கள் நடந்துகொள்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க; மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை கேளிக்கூத்தாக்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் வலைத்து நெளித்து தன்னலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது நாட்டுமக்கள் அனைவரும் அறிந்ததே.

இத்தகைய இழிச்செயல்களை மிஞ்சும் வகையில் புதுச்சேரி காவல்துறையினர் நேற்று ஒரு செயலைச் செய்தனர். இச்செயல் “சட்டத்தின் மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சி” என்று குறிப்பிடுவது மிக்கச் சரியாக இருக்கும்.








புதுச்சேரியைச் சேர்ந்த இரமேசு என்பவர், புதுச்சேரி காவலர்கள் தன்னிடம் கையூட்டு கேட்பதாக கொடுத்த புகார் தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துணை ஆய்வாளர் சறீதர், வழக்கறிஞர் அம்பலவாணன் ஆகியோரை நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் பொறிவைத்து கையும் களவுமாக வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேர்நிறுத்துமாறு நீதிபதி ஆணையிட்டார். இதன் பேரில் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் கைது செய்யப்பட்ட இருவரையும் நேர்நிறுத்தினர். அப்போது வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினர். தலைமை நீதிபதி கிருட்டிணராசா, வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு பிணை வழங்கினார். ஆனால் துணை ஆய்வாளர் சறீதருக்கு பிணை வழங்கவில்லை.

ஒரே வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு பிணை கிடைத்த நிலையில் துணை ஆய்வாளருக்கு பிணை அளிக்காததால், ஆத்திரமடைந்த புதுச்சேரி காவலர்கள் திரண்டுவந்து ரகளையில் ஈடுபட்டனர்.

தலைமை நீதிபதி கிருட்டிணராசா அறை முன் காவலர்கள் திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒருசில காவல்நிலையங்களுக்கு பூட்டும் போட்டுவிட்டு ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர், காவலர்கள், ஆயுதப்படை பிரிவினர் என சுமார் 750- க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய காவலர்களே ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலையங்களிலும், போக்குவரத்துப் பணிகளிலும் பணியாற்ற போதுமான காவலர்கள் இல்லை.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. இதற்கிடையில் காவலர்களின் குடும்பத்தினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் காவலர்களுடன் வந்து, நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். துணை ஆய்வாளருக்கு பிணை வழங்காத நீதிபதி வெளியில் செல்ல முடியாத வகையில் ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

காவலர்களின் ரகளைக்கு பணிந்த நீதிபதி கையூட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட துணை ஆய்வாளர் சறீதருக்கு வெள்ளிக்கிழமை மாலை பிணை வழங்கினார். இதையடுத்து காவலர்கள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதுச்சேரி காவலர்களின் சட்டத்திற்கு புறம்பான இச்செயல் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 வரை நீடித்தது.

இதற்கிடையில் காவலர்களின் ரகளையை படம் பிடிக்க முயன்ற ஊடகவியலாளர்கள் செல்வராசு, சேகர், பாலா ஆகியோரை காவலர்கள் தாக்கினர். அவர்களின் படக்கருவிகளும் உடைக்கப்பட்டன. காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேரும் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட ஊடகவியலாருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சியினருடனும் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெற்ற காவலருக்கு ஆதரவாக புதுச்சேரி காவல்துறையே முழுமையாக செயல்பட்டதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களாட்சி தத்துவத்தின் மீதும் சட்டத்தின்மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தற்போது எழுந்துள்ள ஐயம் என்னவென்றால்,

காவலர்கள் கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெறுவது சட்டப்படி ஏற்கப்பட்டுள்ளதா என்பதுதான்? (ஆம், என்றால் வெளிப்படையாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இந்த வேலைக்கு இவ்வளவு தொகை என்று விலைப்பட்டியல் வைக்கட்டும். இல்லை, என்றால் நேற்று நீதிமன்றத்தில் அத்துமீறிய காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.)

காவல்துறை உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு பணியாமல் கட்டளைகளை புறக்கணித்த காவலர்களின் மீது காவல்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

நீதிபதி அறையை முற்றுகையிடவும், நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபடவும் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி உண்டா? இல்லை, என்றால் ரகளையில் ஈடுபட்ட காவலர்கள் மீதும் அவர்களின் உறவினர்களின் மீதும் நீதிமன்றமும் அரசும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

கையூட்டு வழக்கில் அரசு அதிகாரிகளோ அரசு ஊழியர்களோ கைது செய்யப்படும்போது அரசு ஊழியர் சங்கங்கள் நீதிமன்றத்தை முற்றுகையிட அனுமதிக்கப்படுமா? அப்படி முற்றுகையிட்டால் நீதிபதிகள் உடனடியாக பிணை வழங்குவார்களா?

எதிர்காலத்தில் புதுச்சேரி அரசியல்வாதிகளும், குற்றவாளிகளும் தங்களுக்கு பிணை வேண்டும் என்பதற்காக நீதி மன்றத்தில் கும்பல் கூட்டி ரகளையில் ஈடுபட்டால் நீதிபதிகள் உடனே பிணை வழங்கிவிடுவார்களா?

தங்களைத் தாக்கிய காவலர்களுக்கு எதிராக ஊடவிலாளர்கள் எப்படி எதிர்வினை புரியப்போகிறார்கள்?

இப்படி பல்வேறு ஐயத்துடன் புதுச்சேரி மக்கள் அச்சத்தோடு நடமாடுகிறார்கள்...

“வலிமையானது நிலைக்கும்” என்ற டார்வின் கோட்பாட்டைப் போல சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில் “கும்பல் கூட்டி ரகளை செய்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என்ற புதிய கோட்பாட்டை புதுச்சேரி காவல்துறையும் நீதித்துறையும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

வாழ்க! சட்டத்தின் ஆட்சி!

படங்கள்: தினகரன்

Thursday, December 11, 2008

தாய் மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்-விஞ்ஞானி ம.அண்ணாதுரை

நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது.

இதில் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவின் சாதனையை உலகமே திரும்பி பார்க்கிறது. நமது நாடு 2020ல் வல்லரசு ஆகும் என அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியுள்ளார். அவரது ஆசை அதற்கு முன்பே நிறைவேறும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சந்திராயன்-1.

நிலவுக்கு சென்ற எந்த நாடும் முதல் முயற்சியில் வெற்றி பெற்றது இல்லை ஆனால் இந்தியா தான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது.

நாம் விழித்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுதான் அது. தற்போது நமது இளைஞர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. அதனை பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் தங்களையும் உயர்த்தி கொள்ள வேண்டும்.

வேலைக்காக அமெரிக்கா செல்லும் நிலையை மாறி சுற்றுலா செல்ல மட்டுமே அமெரிக்கா என்ற நிலைவரும். சந்திராயனின் வெற்றி முடிவல்ல துவக்கம் தான்.

பெட்ரோல் தங்கம் போன்றவை மட்டும் ஒரு நாட்டின் செல்வம் அல்ல. மனிதவளம் தான் நாட்டிற்கு மிகப் பெரிய செல்வம்.

நமக்கு அந்த செல்வம் அதிகமாக உள்ளது. நமது மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக சாதிக்கும் திறன் கொண்டவர்கள்.

குழந்தைகள் தான் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள் அவர்களின் விருப்பப்படி விரும்பும் துறையில் படிக்க வையுங்கள். எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் முதல் இடத்தை பெற வேண்டும். எல்லோரும் எல்லா துறைகளிலும் முதல் இடத்தை பிடித்தால் இந்தியா எளிதில் முன்னேறிவிடும்.

இந்தியாவை கொலம்பஸ் தேடிய போது கிடைத்தது தான் அமெரிக்கா, பல நாட்டினரின் உழைப்பால் உயர்ந்தது தான் அமெரிக்கா.

இந்தியாவின் கல்பனா சாவ்லா, வில்லியம்ஸ் போன்றோர் அங்கு சென்று சாதித்ததை இங்குள்ள நம்மால் சாதிக்க முடியாதா ? முடியும் என்பது தான் சந்திராயன்.

தாய் மொழியில் படித்தால் மன இருக்கம் குறையும். முதல் 5 வருடங்கள் குழந்தைகளை தமிழில் படிக்க வையுங்கள். அப்போது தான் உணர்தல் என்பது எளிதாக வரும்.

விரக்தி அடைந்த இளைஞர்கள் கூட்டம் தான் வன்முறையை நாடுகிறார்கள், எங்கோ,எதிலோ கிடைத்த ஏமாற்றம் தான் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுகிறது. இது போன்ற செயல்கள் பலம் மிக்க நமது நாட்டை தடுமாற வைத்துவிடாது. இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி: தமிழ்முரசு

Monday, December 8, 2008

தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால்: தா.பாண்டியன்

சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்தானது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தா.பாண்டியன் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ்நாட்டு தலைவர்களை, கோமாளிகள் என்று கூறியிருக்கிறார். இமயம் சென்று கனகவிஜயனின் தலையிலேயே கல் சுமக்க வைத்து, சேரன் செங்குட்டுவன் அழைத்து வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த கனகவிஜயனின் ஆணவ சொற்கள் தான் இன்று சரத் பொன்சேகா வாயில் வெளிப்பட்டுள்ளது.

இந்தியா என்ற வலிமைமிக்க நாட்டின் முக்கிய பகுதியாக தமிழ்நாடு விளங்குகிறது என்பது தெரிந்தும், அந்த தமிழ்நாட்டின் தலைவர்கள் தான் மத்திய ஆட்சி விழாமல் தாங்கி நிற்கும் தூண்கள் என்று தெரிந்தும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று எப்படி பிரகடனம் செய்ய முடிகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

இது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகத்தான் கருத வேண்டும். இராணுவத் தளபதியிடம் குவிந்துள்ள சிங்கள இனவெறியை படம் பிடித்துக் காட்டுகிறது.

வேறுநாடாக இருந்திருக்குமானால், இதற்கு எதிர்நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி, ஆணவத்துடன் சிறிலங்காவின் சிங்கள இராணுவத் தளபதி பேசிய இன்றைய சூழலில், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் சிறிலங்காவுக்கு செல்வது அர்த்தமற்றது.

சிறிலங்கா பிரதமரை புதுடில்லிக்கு அழைக்க வேண்டும். இந்திய அரசையும் தமிழ் மக்களின் கௌரவத்தையும் அவமானப்படுத்திய சரத் பொன்சேகாவை இதற்காக பகிரங்கமாக கண்டிக்க வேண்டும்.

இதற்கு உடன்படவில்லை என்றால் சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை மூடுவதற்கு இந்திய அரசு உடன் முடிவெடுக்க வேண்டும்.

இதில் தமிழக அரசியல் தலைவர்களின் பங்கு முக்கியமானது. தமிழ் மக்களின் சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நன்றி புதினம்.காம்

Sunday, December 7, 2008

சரத் பொன்சேகா 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமர்சனம் செய்த சிறிலங்கா இராணுவத்தின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான சிறிலங்கா படையினரின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரிக்கைவிட வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.

இதனால், ஆத்திரமடைந்துள்ள சிங்களப் போர்ப்படை தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக, அரசியல் கோமாளிகள் எனத் தரம் தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்து தனது சிங்கள இனவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த நாக்கொழுப்பு தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.

சிறிலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம். அதில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்தான் என்றும், சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ்வதற்கு தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொக்கரித்தவர் இவர்.

இப்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதன் மூலம் தனது சிங்கள இனவெறியை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியிருக்கிறார் சிங்களப் போர்ப்படை தளபதி.

சிறிலங்காவைப் பொறுத்த வரையில் மகிந்த இராசபக்ச அரச தலைவராக இருந்தாலும், போர்ப்படை தளபதியான சரத் பொன்சேகா தான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போன்று பேசியும், செயற்பட்டும் வருகின்றார்.

எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. சிறிலங்காவின் குரலாகவே, சிங்கள அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, சரத் பொன்சேகா கோமாளித்தனமான தனது விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முப்படைகளின் தலைவர் என்ற முறையில் மகிந்த இராசபக்சவும், பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதனை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள சிறிலங்கா தூதுவரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

சிறிலங்கா இதற்காக பகிரங்கமான மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் எனத் டெல்லிக்கு எடுத்துக் கூற வேண்டும். அத்துடன் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இன்னும் காலம் தாழ்த்தாமல் 48 மணி நேரத்திற்கு உள்ளாக கொழும்புக்கு அனுப்பி நேரிலும் எச்சரிக்கைவிடச் செய்வதுடன், அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டை நிறுத்தப்படுவதன் மூலம் தமிழர்களின் தன்மானத்திற்கு சிறிலங்கா போர்ப்படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் எனத் டெல்லிக்கு எடுத்து கூற வேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Tuesday, November 18, 2008

200-சிங்கள படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம்

வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

படைத்தரப்பில் பல நூறு பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இதில் முகமாலை மற்றும் மாங்குளம் களமுனைகளில் படைத்தரப்பு நேற்று கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது.

அரச தரப்பு தகவல்களை வெளியிடுவதற்கு மறுத்து வருகின்றது.

எனினும், அதிகளவான படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் நேற்று தெரிவித்திருந்தன.

வழமைக்கு மாறாக நேற்று அதிகளவான படையினர் அனுமதிக்கப்பட்டிப்பதாக சிறீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்திருந்தன.

