Monday, December 28, 2009

தமிழனை அவமதிக்கவா குடியேற்றத் துறை?

தஞ்சாவூரில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் உலகத் தமிழர் பேரமை‌ப்பு நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை, அவர் வந்திறங்கிய திருச்சி விமான நிலையத்திலேயே தடுத்தி நிறுத்தி, அவர் எங்கிருந்து வந்தாரோ அதே நகருக்கு மீண்டும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர் நமது நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள்.

உரிய பயண ஆவணங்களுடன் வந்த சிவாஜிலிங்கத்தை எதற்காக நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்பதை தெரிவிக்காமலேயே குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்றி மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல, எந்த ஒரு நாட்டிற்கும் வரும் அன்னிய நாட்டினரை அவர்கள் முறையான பயண ஆவணங்களுடன் வந்துள்ளனரா என்பதை சோதித்து அனுமதிக்கும் பொறுப்பு குடியேற்றத் துறைக்கு உண்டு. அவ்வாறு வருபவர்கள், வந்திறங்கும் அந்த நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பாதுகாப்புத் தொடர்பான வேறு காரணங்களுக்காகவே குடியேற்றத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுவதும், அவர்கள் எங்கிருந்து வந்தனரோ அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட சட்டப் பூர்வமான நடவடிக்கையே.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், முறையான பயண ஆவணங்களுடன் (விசா) வந்திருந்தாலும், என்ன காரணத்திற்காக நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வாய்மொழியாக மட்டுமின்றி, எழுத்துப் பூர்வமாகவே தெரிவிக்க வேண்டும். வந்திறங்கிய பயணிக்கு தான் என்ன காரணத்தி்ற்காக திருப்பி அனுப்பப்படுகிறோம் என்பது சட்டப் பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் பன்னாட்டு அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையே.

ஏனெனில், நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத அந்தப் பயணி, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதுவாரானால், அவர் தனது நாட்டிற்குச் சென்று சட்ட ரீதியாக நியாயம் பெற அந்த எழுத்துப்பூர்வமான விளக்கம் அவசியமானதாகும்.

ஆனால், இலங்கையின் .நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கைத் தமிழர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுள் ஒருவர் போன்ற தகுதிகள் மட்டுமின்றி, அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் சிவாஜிலிங்கம். இப்படிப்பட்ட தகுதிகள் கொண்ட ஒரு அண்டை நாட்டின் அரசியல் தலைவரை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்தது மட்டுமின்றி, அவரை நாடு கடத்த என்ன காரணம் என்பதை அங்கிருந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அவருக்கு தெரிவிக்கவில்லை!

தான் புறப்பட்ட துபாய்க்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட சிவாஜிலிங்கம், கொழும்பு வந்தடைந்தபோது அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தும், இந்தியா வருவதற்கான விசா பெற்றிருந்தும், தன்னை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காதது தனக்கு எந்த விதத்திலும் அவமானமில்லை, அது இந்தியாவிற்குத்தான் அவமானம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல தான் எப்படி நடத்தப்பட்டேன் என்பதையும் சிவாஜிலிங்கம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. “விமான நிலையத்தை சென்றடைந்த எனக்கு அங்கு தண்ணீர் அருந்துவதற்கோ கழிவறையை பயன்படுத்துவதற்கோ கூட அனுமதி தரப்படவில்லை. தொலைபேசியல் எவரையும் அழைக்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை. ஒருநாட்டின் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளன் நான். இவை எல்லாவற்றையும் விளக்கமளித்துக்கூட என்னை அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

தண்ணீர் குடிப்பதற்கும், கழிவறை செல்வதற்கும் கூட அனுமதியளிக்காததன் காரணமென்ன? இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் உலகில் எங்காவது நடந்துள்ளதா? தொலைபேசியில் கூட எவருடனும் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஒரு நாட்டிற்குள் வரும் (அந்நாட்டின்) அழையா விருந்தாளியாக இருந்தாலும், அவருடைய மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூட அனுமதி மறுப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது?