இதனிடையே, பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில், கடந்த மூன்ற நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான படையினர் கொழும்புக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு கண்காணிப்பகம் வெளியிட்ட தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பகுதியை 63 ஆவது படையணியினர் கைப்பற்றியுள்ளதாக கடந்த திங்கட்கிழமை தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சகம், நேற்று அங்கு இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று அந்த கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்

Friday, November 14, 2008

மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம்- இயக்குநர் சீமான்

திரைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு, அதேசமயம் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் வெளுத்து வாங்குகிறார் இயக்குநர் சீமான். ராமேஸ்வரத்தில் அவர் பேசியதில் குற்றம் கண்டுபிடித்த போலீஸ், சீமானை சிறையில் அடைத்தது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இலங்கைப் பிரச்சினை தமிழக அரசியலையும் தினசரி கலக்கி வருகிறது. ஆதரவும், எதிர்ப்புமாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலரைக் கைது செய்ய வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில் இயக்குநர் சீமானை மதுரையில் தமிழன் எக்ஸ்பிரஸ்க்காக சந்தித்தோம்.

அனல் பறக்கும் சீமானின் பதில்கள் இங்கே!

திரைப்படத்துறையில் ஈடுபாடுகொண்ட நீங்கள், இலங்கை தமிழர் பிரச்சினையில் தீவிரக் குரல் கொடுத்து வருகிறீர்கள். இதற்கு உந்து சக்தி எது?

அடிப்படையில் நான் தமிழன். என் இனம் அழிக்கப்படுகிறபோது அந்த உணர்வு தானாக வருகிறதேயொழிய யாரும் சொல்லி வருவதில்லை. இதற்கு உந்து சக்தி என்று எதுவும் கிடையாது. ஆனால் சில சுயநல சக்திகளே தேசியம், இறையாண்மை என்று பேசி, தமிழினத்திற்கு எதிராக இருக்கிறார்கள். எந்தவொரு விடுதலைப் போராட்டமும் விமர்சனம் இல்லாமல் இருந்ததில்லை. யாரும் பூங்கொத்தோடு போய் போராடிக் கொண்டிருக்க முடியாது.

மற்ற மொழி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கக்கூடிய ஒற்றுமை, தமிழகத்தில் இல்லை என்பதே உங்களுடைய ஆதங்கம்..... அப்படித்தானே?

நாம் உணர்வை ஊட்டமுடியாது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே இருக்க வேண்டிய ஒன்று. ஒகேனேக்கல் பிரச்சினையில் எடியூரப்பா சொன்ன அதே கருத்தை அங்கு தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வலியுறுத்தின. மராட்டியத்தில் துப்பாக்கியோடு போன ஒரு பீகாரியை சுட்டுக்கொன்றதற்காக லல்லுபிரசாத் யாதவ் முதல், ராம்விலாஸ் பஸ்வான் வரை குரல் கொடுக்கிறார்கள். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பதவியே விலகுகிறார். அந்த ஒற்றுமை தமிழர்களுக்கு இல்லையே..! இங்கு கட்சித் தமிழன், ஜாதித் தமிழன், மதத் தமிழன் என்று அணுவுக்கு மேலாகப் பிளந்துகிடக்கிறான். இந்த மூன்றும்தான் தமிழர்களைச் சிதறடித்துள்ளது. இதைக் கடக்காதவரை இன உணர்வை ஊட்டமுடியாது; ஒற்றுமையும் வராது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் கருத்துச் சொல்ல உங்களுக்குள்ள உரிமையைப் போல காங்கிரஸýக்கும் உரிமையுண்டு அல்லவா?

தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தை எதிர்த்துப் பேச அவர்களுக்கு எந்தளவுக்கு உரிமை உண்டோ, அதே அளவு உரிமை ஆதரித்துப் பேசவும் உண்டு என்பதே கருத்துச் சுதந்திரம். ஆதரித்துப் பேசக்கூடாது என்றால் அது சர்வாதிகாரமாக இருக்குமே தவிர ஜனநாயகமாக இருக்காது. இந்தியா சர்வாதிகார நாடா என்பதே என்னுடைய கேள்வி. சர்வாதிகார நாடுதான் என்றால் நாங்கள் பேசவில்லை.

ஆனால் இலங்கையில் தனி ஈழம் உருவானால், பிறகு அதேபோன்ற பிரிவினை கோரிக்கை இந்தியாவிலும் கிளம்பும் என்பதால்தானே புலிகளை இங்கு தேசப்பற்றாளர்கள் ஆதரிப்பதில்லை...?

காவிரியில், முல்லைப் பெரியாறில் தண்ணீர் தர மறுத்தபோதும், பாலாற்றின் குறுக்கே கட்டும் அணையைத் தடுக்க முடியாதபோதும் நாங்கள் தனி நாடு கேட்டதில்லை. தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மறுத்த இந்தத் தேசத்தில் நாங்கள் நேசத்துடன்தான் இருக்கிறோம்? ஆகவே தனி நாடு கேட்போம் என்பது ஒரு மாயை. தேசிய இறையாண்மையை மதிக்க தமிழன் அளவுக்கு வேறு எந்த இனமும் இந்த நாட்டில் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாகக் குரல் கொடுத்த சின்ன மருது, பெரிய மருது, தீரன் சின்னமலை, திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., சுந்தரலிங்கனார், அழகுமுத்துக்கோன் இப்படி யாரையும் இந்த மண் மறந்துவிடமுடியாது.

இவ்வளவு காலமாக நாங்கள் நேசித்த என் தேசம் என் இனப் படுகொலைக்குத் துணை போகிறதே என்கிற ஆதங்கம், கோபம் இருக்கிறதே தவிர அதற்காக இந்திய கடவுச் சீட்டோ, குடியுரிமையோ வேண்டாம் என்று சொல்லவில்லை. விமானம் கடத்திய தீவிரவாதிகளை இந்தத் தேசம் வெளியில் விடவில்லையா..? அந்தச் செயல் இறையாண்மைக்கு நேர்மையானதா? ஒரு இந்திக்காரனை சுட்டதற்காக எவ்வளவு பிரச்சினை...! பாகிஸ்தானில் ஒரு சீக்கியரை தூக்குக் கயிறு முன்னால் நிறுத்தியபோது அந்த இனமே எழுந்து பேசியது. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்குப் போகும் மீனவர்களை தனுஷ்கோடி வரை விரட்டிவந்து சுட்டுக்கொல்வதை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் இந்தத் தேசம் கண்டிக்கவில்லை? ஆயுதமும் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து சுடச் சொல்வதே இந்தியாதான். அதைத்தான் ஏற்க முடியவில்லை.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தினால் மட்டுமே அங்கு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரமுடியும் என்று காங்கிரஸ் தரப்பு கருத்து சொல்லியிருக்கிறதே..?

அதை ராஜபக்ஷேவிடம் சொல்லட்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கக் கூடாது என்பதே அந்த ஒப்பந்தம். ஆனால் பிரிக்கப்பட்டபோது இதே காங்கிரஸ்காரர்கள் ஏன் தடுக்கவில்லை? ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே தவிர, விடுதலைப் புலிகள் அல்லர்.

ராஜீவ் கொலைக்கு முன், அதற்குப் பின் என்று தி.மு.க. தன் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் ராஜீவின் கொலைக்கு முன்பிருந்த நிலையையே நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களே..?

தி.மு.க. ஒரு அரசியல் இயக்கம். அதன் தலைவர் ஒரு முடிவெடுக்கிறார். ஆனால் நான் ஒரு கட்சியோ, இயக்கமோ நடத்தவில்லை. எனவே என்னுடைய நிலைப்பாடு அப்படியேதான் உள்ளது. எப்படி காந்தி, இந்திராகாந்தி மரணத்தை மறந்து கடந்தது போல ராஜீவ் காந்தியின் மரணத்தையும் மறந்து யோசியுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

சிங்களனுக்குப் பயிற்சி கொடுத்து விடுதலைப் புலிகளை மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். காரணம், அது ராஜீவைக் கொன்ற இயக்கம்; தீவிரவாத இயக்கம். அந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது "மேலும் இரண்டு ஆண்டுகள் தடை' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன பெரிய தடை....? எங்கேயோ போராடும் ஒரு இயக்கத்துக்கு டெல்லியில் நான்கு சுவற்றுக்குள் வைத்து தடை விதிப்பது வேடிக்கையாக இல்லையா?

சிறையிலிருந்து விடுதலையாகி முதலமைச்சரைச் சந்திக்காமல் நீங்கள் வைகோவைச் சந்தித்தது "விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்' என்ற அடிப்படையிலானது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சரிடம் கூறியிருக்கிறார்களே...?

முதல்வரை சந்தித்து நிதி கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் மதுரையில் தங்கியிருந்து கட்டாயக் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் எப்படி சென்னை போய் அவரைச் சந்திக்க முடியும்? வீர. இளவரசனைப் பார்ப்பதற்காக மதுரை வந்தார் வைகோ. அவரும் எங்களைப் போன்று சிறையில் இருந்தவர். இந்தத் "தம்பி'களைப் பார்க்க அவர் விரும்பியிருக்கிறார். எனவே அன்பின் நிமித்தமாக அவரைச் சந்தித்தோம்... அவ்வளவுதான்.

டாக்டர் ராமதாஸ் இலங்கைப் பிரச்சினை பற்றிக் குரல் எழுப்பி வரும் நிலையில் அவரை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்திக்கிறார். ஆனால் அதே பிரச்சினையைப் பேசிவரும் திருமாவளவனை காங்கிரஸ் கட்சி கைது செய்யச் சொல்லிக் கேட்கிறதே...?

காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென்றே புரியவில்லை. கட்சி சொல்லியிருக்கிற தலைவராக தங்கபாலு இருக்கிறாரே தவிர, 500 பேர் வரை தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆளுக்கொரு விமர்சனம்! அதில் யார் கருத்து எதை நோக்கிப் போகுதுன்னு தெரியல. திருமாவளவன் குற்றம் செய்தார் என்று அரசு கருதினால், அவரைக் கைது செய்யலாம், காங்கிரஸ் சொல்கிறது என்பதற்காக அந்த நடவடிக்கை அவசியமில்லை. கைதுக்குப் பயந்து மனசாட்சிக்குச் "சரி' எனப்படும் உண்மையை பேசாமல் இருக்க முடியாது.

"ஜெயலலிதா தமிழர் இல்லை என்றும், சுட்டுப்போட்டாலும் அவருக்கு அந்த உணர்வு வராது' என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அவர் பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது அவரை எதிர்த்து நீங்கள் போராடினீர்களா..?

ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தல் பிரச்சாரமே செய்தோம். அவர் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாது என்பதுதான் அதன் அர்த்தம். ஆட்டின் மூளை கூட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சிந்திக்கும். ஆனால் ஜெயலலிதாவின் மூளை ஒரு போதும் சிந்திக்காது.

இலங்கைப் பிரச்சினைக்காக இங்கு எந்தெந்த அரசியல் கட்சிகள் முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கின்றன என்பதைப் பட்டியலிட முடியுமா?

பட்டியல் போட்டுச் சொல்ல முடியாது. அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் எதிராகப் பேசிக் கொண்டிருக்கின்றன. தேசியக் கட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் பங்களிப்பு, தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அது பெரிய வெற்றி.

"போர் நிறுத்தம் என்ற வேண்டுகோளை ஏற்கத் தயார்' என்று புலிகள் அறிவித்துள்ளார்கள். ஆனால் அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்கிறதே இலங்கை அரசு?

ஏற்கெனவே போர் நிறுத்தம் இருந்தபோது ஒப்பந்தத்தை அத்து மீறி போர் தொடுத்தது சிங்களன்தான். ஆகவே சிங்கள அரசுதான் போரை முதலில் நிறுத்த வேண்டும். சார்க் மாநாட்டின்போது புலிகள் போர் நிறுத்தம் அறிவித்தபோது, அது முடியாது என்று சொன்னவர்தான் ராஜபக்ஷே.
இப்பவும் போரை நிறுத்தத் தயார் என்று சொல்லியிருக்கும் புலிகளைச் சரணடையச் சொல்கிறார்கள். ஆயுதத்தை அவர்கள் கீழே போட்டால் என்ன நடக்கும்? தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆயுதத்தைக் கீழே போட்டு அரசியல் வழியில் பாராளுமன்ற உறுப்பினரான 22 பேரில் எட்டுப் பேரை, சிங்கள அரசு ஏன் சுட்டுக்கொன்றது? இப்போதும் அவர்கள் நோக்கம் அதுவாகத்தான் இருப்பது புரிகிறது.அங்கு போர்நிறுத்தம் செய்யச் சொல்லி தமிழகத்திலிருந்துதான் குரல் கிளம்புகிறதேயொழிய மத்திய அரசு சொல்லவில்லை. சொன்னால் மறு நிமிடமே நிறுத்தப்பட்டுவிடும். ஆனால் இந்தியா அதை விரும்பவில்லை. காரணம், என் இனப்படுகொலையை திட்டமிட்டு இந்தியா ரசிக்கிறது. இந்தியக் குடிமகனாகிய 400 மீனவர்களின் மரணத்திற்கு இந்தத் தேசத்தில் எந்தப் பதிலும் இல்லையே. இரண்டு நாட்களுக்கு முன்புகூட துரத்தி வந்து சுடுகிறான். ஆக இந்தியாவின் அரசியல் நாடகத்தை நல்ல ரத்தம் ஓடுகிற, மான இன உணர்வுள்ள எந்தத் தமிழனும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதிக பட்சம் என்ன...? மரண தண்டனைதானே! அதற்கும் நாங்கள் தயாராகிவிட்டபோது இதுவெல்லாம் எங்களை என்ன செய்துவிடப் போகிறது? என் இனத்தின் எதிரிகளைப் பேசுவதற்குப் பயந்துகொண்டு வெளியில் வாழணுமா?

போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி புலிகள் ஆயுதம் வாங்கிக் குவிப்பார்கள் என்கிறார்களே...?

எப்படி வாங்க முடியும்? எந்த நாடு கொடுக்கும்? இந்தியாவும், பாகிஸ்தானும் கொடுக்குமா? புரட்சியில் பூத்த கியூபா கூட ஆதரவில்லை. சிங்களன் தமிழனுக்கு அதிகாரம் கொடுப்பான் என்பதை எப்படி நம்ப முடியாதோ, அதே போல் புலிகள் ஆயுதம் வாங்கிக் குவிப்பார்கள் என்பதும் நம்ப முடியாத அப்பட்டமான குற்றச்சாட்டு.

இவ்வளவு பேசும் நீங்கள் பிரபாகரனை சந்தித்துள்ளீர்களா?

பிரபாகரன் இந்த இனத்தில் இனி எந்த நூற்றாண்டிலும் பிறக்க முடியாத ஒரு தலைவன். தன் மண்ணையும், மக்களையும் ஒரு தாய்க்கு மேலாக நேசிக்கக் கூடிய தலைவன். என் பாட்டனார்கள் வீரர்களாகவும், மன்னர்களாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் மதி நுட்பத்திற்கு ஒரு மந்திரியை வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒரே நேரத்தில் வீரனாகவும், விவேகியாகவும் இருக்கிற ஒரே தலைவனாகப் பிரபாகரனைப் பார்க்கிறேன்.
அவர் மனித நேயமிக்கவர். அதனால்தான் 40 ஆயிரம் சிங்கள வீரர்களை "தப்பிச்சு ஓடுங்க'ன்னு சொன்னாரு. சிங்கள வெறி பிடித்த நாய்கள் எங்கள் பிள்ளைகளில் ஒரு ஆண், ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி குப்பை லாரியில் தூக்கிப் போட்டு கோஷம் போட்டுப் போனார்களே... அது சர்வதேச மனித நேயத்துக்கே நேர்ந்த அவமானம். ஆனால் செத்து விழுந்த ஒரு சிங்கள வீரனை புலி போராளி ஒருவர் காலால் எட்டித் தள்ளியபோது, "அது தவறு. நாம் ஒரு லட்சியத்துக்காகப் போராடுவதைப் போன்று அவனும் போராடுகிற வீரன். அவனுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்று சொல்லி வணக்கம் செலுத்த வைத்தவர்தான் பிரபாகரன். ஆக, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கணும்.
என் தலைவன் என்னிடத்தில் திரும்பத் திரும்பச் சொன்னது ஒன்றுதான். ""அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது. ஆயுதம் ஏந்தி ஒருவன் வரும்போது "ஐயா, சாமி' என்று குனிந்து கும்பிடுவதைவிட, போராடிச் செத்துவிட்டுப் போகலாம்'' என்று சொன்னார். அதுதான் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கும் அண்டை மாநிலங்களுடன் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் தேசியச் சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வீர்களா..?

காலம் அதைச் செய்யும். எப்படி அடிவாங்கி, அடிவாங்கி தமிழ் ஈழத்திற்கு அங்கு கருவி ஏந்திப் போராடுகிறார்களோ, அதேபோல அடிவிழும் போது தானாகவே உணர்ச்சி வரும். அப்போது இந்தச் சீமான் என்ன செய்யணுமோ அதைச் செய்வான். நாம் தலைமை ஏற்கவேண்டும் என்ற அவசியமில்லை. புரட்சி என்பது காய்ந்த சருகுகளாகக் கிடக்கிறது. அது எந்த நேரத்திலும் பற்றிக் கொள்ளும் ஆற்றல் மிகுந்தது.

நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்

Wednesday, November 5, 2008

இந்திய அரசு தமிழீழ தனிநாட்டை ஏற்க வலியுறுத்தி புதுச்சேரி மாணவர்கள் மாபெரும் பேரணி

சிங்கள இனவெறி இராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் இந்திய அரசு தமிழீழ தனிநாட்டை ஏற்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பினர் மாபெரும் பேரணி நடத்தினர்.


கடந்த செவ்வாய் (04.11.2008) அன்று புதுவை சட்டக் கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் புதுச்சேரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அனைவரும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகே திரண்டனர்.




4000 மாணவர்கள் அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் சிங்கள அரசை கண்டித்தும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோரிக்கை அட்டைகளை கையிலேந்திச் சென்றனர்.



ஊர்வலமாக வந்த மாணவர்கள் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் மாணவர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பாசுகரன், ஆனந்தன், பிரதீப், குமரேசன், அன்புமணி, நர்மதா, பவாணி, அறிவுச்சுடர், கலைவாணி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து;

இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிங்கள இனவெறி அரசால் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்கவேண்டும்.

இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகளை வழங்கக்கூடாது.

ஈழத்தமிழர்களின் இன்னல்தீர தமிழர்களுக்காக தமிழீழ தனிநாட்டை இந்திய அரசு ஏற்கவேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குருதி கையெழுத்திட்டு புதுச்சேரி ஆளுநர் கோவிந்த்சிங் குர்சாரிடம் மனு கொடுத்தனர்.

Monday, November 3, 2008

புதுச்சேரி இளைஞர் காங்கிரசு தலைவர் குடிபோதையில் வந்து ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாவிரத போராட்டத்தில் ரகளை

கடந்த 01-ஆம் தேதி சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை கண்டித்தும் இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு உதவி செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அரசியல் கட்சிகள் புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்தே புதுச்சேரி இளைஞர் காங்கிரசு தலைவர் பாண்டியன் குடிபோதையில் வந்து உண்ணாவிரத பந்தலுக்கு எதிரில் நின்றுகொண்டு உண்ணாவிரதம் இருந்தவர்களைப் பார்த்து தொடர்ந்து இழிவாக பேசியுள்ளார்.

உண்ணாவிரத பந்தலில் இருந்தவர்கள் அமைதியாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழர் தேசிய இயக்க புதுவை மாநிலத் தலைவர் இரா. அழகிரி அவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசும்போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரசு அரசையும் காங்கிரசு தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக்கொள்ள தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் ஒருசில காங்கிரசு தலைவர்களையும் கண்டித்துப் பேசினார்.

மேலும் “இராசிவ் காந்தி கொலையில் சோனியாவிற்கும், அவருடைய தாயாருக்கும் தொடர்பு உண்டு” என்று சுப்புரமணியசாமி புதுத்தகம் எழுதியதை காங்கிரசார் இதுவரை கண்டிக்காதது ஏன்? என்று வினா எழுப்பினார்.

அப்போது, பந்தலுக்கு எதிரே குடிபோதையில் நின்று கொண்டிருந்த இளைஞர் காங்கிரசு தலைவர் பாண்டியன் தலைமையில் சென்றவர்கள் உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்து பந்தல், பதாகை, ஒலிபெருக்கி போன்றவற்றை சேதப்படுத்தினர். அதைத்தொடர்ந்து நடந்த சாலை மறியலில் புதுச்சேரி மாநில காங்கிரசு தலைவர் ஏ.வி.சுப்ரமணியனும் கலந்துகொண்டார்.

இதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தவர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தமிழன உணர்வாளர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் பாவாணன் அவர்களும், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன் அவர்களும் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ரகளை செய்த பாண்டியன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டிப்பதை கண்டித்தனர்.

உடனே மறியலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் காங்கிரசார் மீது சாதாரண வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழின உணர்வாளர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழின உணர்வாளர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்களையும் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

உண்மையான குற்றவாளிகளான காங்கிரசார் மீது காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுதலை செய்து விட்டனர்.

புதுச்சேரி மாநில காங்கிரசு அரசின் சனநாயக விரோதப்போக்கை பல்வேறு அரசியல் கட்சியினரும் மனித உரிமை அமைப்பினரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

Wednesday, October 22, 2008

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மாணவர்களின் தொடர் போராட்டம்

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்தும், சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதை கண்டித்தும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 16.10.2008 அன்று புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதை உடனே நிறுத்தக்கோரி இந்திய தலைமை அமைச்சருக்கு தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்பினர்.

17.10.2008 அன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாகூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

20.10.2008 அன்று புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி, தாகூர் அரசு கலைக் கல்லூரி, காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு நடுவம், சமுதாயக் கல்லூரி, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேனிலைப்பள்ளி, அரசு தொழில்நுட்ப மேநிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக வந்து இலாசுப்பேட்டை கூட்டுப்பாதையில் ஒன்றுகூடினர். மாணவர்கள் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி சிங்கள அதிபர் இராசபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து எழுச்சியாக நடைபெறுகிறது.

Thursday, October 9, 2008

இனமொழிப் பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்!

பெரியார் பேரனுக்கு இழைக்கப்பட்ட அநீதி!முதல்வருக்கு உருக்கமிகு கடிதம்
"முதல்வருக்கு வணக்கம்.

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை" என்ற நிலையற்ற இவ்வுலகில் தன்னுடைய இருத்தலுக்காக, உண்மையின் உயிர்த்தலுக்காகப் போராடும் மனிதனின் விண்ணப்பம். மீண்டும் மீண்டும் என்னுடைய பின்னணி குறித்துக் கூறுவது, தங்களுக்குச் சலிப்பூட்டுவன. என்றாலும் தேவையின் பொருட்டுக் கூறுகிறேன், பொறுத்தருள்க.

அய்யா, நான் பெரியாரின் கொள்கைவழிப் பெயரன். பகுத்தறிவு என் பாதை; அதுவே என்னுடைய இன்றைய நிலைக்கு முதல் காரணமும் கூட. அடுத்து... நான் மொழி, இனப்பற்றாளன். தொப்பூழ் கொடி உறவாம் தமிழீழ மக்கள் படும் இன்னல் கண்டு, இதயம் நொந்தவன். உலகத் தமிழரைப் போல் என்னால் இயன்றதை அவர்களுக்கு இயல்பாகச் செய்தவன். என்னைக் கொலைக் களத்தில் நிறுத்த இந்த காரணங்கள் போதுமானதாக இருந்தது. அடிப்படையில் நான் ஒரு கொள்கையாளன்... கொலையாளன் அல்ல. இதனை என்னுடைய "தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற நூல் வடிவிலான வாதுரை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

"தடா" சட்டம் என்ற கொடுங்கருவி குறித்துத் தாங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். அந்த ஆட்தூக்கிச் சட்டம், குற்றமற்ற பலரையும் விலங்கினைப் பூட்டி சிறைக் கொட்டடியில் தள்ளிய வரலாற்றினை உணர்ந்தவர் தாங்கள்! அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதே அளவில் அச்சட்டத்தின் குரூரத்தால் பாதிக்கப்பட்டவன் நான். கைவிரித்து வந்த கயவர்கள், பொய்விரித்துப் புலன்கள் மறைத்து, எம்மைக் கொலை யாளியாக்கிய உண்மை உணராதவர் அல்ல தாங்கள்!

மற்றபடி, பிற "தடா"வினருக்கும் எனக்குமுள்ள பெருத்த வேறுபா டெல்லாம், அவர்கள் மீது நல்வாய்ப்பாக முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக அதனினும் சிறிய அளவிலான கொலைக் குற்றங்களில் தொடர்பு படுத்தப்பட்டார்கள். அடுத்து, எனக்குக் கொள்கைப் பின்னணி இருந்ததே தவிர அரசியல் பின்னணி, செல்வாக்கு எதுவும் இல்லை. இவையே நான் இழைத்த பெரும்பிழைகள்.

அய்யா... கட்சி நம்பிக்கை துளியும் அற்றுப்போன மனிதனாக மெள்ள மெள்ள சாவை நேசிக்கவும் பழகிவிட்ட, பழக கட்டாயப்படுத்தப்பட்ட மனிதனாக இம்முறையீட்டு மனுவினை எழுது கிறேன். ஏனெனில் இனத்தின்பால், மொழியின்பால் பற்றுக்கொண்ட ஓர் இளைஞன், தன்னுடைய கடுமையான உழைப்பால், அர்ப்பணிப்பு உணர்வால் தமிழர் தம் தலைமையேற்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள "நெஞ்சுக்கு நீதி" அதற் கான விடை பகிர்கிறது. அதன் நாற்பத் தெட்டாம் அத்தியாயத்தில் தாங்கள் கூறியவற்றை தங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவதற்கு பொறுத்தருள்க.

"இருபது ஆண்டு சாதாரண மானதா? இளைஞனாக இருந்தால் வனப்பும் வசீகரமும் நிறைந்த வாலிபம் சிறைச்சாலையிலேயே முடிந்துவிடுகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்ட மனிதனாகத் தான் அவனை வெளியே பிரசவிக்கிறது சிறைச்சாலை.

வாலிபத்தைக் கடந்த நிலையிலே உள்ளவன் ஆயுள் தண்டனை பெற்றால், வாழ்வின் சுகத்தை இனிமேல் அனுப விக்க முடியாது என்ற பருவத்தில் சக்கை மனிதனாக அவனை சிறைச்சாலை வெளியே உமிழுகிறது. ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனை எவ்வளவோ மேல்தான்!"