எந்தக் காரணமும் சொல்லாமல் அன்னிய நாட்டவர் ஒருவரை - அதுவும் அவர் தமிழராக இருந்தால் - காரணம் கூறாமல் வெளியேற்றும் ‘சட்டப் பூர்வமான’ அதிகாரம் கொண்டது இந்தியாவின் குடியேற்றத் துறை என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய வானளவிய அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ள உரிமை படைத்த குடியேற்றத் துறையும், நாட்டை காக்க கண் துஞ்சாமல் பாதுகாத்துவரும் உள்துறை அமைச்சகத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள ‘காரணமின்றி வெளியேற்றும் அதிகாரம்’ இந்த ஜனநாயக நாட்டில் கேள்விக்குட்படுத்த முடியாதது என்பதும் விவரம் தெரிந்த அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால் முறையான பயண ஆவணத்துடன் (விசா) வந்தவரை திருப்பி அனுப்புகிறீர்கள் என்றால் அதற்கான காரணத்தை அளிப்பதில் என்ன சிக்கல்? ஏன் தயக்கம்? சட்டப் பூர்வமான காரணம் இல்லை என்பதனாலா? அல்லது குடியேற்றத் துறையின் நடவடிக்கையின் பின்னால் உள்ள அரசியலா? என்ன காரணம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு விளக்கிட வேண்டும்.


ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

இப்படிப்பட்ட அநீதிகள் ஈழத் தமிழர்களுக்குத்தான் அதிகம் இழைக்கப்படுகிறது. இது அனுபவப்பூர்வமாக நாமறிந்த உண்மை. சில மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த ஈழத் தமிழர் ஒருவரை - அவர் முறையான விசா பெற்று வந்த நிலையில் - ஒரு நாளெல்லாம் தடுத்து நிறுத்தி வைத்து - 16 மணி நேரத்திற்குப் பிறகு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார் சென்னை மீனம்பாக்கத்தில் பணியாற்றிய குடியேற்றத் துறை அதிகாரி.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் (அகதியாக) இந்தியா வந்திருந்தபோது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக அவர் தங்கியிருந்தார் என்றும், அதற்கான விதிப்படி இன்னும் ஓராண்டிற்கு அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது என்றும் அந்தக் குடியேற்றத் துறை அதிகாரி கூற, அதற்கு பதிலளித்த ஈழத் தமிழர், தான் இப்பிரச்சனையை உள் துறை அமைச்சகத்திற்கு விளக்கி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, அதனடிப்படையிலேயே விசாவிற்கு விண்ணப்பித்து அதனைப் பெற்று வந்துள்ளதாகவும் விளக்கியுள்ளார். ஆனால் அந்தக் குடியேற்ற அதிகாரியோ, “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் விதிப்படிதான் நடந்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அந்த விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள் என்று அந்தப் பயணி கேட்டதற்கு, அவ்வாறு எதையும் அளிக்க மறுத்த அந்த அதிகாரி, இரவு 11 மணி வரை இருந்து, அந்தத் தமிழரையும் அவருடைய குடும்பத்தினரையும் மீண்டும் விமானத்தில் ஏற்றிய பின்னர் - மிகுந்த கடமையுணர்வோடு - தனது பணியை முடித்துக் கொண்டு சென்றுள்ளார்!

இதுகுறித்து விசாரித்துபோது, இப்படி பல ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்ற விவரங்கள் தெரிந்தது. ஏன்? தமிழர்களுக்கு எதிராக மட்டும் இப்படிப்பட்ட முறையற்ற அணுகுமுறை எதனால் கடைபிடிக்கப்படுகிறது? இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசின் இன அழித்தலில் இருந்து தப்பித்து, ஆறரைக் கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் தங்கள் தாய் மண் என்று உலகத் தமிழர்கள் கருதும் தங்கள் தொப்புள் கொடி உறவுகளோடு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை மேற்கொள்ள வந்த ஈழத் தமிழர்களை - இந்தியாவின் குடியேற்றத் துறை அவமானத்திற்குட்படுத்துவது ஏன்? மத்திய உள்துறை அமைச்சகம் விளக்க வேண்டும்.

பன்னாடுச் சட்டங்களுக்கு இணங்க - அவர்கள் அகதிகளானாலும் அனைத்து மனித உரிமைகளுடனும் வாழ, பயணிக்க ஈழத் தமிழர்களுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமைகளை தங்களுக்கு (நாட்டின் பாதுகாப்பை உத்தேசித்து) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறை தவறிப் பயன்படுத்தி தமிழர்களையும், அவர்தம் தலைவர்களையும் அவமதிப்பதையும், குடியேற்றச் சட்டத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதையும் மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் சட்டப் பூர்வமான அதிகாரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதும் அந்ந நாட்டில் நிலவும் ஜனநாயகத்திற்கு ஒரு அளவுகோல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

Monday, December 14, 2009

எஸ்.எம்.கிருஷ்ணா கருத்து இரக்கமற்றது: ஜெயலலிதா

சென்னை, டிச. 14: கச்சத் தீவு பிரச்னையில் உண்மை நிலை தெரியாமல் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்த கருத்து இரக்கமற்றது என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"இந்திய அரசைப் பொருத்தவரையில் கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமானது' என நாடாளுமன்றத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியிருக்கிறார். இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள கச்சத் தீவு ராமநாதபுரம் மன்னரின் சொத்தாக (சர்வே எண்: 1250) இருந்தது. வறண்ட கச்சத் தீவை வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும், பிடிபட்ட மீன்களை இனவாரியாக வகைப்படுத்தவும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பரம்பரையாகப் பயன்படுத்தி வந்தனர்.