ஆம், அய்யா...! பதினெட்டு ஆண்டு சிறைவாசம்... அதிலும் தனிமைச் சிறைச்சாலை. இதனினும் கொடியதாக எவ்வித பரோல் விடுப்பும் இல்லாத நீண்ட நெடிய சிறைவாசம்... இவை யெல்லாம் சிறிய துன்பங்களே எனக் கூறும் அளவிற்கு சாவின் நிழலில்தான் வாழ்வே நகர்த்தவேண்டும். அய்யா, கற்பனை செய்ய முடிகிறதா தங்களால்? கற்பனை எல்லைகளுக்கு அப்பாற் பட்டது எம்முடைய துன்பம். அதன் பின்னரும் இம்மனுவினை நல்ல மனநிலையோடு என்னால் எழுத முடிகிறதென்றால், நீதியின் பால் எனக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், கொள்கை எனக்களித்த மன உறுதியுமே காரணங்கள்.

அய்யா, அன்றாடம் எத்தனையோ மனுக்கள் தங்கள் மேசையில் வந்து விழும். எதனையோ எதிர்பார்த்து ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு பல கோரிக்கைகளை முன்வைக்கும் அதுபோன்ற மற்றுமொரு மனுவல்ல இது.

உள்ளபடியே எவ்விதக் குற்றமும் புரியாமல், செய்யாத குற்றத்துக்காகப் பிழைபட்டுப் போன நீதியின் விளைவால் வாழ்வின் பதினெட்டு ஆண்டு கால வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இம்மனுவினை எழுதுகிறேன்.

"யாருக்கும் தூக்கு தண்டனை வேண்டாம்!" என்றீர்கள். மகிழ்ந்து போனேன். சதாம் தூக்கிலிடப்பட்டபோது "ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங் களை கிழித்து விடாதீர்கள்" எனச் சொன்னீர்கள். பேருவகை கொண்டேன். "மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்கு கூடாது" என்றீர்கள். வியந்திருக் கிறேன். அண்மையில் "பாகிஸ்தான் சிறை யில் வாடும் சரப்ஜித்சிங் தூக்கினைக் குறைக்க உலக நாடுகள் குரல் எழுப்ப வேண்டும்" என வேண்டுகோள் விடுத் தீர்கள். தங்களுடைய உள்ளக்கிடக் கையைப் புரிந்து, பெருமை கொண்டேன்.

ஆனால் அய்யா... வேதனை யோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்பு வதெல்லாம் பிறகேன் எம்முடைய தூக்கினை மாற்றத் தயங்குகிறீர்கள்? எம்முடைய வழக்கில் "நால்வரையும் தூக்கிலிடுவதில் தனக்கோ தன்னுடைய புதல்வர்களுக்கோ விருப்பமில்லை!" என திருமதி. சோனியா அம்மையார் கூறிய பின்னரும். ஏன் என்னுடைய தூக்கி னைக் குறைக்க முடியவில்லை? திருமதி நளினி அவர்களின் தூக்கினைக் குறைத்து ஆணையிட்டீர்கள், மகிழ்ச்சி, அவருக்குத் தூக்கினைக் குறைக்க இருந்த அதே நியாயமான காரணங்கள், இன்னும் சொல்லப்போனால் அதை விடக் கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளது என்பதைத் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அய்யா, இனியும் நான் தூக்கினைக் குறைக்கும் வேண்டுதலோடு என்னுடைய முறையீட்டைத் தங்கள் முன் வைக்கத் தயாரில்லை. எனக்கு விடுதலை வேண்டும். ஒரு ஆயுள் சிறை வாசியைக் காட்டிலும் கூடுதலான துன்பத்தினைக் கண்டுவிட்டேன். எனவே எனக்கொரு முடிவு, என்னுடைய நிலைக் கோர் முற்றுப்புள்ளி விழவேண்டும்.

"காந்தியடிகள் நூற்றாண்டை ஒட்டி 12-11-68க்கு முன்பு மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டதன் விளைவால் 111 கைதிகள் தூக்கிலிருந்து தப்பினர்" என்ற வரலாற்று நிகழ்வைத் தாங்கள் நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணா நூற்றாண்டினையொட்டி மீண்டும் அவ்வரலாற்று நிகழ்வு புதுப்பிக்கப் படவேண்டும் என விரும்புகிறேன்.

ஏனெனில், கடந்த 18 ஆண்டு களாக "தம்முடைய வாழ்வே என்னை மீட்பதுதான்" என சலிக்காது போராடி வரும் என்னுடைய பெற்றோரின் முதுமை தரும் அச்சம் என் மனதைப் பிழிகிறது. அவர்களுக்கு ஒரு புதல்வனாக என்னுடைய கடமையை செய்யத் தவறி யிருந்தாலும், குறைந்தளவு, என்னுடைய நிலையால் அவர்கள் இழந்திருக்கும் அமைதிக்குத் தீர்வுகாணவே ஆசை கொள்கிறேன்.

அய்யா, 18 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தூக்கு நிறைவேற்றப் பட்டிருக்குமானால், இன்று என்னுடைய பெற்றோர் தம்முடைய மற்ற பேரப் பிள்ளைகளோடு தன்னுடைய இனி மையைக் கண்டிருப்பர். குறைந்தளவு, தாங்கள் என்னுடைய கருணை மனு வினை தள்ளுபடி செய்த 25-04-2000 அன்று என்னைத் தூக்கிலிட்டிருந்தாலும் இன்று என்னைப் பற்றிய துன்பம் என்னுடைய பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் ஆட்கொண்டிருக் காது. கெட்ட வாய்ப்பாக அவை நிகழவுமில்லை; என்னுடைய பெற்றோருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படவுமில்லை. இரண்டுமற்ற இந்த நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

திருமதி. பிரியங்கா, திருமதி நளினி ஆகியோர் சந்திப்பு அதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. தமிழருவி மணியன் போன்றோரின் கருத்துக்களெல்லாம் எம்முடைய துன்பத்தை எதிரொலிப்பதாக உள்ளது. இந்நிலைக்குப் பின்னரும் எமக்கு விடிவு கிட்டவில்லையானால், விடுதலை பிறக்கவில்லையானால்... இனி எப்போதுமே அது நிகழப்போவதில்லை.

வாழ்வோ சாவோ, ஒளியோ இருளோ, இன்பமோ துன்பமோ... தற்போது இறுதிசெய்யப்பட்டாக வேண்டும். பேரறிஞர் அண்ணா நூற் றாண்டில் பெரியாரின் பேரப்பிள்ளை யொன்று நீதிபெற்றது என்ற வரலாறு எழுதப்படட்டும் அல்லது இனமொழிப் பற்றுக்காகக் குற்றமற்ற ஓர் இளைஞன் கொல்லப்பட்டான் என வரலாறு குறிக்கட்டும்.

வேதனை மிகுந்த இந்த நீண்ட நெடிய 18 ஆண்டு சிறைவாசம் முற்றுப் பெற துணை புரியுங்கள். ஓர் உண்மை மனிதனின் உயிர்ப் போராட்டத்துக்குக் கொள்கையாளனின் மனக்குமுறலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், முடிவுரை எழுதுங்கள்!

தங்கள் உண்மையுள்ள
(அ.ஞா. பேரறிவாளன்)
நன்றி: தென்செய்தி

Tuesday, September 30, 2008

புதுச்சேரி அரசின் தொடர் சனநாயகப் படுகொலை

ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசுக்கு தொடர்ந்து உதவி செய்துவரும் இந்திய அரசை கண்டித்து கடந்த 28.11.2007 அன்று புதுச்சேரியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

“தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக இக்கூட்டத்தில் பேசுவீர்கள் என அரசு சந்தேகிக்கிறது” அதனால் கூட்டம் நடத்த அனுமதியில்லை என கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை தடைவிதித்தது.

இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.ஐயப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சோதிமணி பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

தீர்ப்பின் அடிப்படையில் 21.03.2008 அன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து கூட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரினர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதால் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறையினர் மீண்டும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதித்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் “ஒரு சனநாயக நாட்டில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லையா? சட்டத்திற்கு உட்பட்டு பொதுக்கூட்டம் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளிக்க வேண்டும்.” என தீர்ப்பு வழங்கினர்.

இந்நிலையில் அண்மையில் வவுனியாவில் உள்ள சிங்கள இனவெறி இராணுவ படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் மும்முனை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலால் சிங்கள இராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
இத்தாக்குதலில் இந்திய இராணுவத்தின் தொழிற்நுட்பப் பிரிவைச்சேர்ந்த இருவர் படுகாயமுற்றதாகவும், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் உள்ளதாகவும் செய்தி வெளியானது.

சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி செய்வது உறுதியான நிலையில் இதை கண்டித்து 29.09.2008 அன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. வழக்கம்போல் அதே காரணத்தைச் சொல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஒரு சனநாயக நாட்டில் சனநாயக முறைப்படி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது சனநாயகப் படுகொலையாகும்.

“சட்டத்தை மதிப்பவர்களுக்கு அதை மாற்றவும் தெரியும் அதை மீறவும் தெரியும்” என்பது வரலாறு நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் புதுவை அரசு இதை உணரவேண்டும்.

Wednesday, September 24, 2008

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!"

தன்னைப்பற்றிய விமர்சனங்களை செரிக்கத் தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி ஆவான். இல்லையேல் இடிப்புரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடுவான் என வள்ளுவர் சொன்னது போல கெட்டொழிந்து விடுவான்.

முதல்வர் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர். சொற்களை அளந்துபேச வேண்டும். எழுதவேண்டும். முதல்வர் எழுதிய கவிதையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை தனது வசதிக்கேற்ப பயன்படுத்துவதோடு நின்றுவிடுகிறார். அதனை முதல்வர் கடைப்பிடிப்பதில்லை.

50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கும் நெடுமாறன் போன்ற ஒரு தமிழ் உணர்வாளரை, தமிழினப் பற்றாளரை எட்டப்பன் என்றும் ஆஞ்சநேயன், விபீஷணன் என்றும், பணம் பறிக்கும் இனத்துரோகி என்றும் திட்டுவது முதல்வருக்கு அழகல்ல. இந்தப் பட்டங்களை திருப்பி முதல்வர் மீது வீச எத்தனை வினாடி எடுக்கும்?

வைகோவை 18 ஆண்டுகளாக மேலவை உறுப்பினராக்கினேன். அது நான் அவருக்கு போட்ட பிச்சை என்று அன்றொருநாள் முதல்வர் சொன்னார். அப்படி என்றால் தி.மு.க. என்பது ஆண்டிகள் மடமா? முதல்வர் என்ன மூத்த தம்பிரானா? அறிவுடையோர் கேட்கமாட்டார்களா?"

வைகோ புலிகளோடு சேர்ந்து கொண்டு என்னைக் கொல்லச் சதி செய்தார் என்று முதல்வர் உளறினாரே? அது நெஞ்சாரச் சொன்ன பொய்தானே? முதல்வர் ஒரு பொய்யன் என்பதுதானே அதன் பொருள்?

நெடுமாறன் அன்றும் சரி இன்றும் சரி விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் மனம், மொழி இரண்டினாலும் நேசிப்பவர், அவரைப் பார்த்து "வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே குத்திக்கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!" என்பது கொஞ்சமும் பொருந்தாது. வேண்டு மென்றால் அது முதல்வருக்குத்தான் பொருந்தும்.

முதல்வர்தான் இலாபம் இருந்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது, இழப்பென்றால் காததூரம் விலகி ஓடுவது என்ற கொள்கையை வைத்திருக்கிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நெடுமாறனுக்கு இருக்கும் ஆதரவில் நூற்றில் ஒரு பங்கு கூட முதல்வருக்கு இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம்!

இந்திரா காந்திக்கு எதிராகக் கறுப்புக்கொடி பிடித்தீர்கள். கற்களை எறிந்து இந்திரா காந்தியைக் கொல்ல நினைத்தீர்கள். அப்போது இந்திரா காந்தியைக் காப்பாற்றியவர் இன்று நீங்கள் எட்டப்பன், ஆஞ்சநேயன், துரோகி என்று அர்ச்சிக்கும் பழ. நெடுமாறன்தானே.

இல்லையா? பின்னர் மானம், வெட்கம், இரண்டையும் கக்கத்தில் வைத்துக்கொண்டு "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக" என தட்டை மாற்றி லாலி பாடினீர்களே? இதனை வைத்து முதல்வர் கருணாநிதியை ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்றால் அது பிழையாமோ?

பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு, "அரசியலில் தீண்டாமை இல்லை" என்று சொல்லிக் கொண்டு அவர்களோடு கை கோர்த்த குத்துக்கரண வீரர் கருணாநிதியா? நெடுமாறனா?

நள்ளிரவில் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை அன்றைய கருணாநிதியைக் குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனபோது "அய்யோ என்னைக் கொல்றான்களே" என்று கூக்குரல் விட்டு அழுதீர்களே? அது கோழைத்தனம் இல்லையா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபைக்குப் போகாமல் கையெழுத்தைமட்டும் போட்டுவிட்டு சம்பளத்தை ஒழுங்காக எடுத்த முதல்வர் வீரத்தைப் பற்றிப் பேசலாமா?

தமிழகத்தில் ஊழலை எப்படிச் செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர் முதல்வர்தான்.நெடுமாறன் அல்ல. வீராணம் என்றாலே ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. 23 கோடி செலவில் தீட்டப்பட்ட வீராணம் திட்டத்தில் நடைபெற்றது ஊழலா இல்லையா என்பதற்கு சான்றாக இன்றும் கூட வீராணத்திலிருந்து சென்னை வரை அன்றைக்கு வாங்கப்பட்ட சிமெண்ட் குழாய்கள் சாலையோராமாகப் பரிதாப மாகக் கிடக்கின்றன. இந்த ஊழலை விசாரித்த சர்க்காரியா ஊழலை விஞ்ஞான முறையில் செய்திருக்கிறார் என முதல் வரை எள்ளி நகையாடினார். தமிழர்கள் கூனிக் குறுகிப் போனார்கள்.

"தமிழகம் நோக்கி தஞ்சம் புகும் ஈழத் தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள்" என்று சட்டசபையில் கொட்டி முழக்கினீர்கள். இப்போது யார் யார் வீடுவாங்கி இருக் கிறார்கள். யார் யார் வண்டிவாகனம் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அவர்களைக் கைது செய்து வழக்குப் போடுமாறு முதல்வர் தனது காவல்துறையை ஏவிவிட்டிருக்கிறாரே? இது இரண்டகம் (துரோகம்) இல்லையா. இதுதான் "மோப்பக் குழையும் அனிச்சம் - முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்று குறளுக்கு உரை எழுதியவர் விருந்தினர்களை நடத்தும் அழகா?

சிங்களப் படையெடுப்பால் வீடு வாசல் இழந்த தமிழர்களுக்கு பழ.நெடுமாறன் ஊர் ஊராகச் சென்று உணவும் உடையும் திரட்டினாரே? தமிழக முதல்வர் என்ன செய்தார்? இன்று கூட தமிழீழம் எதிரி படையெடுப்பால் நெருப்பில் வேகிறது. ஒன்றரை இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து குடிக்கத் தண்ணீர் இன்றி ஒரு நேரக் கஞ்சிக்கு வழியின்றி மரநிழல்களில் வாழ்கிறார்கள்.

உரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னர் போல் கோட்டையில் இருந்துகொண்டு குழல் வாசிக்கின்றாரே? இது அந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?

புறநானூற்று வீரம் என்றால் ஆகா என்று மேடையில் பேசுவது எழுதுவது. அதே வீரத்தை புலிகள் போர்க்களத்தில் செய்து காட்டும் போது "எனக்கு வன்முறை பிடிக்காது" என்று சொல்லும் உங்களை உங்கள் நடையில் கோழை என்று சித்திரிப்பதில் தவறு ஏதாவது இருக்கிறதா?"

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல் வாரடி! - கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி!" - "கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடீ நாளும் மறப்பாரடீ!" என்ற பாரதியின் கவிதை வரிகள் முதல்வருக்கு அச்சொட்டாகப் பொருந்துகிறதா இல்லையா?

"உருசிய குடிமக்கள் எங்கிருந்தாலும் அவர்களது உயிரையும் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அவர்களது கொலைக்குப் பொறுப்பாளர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளையே உருசியா மேற்கொண்டுள்ளது" என உருசிய ஆட்சித் தலைவர் டிமித்திரி மித்விடெவ் தோள் தட்டினாரே? அவரிடம் இருக்கும் இனப்பற்றில் முதல்வருக்கு நூற்றில் ஒரு விழுக்காடுதானும் உண்டா? நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியுமா?

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு முதல்வர் மற்றவர்கள் மீது கல் லெறியக் கூடாது. ஏன் ஆடையையும் களையக்கூடாது! கல்லெறிந்தால் அது தனக்குத்தான் இழப்பு. ஆடை களைந்தால் அது அவருக்குத்தான் வெட்கக்கேடு.

இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். அதற்கு எல்லை இருக்காது. கீழ்க்கண்ட அவ்வையார் பாடலை மட்டும் உங்கள் பார்வைக்கு வைத்து இப்போது விடை பெறுகிறேன்.

ஆலைப் பலா ஆக்கலாமோ அருஞ்சுணங்கன்வாலை நிமிர்க்க வசமோ - நீலநிறக்காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலாமூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?

- நக்கீரன், கனடா.
நன்றி: தென்செய்தி

வீரமணியை காப்பாற்றுவதற்காகவாவது பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும்-தோழர் தியாகு

வீரமணியைக் கண்டித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கக் கோரியும், 25.8.2008 அன்று சென்னையில் நடந்த கழக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுப் செயலாளர் தோழர் தியாகு ஆற்றிய உரை:

தந்தை பெரியார் வாழ்க்கை முழுவதிலும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தவர். எதிர்ப்புக் கண்டு அஞ்சாதவர். எப்போதும் பெரியாருடைய பாதை சரளமானதாக, தடையற்றதாக இருந்ததில்லை. அதற்கு பொருத்தமாகவே இப்போது பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்புகளாக வெளியிடும் முயற்சிக்கும் தடைபோட துடிக்கிறார்கள்.

பெரியாருடைய கூட்டங்களுக்கும், உரை வீச்சுகளுக்கும், பார்ப்பனர்கள், சனாதனிகள், ஆட்சியாளர்கள் தடை போட்டார்கள். இப்போது பெரியாருடைய நூல்களை வெளியிடுவதைத் தடுப்பது வரலாற்றில் மிகப்பெரும் பின்னடைவு. இது பெரியார் திடலிலிருந்தே வந்திருக்கிறது என்பதுதான் வேதனை.

பெரியாரின் நூல்கள் வெளிவரப்போகிற செய்தி தமிழ்நாடெங்கும் தெரிய வேண்டும். அக்கரையுள்ள எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

பெரியார் திராவிடர் கழகம் செய்திருக்கிற பரப்புரை, விளம்பரம் போதுமானதல்ல என்று கருதியோ என்னவோ இந்தச் செய்தியை விளம்பரப்படுத்துவதற்கு நேரடி உதவி செய்திருக்கிறார் வீரமணி. அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். (கைதட்டல்)

எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர் கூறியிருக்கிற காரணங்கள் என்ன? முதலாவதாக இவைகளுக்கெல்லாம் அறிவுசார் காப்புரிமையை கோருகிறார். இது மிகவும் வேடிக்கையானது. சட்டம் என்ன சொன்னாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். தோழர் கொளத்தூர் மணி ‘நல்லது சந்திப்போம்’ என மிகப் பொருத்தமாக பதிலளித்து இருக்கிறார்.

நாம் சொல்ல விரும்புவதெல்லாம் பைபிள் என்கிற புதிய நூலுக்கு அறிவு காப்புரிமை கோரவில்லை. போப் பாண்டவர் பார்த்துத்தான் பைபிள் வெளியிட வேண்டுமென்றால் உலகத்தில் இத்தனை மொழிகளில் பைபிள் வெளிவந்திருக்காது. தமிழிலேயே எத்தனை மொழிப்பெயர்ப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? இவைகளை எல்லாம் போப் ஆண்டவர் அங்கிகரிக்க வேண்டும் என்றால் பைபிள் உலகிலே பரவியிருக்காது.

மார்க்சின் ‘மூலதனம்’ தொகுப்பு அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு தொகுதிதான் வெளிவந்தது. ஆங்கிலத்தில் அதை ஏங்கல்சு மொழி பெயர்த்து வெளியிட்டார். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில்;

மார்க்சும், ஏங்கல்சும் மறைந்த பிறகுதான் மற்ற தொகுப்புகளும், தொகுதிகளும் வந்தன. மாஸ்கோவிலிருந்து மூலதன நூலின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. அந்த மொழிபெயர்ப்புகளில் நிறைய தடைகள், இடையூறுகள் இருப்பதாகக் கருதி வேறு மொழிப் பெயர்ப்புகள் இருக்கின்றனவா எனத்தேடினோம்.

‘பென்குயின்’ என்ற முதலாளித்துவ வெளியீட்டு நிறுவனம், மிகப் பெரிய பொருளியல் வாதியான மார்க்சின் ‘மூலதனம்’ முழுமையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அதை வைத்துத் தான் நாங்கள் தமிழில் மொழி பெயர்த்து மூலதனம் முழுவதையும் சீர் செய்தோம். இப்படி மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர்களுடைய நூல்கள் எல்லாம் உலகில் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. முறையாக தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் அழகிய அச்சு வடிவிலே.

இதற்கெல்லாம் அன்றைக்கு சோவியத் அரசோ, மற்றவர்களோ தடை போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்குமான உறவு பிரிந்ததற்கு பிறகு எழுதின நூல்களையெல்லாம் சீனாவிலிருந்து புதிதாக மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள். இதற்கு யாரும் அறிவு சார் காப்புரிமை கோரவில்லை.

நம்மைப் பொருத்தவரை தந்தை பெரியார் தமிழ்நாட்டினுடைய லெனினாக, தமிழ் நாட்டினுடைய தேசிய தந்தையாக நாம் மதிக்கிறோம். இந்தியாவிற்கு எப்படி காந்தியை முக்கியமாகக் கருதுகிறார்களோ, அதுபோல் தமிழ்நாட்டிற்கு தந்தை பெரியார் தான். பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியாருடைய அறிவுக்களஞ்சியம் என்பது நம்முடைய சொத்து. அவர்கள் ஒரு திடலை, ஒரு கட்டிடத்தை ஒரு சிலையை சொந்தமாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை.

பவுத்தம் என்பது போருக்கெதிரான - சிந்தனைதான். ஆனால் சிங்கள பவுத்தவாதிகள் தமிழர்களுக்கு எதிராக போர் வெறிபிடித்து அலைகிறார்கள். அவர்களிடம் என்னயிருக்கிறது என்றால், புத்தருடைய பல் இருக்கிறது. ஒரு இடத்திலே புத்தருடைய முடியை வைத்திருக்கிறார்கள். ஆனால் பவுத்தம் அவர்களிடம் காணாமல் போய்விட்டது.

அந்த பவுத்தத்தை பெரியாரும், அம்பேத்கரும் தான் இந்த நாட்டுக்குரிய, மக்களுக்குரிய கருத்துகளாக வழங்கினார்கள்.புத்தருடைய பல்லையும், முடியையும் வைத்துக் கொண்டு - பவுத்தர்களாக உரிமை கோரும் சிங்களர் - பவுத்தத்தின் சிந்தனைக்கு எதிராக போர் வெறிபிடித்து அலைகிறார்கள்.

இங்கே பெரியாருடைய உடைமைகளை வைத்திருப்போர் - பெரியார் நூல்களை வெளியிட தடை கோருகிறார்கள். அம்பேத்கருடைய நூல்களை மராட்டிய அரசு ஆங்கிலத்திலே வெளியிட்டது மட்டுமல்ல, தமிழிலேயும் அரசு துணையோடு வெளியிட்டது. நானும் ஒரு சில தொகுதிகளை மொழி பெயர்த்து கொடுத்திருக்கிறேன்.

இப்படி நூல்கள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.தந்தை பெரியாருடைய கருத்துகளுக்கு அவருடைய சொற்களில், அவருடைய பதப் பிரயோகத்தில் கால வரிசைப்படியான சிந்தனையில்தான் பணி மலர்ச்சியை புரிந்துகொள்ள முடியும். அப்படி வெளியிடப்படாத ஒரு பிழை இருக்கிறது.

அந்த வரலாற்றுப் பிழையை நிறைவு செய்கிற முயற்சியை பெரியார் திடலே செய்திருக்குமானால் நாம் மெத்த மகிழ்ந்திருப்போம். அப்படி அவர்கள் செய்யத் தவறியிருக்கிற நிலையிலேதான் அவர்கள் அறிக்கையிலே கூறியிருப்பதைப் போல பல ஆண்டுகளுக்கு முன்பு இவற்றையெல்லாம் முறைப்படி எழுதி ஒப்படைத்தும்கூட அவற்றை வெளியிட முயற்சி செய்யாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம் அரும்பாடுபட்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக் கொண்டுவர முயல்கிறது.

தந்தை பெரியாருடைய தமிழ்நாடு தமிழருக்கே என்பதை உயிர் முழக்கமாக கொண்டிருக்கிற எங்களது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ இதற்காக நன்றிப் பாராட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

வீரமணி அவர்களும் நன்றி சொல்லியிருந்தால் கண்ணியமான, மரியாதையாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வீரமணி கண்டுகொள்ளாமலாவது இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அவர் விளம்பரம் கொடுக்கிறார். இவைகளை எல்லாம் தடை செய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். இது தேவையில்லாத வேலை.

நாங்கள் பெரியார் நூல்களை வெளியிடவில்லையா என்று வீரமணி கேட்கிறார். நீங்கள் எதையுமே வெளியிடவில்லை என்பதல்ல எங்கள் வாதம். நீங்கள் சுவரொட்டி அடித்து விளம்பரபடுத்தித்தான் நீங்கள் வெளியிட்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

தந்தை பெரியார் காலத்திலேயே அவருடைய எழுத்துக்கள் வெளிவந்தன. எத்தனையோ கூட்டங்களில் பெரியாரே புத்தகங்களையெல்லாம் வண்டிகளில் எடுத்துக் கொண்டு வந்து விற்றுவிட்டுவா என்று சொல்லுவார். திரும்ப வண்டியிலே ஏறுகிற பொழுது எவ்வளவு புத்தகங்கள் விற்றன என்று கேட்பார். முப்பது புத்தகம் விற்றது என்றால், ஆகா முப்பது பேர் படிப்பார்கள் அல்லவா என்று பெரியார் மகிழ்ச்சி யடைவார். அப்படித்தான் தன்னுடைய சிந்தனைகளை பரப்புவதற்கு எளிய முயற்சிகளை செய்தார்.

பெரியார் காலத்தில் சின்ன சின்ன புத்தகங்கள் வெளிவந்தன. அவைகளை தொகுத்து வெளியிடுகிறபோது தான் பெரியாருடைய சிந்தனை பனி மலர்ச்சியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

நாம் ஒரு செய்தியை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர்கள், மார்க்சியவாதிகள், அறிவாளிகள் என்று பிறப்பிலேயே எவனும் பிறப்பதாக நாம் நம்புவதில்லை.

பிறந்த பிறகுதான் அறிவு வருகிறது. அதுவும் படிப்படியாகத்தான் வருகிறது. மரத்தடியிலே உட்கார்ந்தால் ஞானம் வந்துவிடும் என நாம் நம்புவதில்லை.

இது எல்லோருக்கும் பொருந்துகிற செய்தி. பெரியாருடைய சிந்தனை வளர்ச்சி என்பது நமக்குத் தேவையானது. அது எப்போது கிடைக்கும் என்றால், பெரியாருடைய எழுத்துக்கள் காலவரிசைப்படி முழுமையாக எதையும் நீக்காமல், திருத்தாமல், மறைக்காமல் வெளியிடபடுகிறபோது மட்டுந்தான் கிடைக்கும்.

அப்படித்தான் ஆய்வாளர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். தங்களைத் தவிர, மற்றவர்கள் பெரியார் நூல்களை வெளியிட்டால் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.

பெரியார் எழுதியதை ஒன்றை வைத்துக் கொள்ளலாம். இன்னொன்றை நீக்கிவிடலாம், ஒரு சொல்லை விட்டு விடலாம், இன்னொரு சொல்லை சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்குப் பெயர்தான் திரிபுவாதம், புரட்டல் வேலை.

இந்த புரட்டல் வாதம், திரிபுவேலை கூடாது என்பதால்தான் உள்ளது உள்ளபடியே தொகுத்து வெளியிடுகிற முயற்சியை, கடினமானபணியை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் கேட்கிறேன், வீரமணி சொல்வது போல இப்படியெல்லாம் வெளியிட்டால் தவறாகப் பயன்படுத்தி விடுவார்கள் என்று கூறுகிறாரே;

பெரியாரை யார் தவறாகப் பயன்படுத்த முடியும். அதனுடைய எழுத்துக்களை திருத்தி விடுவார்கள், பதிப்பிக்கிறோம் என்ற பெயரில் மாற்றி விடுவார்கள் என்கிறார் வீரமணி.

அப்படி இருந்தால் நீங்கள் அம்பலப்படுத்துங்கள். உங்கள் கையிலுள்ள ஏட்டில் எழுதலாம். “பாருங்கள் பெரியார் எழுதியது ஒன்று, அவர்கள் வேறொன்றை காட்டுகிறார்கள்“ என்று.

மார்க்சு அவர்கள் தன்னை மார்க்சியவாதியாக அறிவித்துக் கொள்வதற்கு முன்னால் நிறைய எழுதிக்குவித்தார். கையெழுத்துப் படிகளாகவே அவையெல்லாம் இருந்தன. அதற்குப் பெயரே (Early Manuscripts) அதாவது, தொடக்கக்கால கையெழுத்துச் சுவடிகள்.

இன்றைக்கு பல ஆய்வாளர்கள் பிற்காலத்தில் மார்க்சியத்தோடு முரண்பட்டவர்கள் எல்லாம் உண்மையான மார்க்சியமே அந்தக் கையெழுத்துச் சுவடிகளில்தான் இருக்கின்றது. அவற்றை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி பெரியாரைப் பற்றி எத்தனைக் கருத்துக்கள் வேண்டுமானாலும் வரட்டும், முட்டி மோதட்டும், இதுதான் பெரியாரியல் வாதம், விவாதம் அரங்கேறட்டும். அதற்கெல்லாம் அடிப்படையாக பெரியாருடைய படைப்புகள் அவருடைய எழுத்தில், மொழியில், சொல்லில், காலவரிசைப்படி வரவேண்டும்.

வீரமணி அவர்களே! நீங்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்டிருப்பதாலேயே மற்றவர்கள் வெளியிடக்கூடாது என்பதில்லை. நீங்கள் வெளியிடாதவற்றையும் வெளியிடலாம். நீங்கள் வெளியிட்டவற்றையும் மீண்டும் வெளியிடலாம்.

அய்யா ஆனைமுத்து அவர்கள் பல நூல்களை கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல ‘பெரியார் சிந்தனைகள்’ என்று மூன்று பெரிய தொகுப்பையும் கொண்டு வந்தார். அதற்கும் ‘குடிஅரசு’ தொகுப்பிற்கும் வேறுபாடு உண்டு. அது பொருள் குறித்த வரிசையிலே கொண்டு வரப்பட்டது. ஆனால், ‘குடிஅரசு’ காலவரிசைப்படி வருகிறது.
இதில் எல்லா வகையான சிந்தனைகளும் இருக்கும். அப்படிப்பட்ட நல்ல நூல் வருவது இன்றியமையாதது.பெரியார் ஒரு காலத்திலே சொன்னதற்கும், இன்னொரு காலத்திலே சொன்னதற்கும் முரண்பாடுகள் இருக்குமோ என்றெல்லாம் வீரமணி கவலைப்படு கின்றார்.

எங்களுக்கோ இன்றைக்கு கலைஞர் அவர்களைப் பற்றி வீரமணி எழுதி கொண்டிருப் பனவற்றையும், பேசிக் கொண்டிருப்பனவற்றையும், அன்றைக்கு ஜெயலலிதாவைப் பற்றி எழுதிக் கொண் டிருந்தவற்றையும் பேசிக் கொண்டிருந்தனவற்றையும் ஒரே தொகுதியாக நாங்கள் வெளியிட்டால் (சிரிப்பு, கைதட்டல்) முரண்பாடுகள் தெரியும். அதை நாமே கூட அவருக்காக வெளியிடலாம். (கைதட்டல்)

வீரமணி அவர்களை கேட்க விரும்புகிறேன், பெரியாரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பெரியார் காசிக்குப் போன நிகழ்ச்சி காட்டினீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் காட்டினீர்கள் என்றால் நமக்கு பெரிதும் வேதனையாக இருந்தது. சாதாரணமாக ஒரு குறியீட்டின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு செய்தி. எச்சில் இலையை பெரியார் வழித்துச் சாப்பிடுவதாக காட்டினீர்கள்.

நீங்கள் காட்டாமல் விட்டது 1938 ஆம் ஆண்டு மொழிப்போர் நிறைவடைகிற பொழுது சென்னைக் கடற்கரையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டாரே அதை நீங்கள் அடியோடு மறைத்து விட்டீர்கள். ஏன்? எச்சில் இலையை வழித்து சாப்பிடுகிற மாதிரி காட்டும் அளவுக்கு கலையதார்த்த உணர்வு இருக்கிறது.

ஆனால் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியதை நீங்கள் காட்ட மாட்டீர்கள். ‘குடிஅரசு’ தொகுதிகள் எல்லாம் வெளிவருமானால் பெரியார் கொள்கை எதுவென்று தெரிந்து விடும்.

வீரமணிக்கு கொள்கை கிடையாது. யுக்தி மட்டுந்தான் உண்டு. அந்த யுக்தியால் மட்டுமே தான் பெரியாரைப் பார்க்கிறார். தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொன்னதெல்லாம் கொள்கையல்ல, யுக்தி என்று வீரமணி அவர்கள் விடுதலை இராசேந்திரனுக்கும், எஸ்.வி. இராசதுரைக்கும் பதில் சொன்னதை நான் மறக்கவில்லை.

அது யுக்தியா கொள்கையா என்பதை பெரியார் எழுத்திலேயே படித்து தெரிந்து கொள்கிற வாய்ப்பு பெரியாருடைய ‘குடிஅரசு நூல்கள் வெளி வருகிறபோது நமக்கு கிடைக்கும்.

உருவமில்லாத பொம்மையல்ல பெரியார். உயிருள்ள பெரியாரின் கொள்கைகள் நமக்கு இன்றியமையாதது என்றால், பெரியாரின் சிந்தனைக் களஞ்சியம் நூல்களாக வெளிவரும் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு ‘குடிஅரசு’ தொகுப்பு வெளி வரும் என்பது உறுதி.

தமிழக அரசு வீரமணியை காப்பாற்றுவதற்காகவாவது (கைதட்டல்) பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். எங்களுக்காகக்கூட அல்ல.

இத்தனையும் மீறி குடிஅரசு நூல்கள் வெளியிடுகிறபொழுது வீரமணி என்ன செய்வார் பாவம். அந்த ஒரு காரணத்திற்காகவாவது இந்த நேரத்தில் உங்கள் நண்பர் வீரமணியைக் காப்பாற்றுங்கள். அவருக்கான நன்றிக் கடனை செலுத்துங்கள்.

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் பெரியார் நூல்கள் அரசுடையாக்கப் பட்டன என்ற அறிவிப்பு வரட்டும்.

பெரியார்வழியில் சமத்துவபுரம் கண்டவர், பெரியாருக்காக நீங்கள் நிறைய செய்திருக்கலாம். ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பெரியார் தன் வாழ்நாளில் தனி மனிதருக்கு சிலை வைக்க சொன்னார் என்றால் அது கலைஞருக்கு மட்டுந்தான்.

இன்றைக்கு நீங்கள் பெரியாருக்கு சிலை கூட வைக்க வேண்டாம். பெரியாரின் நூல்களை நிரந்தரமாக வரலாற்றிலே பதியச் செய்யுங்கள். வருங்கால தலைமுறைக்கு படிக்கக் கொடுங்கள். ஆய்வாளர்கள் அதைப் படித்து தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டட்டும்.

நன்றி: புரட்சி பெரியார் முழக்கம்

Tuesday, September 16, 2008

உலகத் தமிழர் பேரமைப்பின் 6-ஆம் ஆண்டு நிறைவு விழா தீர்மானங்கள்

தீர்மானங்கள்

1. இலங்கையில் சிங்கள இனவெறி அரசின் அட்டூழியங்களின் விளைவாக அங்கு வாழ முடியாத நிலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி இந்தியா உட்பட உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேற்கு நாடுகளில் அகதிகளாகக் குடியேறி உள்ள ஈழத்தமிழர்களுக்குக் குறிப்பிடப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாடுகளின் குடியுரிமை வழங்கப்படுகிறது. அதன் பேரில் அவர்கள் அந்நாட்டின் குடிமக்களாகக் கருதப்பட்டு அவர்களுக்குச் சொந்தமாகத் தொழிலும், வணிகமும் நடத்தும் உரிமைகளும், வேலை வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உரிமைகள் அளிக்கப்படுகின்றன.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும் நமது சகோதர ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க முன் வந்து தனது மனித நேயக் கடமையைத் தவறாமல் நிறைவேற்றுமாறு இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் இங்கு அரசுகளால் வேண்டாத விருந்தாளிகளாகக் கருதப்படுகின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்தும் குடியுரிமையும் மறுக்கப்படுகிறது. தொழில் வணிகம் செய்யும் உரிமைகளும் கிடையாது. வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச உதவிகள் கூடக் கிடைப்பதில்லை. அவர்களின் வாழ்விடங்கள் சீர்கேடான நிலைமையிலும், சுகாதார வசதிகள் குறைவாகவும் உள்ளன. குழந்தைகளுக்குப் போதுமான கல்வி வசதிகளும், மருத்துவ வசதிகளும் அளிக்கப்படுவதில்லை.

இத்தகைய சீர்கேடுகளை உடனடியாகக் களைவதற்கு உதவும் வகையில் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படி இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

3. தமிழ்நாட்டில் நூலகத்துறை முற்றிலுமாகச் சீரழிந்து கிடக்கிறது. நூலகங்களுக்குத் தேவையான நூல்களை வழங்குவதில் விருப்பு வெறுப்புகள் காட்டப்படுகின்றன. தரமான நூல்களுக்குப் பதிலாகத் தரமில்லாத நூல்கள் வாங்கப்படுகின்றன. போதுமான நூலகர்கள், உதவியாளர்கள் நியமக்கப்படாமல் நூலகங்கள் சரிவர இயங்காத நிலைமை உள்ளது. இந்த சீர்கேடுகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் நூலக ஆணைக் குழுவில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களையும், நல்ல திறனாய்வாளர்களையும் நியமிக்க வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

4. உலகத்தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உலகளாவிய இலக்கியப் பரிசுத் திட்டம் ஒன்றிளை அறிவிக்க முன்வருமாறு தமிழக அரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

5. 1974-ஆம் ஆண்டு இந்திய அரசினால் இலங்கை அரசுக்குக் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக தமிழக மீனவர்கள் சொல்லொணாத துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகி உள்ளனர். எனவே கச்சத்தீவை உடனடியாகத் திரும்பப் பெற்றுத் தமிழக அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்துகிறது.

6. கடந்த 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக நமது கடல் எல்லைக்கு உள்ளாகவே 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர். தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் பெறுமான படகுகளும், வலைகளும் அழிக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கும், சேதமாக்கப்பட்ட படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கும் உரிய இழப்பீட்டினை சிங்கள அரசிடம் பெற்றுத் தருமாறு இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுடன் மொழி, பண்பாட்டு உறவு உடையவர்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. இதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

உலகத்தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும், பிரான்சு நாட்டில் நகராட்சி உறுப்பினராக பதவி வகிப்பவரும், பிரெஞ்சு குடிமகனுமான திரு. அலன் ஆனந்தன் உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வந்தபோது விமான நிலையத்திலேயே அவரை இந்தியக் குடியேற்ற அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இது போன்ற கசப்பான அனுபவங்கள் இதற்கு முன் வெளிநாட்டுத் தமிழர்கள் பலருக்கு நேர்ந்துள்ளனது.

இந்தியாவிலுள்ள பிற தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகள் ஒருபோதும் நிகழவில்லை. ஆனால் தமிழர்களுக்கு மட்டும் இத்தகைய அவமதிப்புகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. உலகெங்கும் பரந்து வாழ்ந்து தம் தமிழ்மொழி மூலமான படைப்பாற்றலை அந்நியச் சூழலிலும் தொய்ய விடாது வளர்த்துத் தாமாகவே கவிதை, கதை, கட்டுரை படைத்தும் தாம் வாழும் நாட்டின் மொழி நூல்களைத் தமிழாக்கியும் அவ்வவ்நாடுகளிலும் இந்தியாவின் அவ்வவ் மாநிலங்களிலும் பதிப்பித்து வெளியிடும் நூல்களையும் பருவ இதழ்களையும், தமிழ்நாட்டு நூலகங்களிலும் கிடைக்குமாறு தமிழக அரசு அந்த நூல்களையும் இதழ்களையும் ஆண்டு தொறும் வாங்கிடல் வேண்டும் என இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

9. உலகங்கெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் அடையாளங்களைப் பேணுமாற்றான் தத்தம் மழலைகளுக்கும் சிறார்களுக்கும் இளவல்களுக்கும் வார இறுதியில், பள்ளிகள் நடத்தித் தமிழ்மொழி, தமிழ் இசைமற்றும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளைப் பயிற்றுவிக்க, நிதி உதவி வழங்கித் தமிழ் அடையாளப் பேணலை ஊக்குவிக்கின்ற ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆசுதிரேலிய பசிபிக் நாடுகளின் அரசுகளுக்கு இந்த மாநாடு நன்றி தெரிவிக்கின்றது.

Friday, August 29, 2008

வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச கருணாநிதி முன்வரவேண்டும்-பழ.நெடுமாறன்

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.


1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.


அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.


அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.


1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.


1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.


பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.

Saturday, August 2, 2008

இரசினிகாந்தை கிழித்த அவரது இரசிகர்களை தமிழர்கள் பாராட்டவேண்டும்

இரசினிகாந்து நடித்து தற்போது வெளிவந்துள்ள “குலேசன்” என்ற திரைப்படம் கோயம்புத்தூரில் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பேனர்களைக் கிழித்து இரசிகர்கள் இரசினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு உருவான நிலையில் அதைக் கண்டித்து, சென்னையில் திரைத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் பேசிய இரசினிகாந்து, கன்னட வெறியர்களைக் கண்டித்து பேசினார்.

இப்போது இரசினிகாந்து நடித்த "குசேலன்' திரைப்படம் கர்நாடகத்தில் திரையிடப்படுவதற்கு கன்னட இரக்சண வேதிகே என்ற அமைப்பினரிடமிருந்து எதிர்ப்பு ஏற்பட்டது.

எனவே, சென்னைக் கூட்டத்தில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ரஜினிகாந்து அறிக்கை வெளியிட்டார்.

கர்நாடக மாநிலத்தில் குசேலன் படத்தை திரையிட முடிவு செய்த திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நடிகை செயமாலா இதை பெங்களூரில் வியாழக்கிழமை அறிவித்தார்.

தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்று சென்னை உண்ணாவிரதத்தில் பேசிவிட்டு, தனது திரைப்பட வசூல் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக கன்னட ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிப்பதா என்று இசினி மீது அவருடைய இரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.

கோயம்புத்தூரில் குசேலன் படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகங்களில் அப் படத்தின் பதாகைகளை அவர்கள் கிழித்து எறிந்தனர்.

இரசினிகாந்தின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு அவரது முகத்திரையை கிழித்தெரிந்த இரசினிகாந்தின் இரசிகர்களை ஒவ்வொரு தமிழனும் பாராட்டவேண்டும்.

Wednesday, July 30, 2008

வங்கி சேவைப் படிவங்கள் தமிழில் வழங்கவேண்டும்: ரிசர்வ் வங்கி ஆணை

வங்கிகளின் பல்வேறு சேவைகள், திட்டங்களை வாடிக்கையாளர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழில் விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் வணிக வங்கிகளை சாதாரண மக்கள் எளிதில் அணுகி, பல்வேறு சேவை வசதிகளை தயக்கம் இன்றி எளிதில் பெறச் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது. தற்போது இதுகுறித்து வழிகாட்டும் கையேடுகளை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விண்ணப்பங்களையும் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உள்பட வட்டார மொழிகளில் புரியும் வகையில் வெளியிட வேண்டும்.

கணக்குகளைத் தொடங்கவும், பணம் செலுத்தவும் தினமும் பயன்படுத்தும் படிவங்கள், சேமிப்புக் கணக்குப் புத்தகங்களையும் மும்மொழிகளிலும் வெளியிட வேண்டும்.

வாடிக்கையாளர் குறித்த பல்வேறு விவரங்களை மிகவும் கமுக்கமாக வைத்திருக்க வேண்டும். தனியார் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது.

பண பரிமாற்றம் குறித்த முழு விவரங்களையும் வாடிக்கையாளரின் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். கணக்குப் புத்தகம், மாத கணக்கு அறிக்கையை இலவசமாக வங்கிகள் வழங்க வேண்டும்.

கடன் அட்டைகள் வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான விதிமுறைகள் குறித்து தமிழில் வெளியிட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கான சேவை தொடர்பாக மேலும் பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நன்றி: தினமணி, 30.07.2008.

Thursday, July 24, 2008

தமிழ் ஓசை நாளிதழுக்கு அரசு விளம்பரம் இரத்து

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு நாளிதழான தமிழ் ஓசைக்கு பாமக-திமுக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அரசு விளம்பரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ம.க. தலைவர் கோ.க. மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Monday, July 21, 2008

விளைவுகள் மோசமானதாக இருக்கும்! - பழ. நெடுமாறன்

1983-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவர்களின் படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கும் சிறைவாசத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழக மீனவர்களின் முடிவில்லாத துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை. மாறாக அவ்வப்போது கண்டன அறிக்கைகள் வெளியிடுவதன் மூலமும் பிரதமருக்குக் கடிதங்கள் அனுப்புவதன் மூலமும் தமிழக முதல்வர்கள் தங்கள் கடமை தீர்ந்து விட்டதாகக் கருதினார்கள்.

மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் மத்தியில் ஆளும் கூட்டணிக் கட்சியாகவும் விளங்கும் தி.மு.க.வின் தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி திடீரென விழித்துக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். இவரது கட்சியின் ஆதரவு மத்திய ஆட்சி நீடிப்பதற்கு மிக மிக இன்றியமையாததாகும்.

இந்த நிலைமையில் தில்லிக்கு எச்சரிக்கை விடுவதற்குப் பதில் தமிழக முச்சந்திகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாகும். தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துப் பாமர மக்களை ஏமாற்றுவதாகும்.

யாருக்கு எதிராக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. மத்திய அரசுக்கு எதிராக என்றால் அந்த அரசில் தி.மு.க.வும் ஓர் அங்கமாகும். அப்படியானால் தன்னை எதிர்த்து, தானே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது.

இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு இந்தியா. ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான இந்தியாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை. தமிழக மீனவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதை இந்தியாவுக்கு விடப்பட்ட அறைகூவலாக அல்லது குறைந்தபட்சம் அவமானமாகவோ கூட இந்திய அரசு கருதவில்லை.

ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவருக்குக்கூட இந்திய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னஞ்சிறிய இலங்கைக்கு இந்தத் துணிவு எங்கே இருந்து கிடைத்தது? தொடர்ந்து தமிழக மீனவர்களை வேட்டையாடுவதன் நோக்கமென்ன? இதற்குப் பின்னணியில் வேறு நாடுகள் உள்ளனவா? என்ற கேள்விகள் நமது உள்ளங்களைக் குடைகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னால், கடந்த கால இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இலங்கை இனப் பிரச்னையில் கையாண்ட அணுகுமுறை என்பது கீழ்க்கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.

1. இந்தியாவின் செல்வாக்குக்கு உள்பட்ட ஒரு நாடாக இலங்கை கருதப்பட்டது.

2. இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்னையில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தயங்கின.

3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வு காண முயல்வதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

4. இலங்கைக்கு எந்த வெளிநாடாவது ராணுவ ரீதியாக உதவி அளிக்க முன் வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும்.

5. திரிகோணமலை மாவட்டத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலோ அன்னிய ராணுவத் தளங்கள் அமைவதை இந்தியா எதிர்க்கும்.

6. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில், குறிப்பாக, திரிகோணமலை பகுதியின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாசாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.

இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக இந்தியாவின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட சிங்கள அரசின் பயங்கரவாதம் செயலிழந்தது.

இந்திய அரசின் நிர்பந்தத்தின் விளைவாக தமிழர் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு சிங்கள அரசு ஆளாக்கப்பட்டது.
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஓரளவுக்கு தமிழர்களின் நலன்களைக் காக்கும் வகையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதை சிங்கள அரசு முதலில் தள்ளிப்போட்டது. பிறகு மறுத்துவிட்டது.

இந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்ற பிறகு, இலங்கை இனப் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை தலைகீழ் மாற்றம் கண்டது.
இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரி, இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் ஆகிய இருவரும் ராஜீவின் ஆலோசகர்களாக விளங்கினார்கள். இந்திராவின் ஆலோசகராக இருந்த ஜி. பார்த்தசாரதி, வெளியுறவுத்துறைச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் அலட்சியப்படுத்தப்பட்டு தாமாகவே வெளியேறினர்.

இலங்கை இனப்பிரச்னையில் ராஜீவின் அணுகுமுறை என்பது சிங்கள அரசுடன் ஆதாயமில்லாத சமரசம் செய்து கொள்ள வழி வகுத்தது. இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதற்கு எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது.

சிங்களப் படையினருக்கு மேற்கு நாடுகளைச் சேர்ந்த கூலிப் படைகளும் இஸ்திரேலிய மொசாட் படையினரும் பயிற்சி அளித்தனர். அமெரிக்காவின் ராணுவ செல்வாக்கு இலங்கையில் ஊடுருவியது.

இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்குப் பதில் ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதில் சிங்கள அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டது.
ராஜீவ் கடைப்பிடித்த இந்தக் கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன.

1. ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமையத் தொடங்கின.

2. இலங்கை இனப்பிரச்னைக்கு சிங்கள அரசு கூறிய தீர்வை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளைத் தடுப்பதற்கு ராஜீவ் அரசால் இயலவில்லை.

4. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை இடமளித்தது.

5. திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையினருக்குத் தேவையான எண்ணெய்க் கிடங்குகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டபோது இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இந்தியா, அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்து தோற்றது.

இலங்கை இனப்பிரச்னையில் ராஜீவின் கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென்னாசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்குத் துணை புரிந்தன. தென்னாசியப் பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும்.

இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவப் பொருளாதார உதவிகள் இக்கொள்கையின் விளைவே ஆகும். தென்னாசியாவைப் பொருத்தவரை இந்தியாவை அதனுடைய எல்லைக்குள்ளாகவே அடங்கியிருக்கும்படி செய்ய அமெரிக்கா விரும்புகிறது.

டிகோ - கார்சியா தீவில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அமெரிக்கக் கடற்படைத் தளம் தொடர்ந்து இருப்பதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். எனவே, இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேறு தளம் அமெரிக்காவுக்குத் தேவை. அதற்காக இலங்கை மீது ஒரு கண் வைத்துள்ளது.

மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கும் நடுவே முக்கியமான நாடாக இலங்கை திகழ்கிறது. எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

அமெரிக்காவின் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு ராஜீவின் கொள்கை துணை நின்றது. ஆனால் இதன் விளைவாக இந்தியாவுக்குப் பேரபாயம் நேர்ந்துவிட்டது.

தென்னாசிய நாடுகளின் அமைப்பிற்கு இயற்கையான தலைவராக இந்தியா இருந்தபோதிலும் அந்தத் தலைமையை மதிக்க மற்ற நாடுகள் தயாராக இல்லை. தென்னாசியப் பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்டுவிட்டன. இந்தியாவைச் சுற்றி அந்த நாடுகள் இப்போது வியூகம் அமைத்துள்ளன. இந்த வியூகத்தின் ஓர் அங்கமே இலங்கையாகும்.

இந்த வியூகத்துக்கு பக்கபலமாக அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் உள்ளன. இந்த வியூகம் பலம் பெறுவது இந்தியாவின் சுதந்திரத்துக்கு அபாயத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இன்னமும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உணரவில்லை.

அன்னிய நாடுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்பதற்கு இந்திய அரசு கையாளும் உத்தி மிக வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ராணுவ உதவியை இலங்கை பெறுவதைத் தடுக்க வேண்டுமானால் இந்தியாவே முந்திக் கொண்டு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க வேண்டும் என தில்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கருதுகிறார்கள். அதன்படியே செயல்படுகிறார்கள். இதன் மூலம் இலங்கை மேலும் துணிவு பெற்றுவிட்டது. தன்னை தாஜா செய்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி இல்லை என்று கருதுகிறது.

இலங்கையில் சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவும் பிற நாடுகளும் ராணுவ ரீதியான உதவிகளையும் நிதி உதவிகளையும் அள்ளி அள்ளித் தருவது என்பது எதற்காக? இந்நாடுகளின் பொருள்களை விற்பதற்கு இலங்கை பெரிய சந்தை அல்ல. இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையைப் பயன்படுத்துவதுதான் இந்நாடுகளின் நோக்கமாகும்.

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் ( பட்ங் ஐய்க்ண்ஹய் ஞஸ்ரீங்ஹய் - அ நற்ழ்ஹற்ஹஞ்ண்ஸ்ரீ டர்ள்ற்ன்ழ்ங் ச்ர்ழ் ஐய்க்ண்ஹ) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அதனால் ஆபத்து வந்து சேரும்''.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இந்த உண்மையை மிகத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் உணர்ந்திருந்தார். அன்னிய வல்லரசுகள் எதுவும் இலங்கையில் காலூன்ற அவர் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள இன வெறி அரசை அனுமதிக்கவும் இல்லை. அவர் உயிரோடு இருந்த காலம் வரையில் எந்த அன்னிய வல்லரசும் இலங்கையில் கால்தடம் பதிக்கத் துணியவில்லை.

ஆனால் ராஜீவ் கையாண்ட தவறான அணுகுமுறையின் விளைவாக இலங்கையில் அன்னிய வல்லரசுகள் தடம் பதித்தன. இதன் விளைவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் துணிவு சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய இந்திய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. அதுவும் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. அதற்குக் காரணம் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையேயாகும்.
இலங்கையை தாஜா செய்வதற்காக தமிழக மீனவர்களைப் பலி கொடுக்கவும் இந்திய அரசு தயங்கவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கும்போது இந்தியக் கடற்படை ஒருபோதும் தலையிடாது என்ற நம்பிக்கையும் துணிவும் சிங்களக் கடற்படைக்கு உள்ளது. அதற்கேற்றாற்போல இந்திய அரசு நடந்து கொள்கிறது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது என்பது இலங்கையைத் திருப்தி செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சகோதர மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர். அவர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இலங்கையும் அதைப் பின்னணியில் இருந்து இயக்குகிற அன்னிய நாடுகளும் விரும்புகின்றன.

சிங்களக் கடற்படைக்கும் சிங்கள அரசுக்கும் எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒழிய இந்தியாவின் நலன்களை ஒருபோதும் பாதுகாக்க முடியாது. இலங்கை அரசைத் திருப்தி செய்ய இந்தியா எவ்வளவுதான் விட்டுக் கொடுத்தாலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்றபோது இந்தியாவின் பிரதமராக இருந்த சாஸ்திரி, அதை ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஐந்தரை லட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

இலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் இந்திய அரசு தயங்கவில்லை. இப்படியெல்லாம் செய்தும் கூட சிங்கள அரசின் போக்கில் மாற்றம் வரவில்லை.

1962-ஆம் ஆண்டில் இந்தியா சீனா எல்லைப் போர் வெடித்தபோது சீனாவை ஆக்கிரமிப்பாளர் என அறிவிக்க வேண்டுமென இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் வற்புறுத்தியபோது அதற்கு இணங்குவதற்கு பிரதமர் பண்டாரநாயகா மறுத்துவிட்டார்.

1971-ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் இலங்கை வழியாகச் சென்று கிழக்கு வங்காளத்தில் குண்டுகள் வீச, சிங்கள அரசு அனுமதித்தது.

வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுக்க சிங்கள அரசு ஒருபோதும் தயங்கவில்லை. இந்தியாவிடமிருந்து ராணுவ, நிதி உதவிகளை வரைமுறையின்றி பெற்றுக் கொண்டு வரும் சிங்கள அரசு, சிறிதளவு நன்றி கூட இந்தியாவுக்குக் காட்டவில்லை. வரலாறு சுட்டிக்காட்டியுள்ள இந்த உண்மைகளை எண்ணிப் பார்க்கத் தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும்!
நன்றி: தினமணி

Friday, July 4, 2008

திருடர்களின் அவை-புதுச்சேரி அரசு தலைமைச் செயலர்

அமைச்சரவை என்பது
“திருடர்களின் அவை”
-புதுச்சேரி அரசு தலைமைச் செயலர்

உண்மைதான்!

திருடர்களுக்கு ஒத்துப்போகும்
அரசு அதிகாரிகளை
எப்படி அழைக்கலாம்...

அதிகாரிகள் என்பவர்கள்
அயோக்கியர்கள்...

அனைத்தையும் வேடிக்கை பார்க்கும்
மக்களை என்னவென்று அழைக்கலாம்...
............ ................. .................. ................... ..............

Tuesday, July 1, 2008

செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் அலுவலகத்தை 2008, சூன் 30 திங்கட்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதல்வர் அவர்கள்: 150 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழி ஆக வேண்டும் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். சூர்யநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று தூய தமிழில் மாற்றிக் கொண்டவர்.அவர் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு' என்ற நூலில் தமிழைச் செம்மொழி என்று கூறுவதே பொருத்தமாகும் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை அள்ளி வீசியிருக்கிறார்.

அவரது கனவு இன்று நனவாகியுள்ளது. அதனால்தான் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.15 லட்சம் வழங்கினோம். மதுரை அருகே உள்ள பரிதிமாற் கலைஞரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னம் ஆக்கினோம்.அவரது வீட்டைப் பார்க்க நான் சென்றிருந்தபோது என் வாழ்நாளில் முதன்முறையாக அக்ரகாரத்தில் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மைசூரில் இயங்கி வந்தது. இதனை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று நடுவண் அமைச்சர் அர்சூன் சிங்கிடம் கோரிக்கை வைத்தோம். அதன்படி அந்த நிறுவனத்தின் அலுவலகம் இங்கே தொடங்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் விருது: தேசிய அளவில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட "தொல்காப்பியர் விருது' வழங்கப்படும்.

குறள் பீட விருதுகள்: வெளிநாட்டுத் தமிழ் அறிஞர் ஒருவருக்கும், வெளிநாட்டில் வாழும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இரண்டு குறள் பீட விருதுகள் வழங்கப்படும்.இளம் தமிழ் அறிஞர்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகை கொண்ட விருதுகள் வழங்கப்படும்.செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்த விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

இந்த விருதுகள் 2005-2006, 2006-2007, 2007-2008 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்கப்படும். மூன்று ஆண்டுகள் இந்தப் பணிகளைச் செய்யாமல் இருந்து விட்டதால் இப்போது விரைவுபடுத்தியிருக்கிறோம்.

இந்த விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் குழுவில் வா.செ. குழந்தைசாமி, எழுத்தாளர் செயகாந்தன், மா. நன்னன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும் பணி திங்கள்கிழமை மாலையே தொடங்கும்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பில் "கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை' ஒன்றை அமைக்க எனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி வழங்குகிறேன்.

இந்த ரூ.1 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்து அதிலிருந்து வரும் வட்டியிலிருந்து ஆண்டுதோறும் வரலாற்று பயன்மிக்க கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகளும், பொற்கிழிகளும் வழங்கப்படும். அரசின் சார்பில் வழங்கப்படுகிற விருதுகளைத் தவிர இந்த விருதுகள் தனியாக வழங்கப்படும்.

தமிழ் செம்மொழியாகி விட்டால் விலைவாசி குறையுமா? காவிரியில் தண்ணீர் வந்து விடுமா? பசி பட்டினி நீங்கி விடுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நாங்கள் அதையும் செய்துவிட்டு, தமிழைச் செம்மொழியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம் என்றார் கருணாநிதி.

விழாவில் செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் ஐம்பெருங்குழு, எண்பேராயம் குழு உறுப்பினர்களும் தமிழக அமைச்சர்களும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Thursday, June 26, 2008

தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் உலகின் பிற பகுதிகளிலாவது பல்கிப் பெருகட்டும்

மும்பை வாழ் ஏழைத் தமிழர்தம் குழந்தைகள் தமிழ் வழியில் கல்விபயில மும்பை மாநகராட்சி வாய்ப்பு அளித்து வருவதற்கு நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரத்தில், தற்போது 8-ம் வகுப்பை தமிழ் வழியில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி வருத்தமளிக்கிறது.

மும்பை பெருநகரில் தமிழர்கள் அதிகம். தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலிருந்தும்-படித்தவர், படிக்காதவர் இரு தரப்பிலும்- குறைந்தது ஒரு குடும்பம் அங்கே வாழ்கிறது. இவர்களில் வணிகம் செய்வோர், அலுவலகங்களில் பல நிலைகளில் வேலை பார்ப்போர் நீங்கலாக, பெரும்பகுதியினர் அன்றாட உழைப்பில் பிழைப்போர்.

தமிழ்நாட்டில் வாழ்கிறோம் என்ற கற்பிதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழர் மட்டுமே வாழும் இடங்கள் அங்கு உண்டு. நிறையச் சம்பாதிக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். ஆனால் ஏழைத் தமிழ்க் குழந்தைகள் படிக்க வாய்ப்புள்ள ஒரே இடம் மும்பை மாநகராட்சிப் பள்ளிகள். இவர்களுக்காக 48 தமிழ் வழிப் பள்ளிகள் உள்ளன. 15,000 குழந்தைகள் படிக்கின்றனர்.

எட்டாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வில் குஜராத்தி, கன்னட மொழிகளில் தேர்வு எழுத அனுமதி உள்ளபோது, தமிழுக்கு மட்டும் அனுமதியில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்குச் சென்ற இடமெல்லாம்... எதிர்ப்பு!

போதுமான ஆசிரியர், பாடப்புத்தகம் இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகக் கல்வி அலுவலர் சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லை. தற்போது மும்பை மாநகராட்சியில் பயிலும் குழந்தைகள், செலவு மிகுந்த ஆங்கில வழிக் கல்விக்கு மாற முடியாது. அடிப்படையில் அவர்கள் ஏழைகள். தற்போது படிப்பை தமிழ் வழியில் தொடர முடியாத சுமார் 800 குழந்தைகளுக்கு உதவிட தமிழக அரசு எந்த வகையிலாவது முயற்சிக்க வேண்டும்.

மத்திய ஆட்சியில் தொடர திமுகவின் ஆதரவை நம்பி இருக்கும் காங்கிரஸ் கட்சி மராட்டியத்தில் ஆட்சியில் இருப்பதால், தமிழக முதல்வரின் கோரிக்கையை நிச்சயம் தட்ட முடியாது.

மும்பைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள இன்னல், தொழில் காரணமாக மாநிலம் கடந்து, நாடு கடந்து செல்லும் தமிழர் அனைவருக்கும் உள்ளது. தமிழை மறக்காமல் இருக்கும் தமிழனைத் தமிழகம் மறந்துவிடுவது தொடர்கதையாக உள்ளது.

ஆங்கிலம் கற்க விரும்பும் அயல்மொழி மாணவர்களுக்காக இங்கிலாந்து அரசு வெளியிடும் இலக்கண நூல்கள், மொழிப் பயிற்சி நூல்கள் நிறைய. அதேபோன்று பிரஞ்சு மொழி, கலாசாரம், நுண்கலையை வளர்த்தெடுக்க தனிஅமைப்பு உள்ளது. அவர்கள் உண்மையாகவே அதற்காகப் பாடுபடுகிறார்கள். தங்கள் மொழியைக் கற்கும் அயல்மொழியினருக்காக எளிய கற்பித்தல் முறை, கற்றல் கருவிகள் அனைத்தையும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றியுள்ளனர்.

ஆனால் நமக்கோ, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் வம்சாவளியினருக்கும் தமிழைச் சொல்லித் தரவே வழியில்லை. இதன் விளைவாக, வெளிமாநிலம், வெளிநாடு வாழ் தமிழனின் குழந்தைகள் தமிழை மறக்கின்றனர். தென்ஆப்பிரிக்காவிலும், மொரீஷியஸிலும் தமிழ் வம்சாவளியினர் தேவாரம், திருவாசகத்தை ஆங்கில எழுத்தில் எழுதி, பிழையான தமிழ் உச்சரிப்புடன் பாடி வரும் அவலம் இதற்கு ஒரு சான்று.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்தம் குழந்தைகள் தடையின்றித் தமிழ் பயில, முடிந்தால் தமிழ் வழியில் பயில, ஆதரவான சூழலை, கற்றலுக்கான தொழில்நுட்ப வசதிகளை தமிழக அரசுதான் உருவாக்க வேண்டும்.

தமிழர் தூங்கும் பின்னிரவில் திரைப்பாடல்களை, திரைப்படங்களை ஒளிபரப்பும் ஊடகங்கள், அந்நேரத்தில் விழித்திருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தமிழ்மொழிப் பயிற்சி வகுப்புகளை ஒளிபரப்ப தமிழக அரசு நிபந்தனை விதிக்கலாம். இதனால் உறுதியாக ஒரு நன்மை உண்டு- ஆங்கிலம் கலவாத தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் உலகின் பிற பகுதிகளிலாவது பல்கிப் பெருகும்.
நன்றி: தினமணி