இந்தத் தீவில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் கட்டிய அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு மார்ச் இறுதியில் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் வட இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்பது வழக்கம்.

இது போன்ற காலங்களில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மத குரு செல்வார் என்று வரலாற்றுப் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் கச்சத் தீவு மீது இந்தியாவுக்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்குச் சான்றாக விளங்குகின்றன. ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறான கருத்தை எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

"பாம்பனுக்கு கிழக்கே 18 மைல் தொலைவில் கச்சத் தீவு உள்ளது. பாம்பன் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. கச்சத் தீவின் நிலைப்பாடும் தெரியாது" என்று நேரு பிரதமராக இருந்தபோது மாநிலங்களவையில் கூறியிருக்கிறார்.

"முக்கியத்துவம் இல்லாத வெறும் கற்பாறைதான் கச்சத் தீவு" என்று இந்திரா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கு சொந்தம் என நினைத்திருந்த கச்சத் தீவு ஒரே நாள் இரவில் வேறொரு நாட்டுக்கு சொந்தமாகிவிட்டதை அறிந்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள். இந்த முடிவு எடுக்கும்போது, தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை கருத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை.

அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அதைத் தடுக்கத் தவறிவிட்டார்.

கச்சத் தீவு தொடர்பாக 28.6.1974}ல் இந்திய}இலங்கை அரசுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதில், "இதுவரை கச்சத் தீவுக்கு வந்து கொண்டிருந்த மீனவர்களும், புனிதப் பயணிகளும், இனியும் அதே காரணத்துக்காக வந்து செல்லும்போது, பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டும் என இலங்கை கோராது" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், "கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; வலைகளை உலர்த்த கச்சத் தீவைப் பயன்படுத்தலாம்" என்று அப்போதைய வெளியுறவு அமைச்சர் சர்தார் ஸ்வரண் சிங் தெரிவித்துள்ளார்.

எனினும், கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்த 600 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதிலிருந்து, ஸ்வரண் சிங்கின் கருத்தை இலங்கை அரசு ஒப்புக்கொள்ளாதது போல் தெரிகிறது.

இப்போது, "தமிழக மீனவர்கள் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்க விரும்பினால், இயல்பாகவே இலங்கையுடன் நாம் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்" என்று கிருஷ்ணா சொல்வதிலிருந்து, தமிழக மீனவர்கள் குறித்த தனது அறியாமையையும், அவர்களின் மீதுள்ள அவமதிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

கிருஷ்ணா, இலங்கையுடன் எத்தகைய உடன்படிக்கையை, எப்போது ஏற்படுத்தப் போகிறார்? அதற்கு முன், இன்னும் எத்தனை தமிழக மீனவர்கள் உயிரிழக்க வேண்டும்? தமிழக முதல்வர் கருணாநிதி, மீனவர்களுக்கு எதையும் செய்ய ஏன் மறுக்கிறார்?

கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டது தவறு மட்டுமல்ல; சட்டப்படியான பிழை என்று அ.தி.மு.க. கருதுகிறது. எனவேதான் கச்சத் தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமானால், கச்சத் தீவை மீட்டாக வேண்டும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 15.12.2009

Wednesday, June 3, 2009

தமிழறிஞர் இரா.திருமுருகனார் இயற்கை எய்தினார்

இறப்பு அறிவிப்பு


தமிழறிஞர், முதுபெரும்புலவர்,
இலக்கணச்சுடர், இசைவாணர், முனைவர்


இரா திருமுருகனார்


அவர்கள் இன்று 03.06.2009 அறிவன் (புதன்) கிழமை
அதிகாலை 1.00 மணியளவில் இயற்கை எய்தினார்,
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தி. யமுனா (மனைவி)
தி.அறவாழி (மகன்)
அ.இரேணுகா அறவாழி (மருமகள்)
அ.செம்மல் (பெயரன்)
அ.தென்றல் கார்த்திக் (பெயர்த்தி)

Friday, May 29, 2009

ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்த‌ியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது: பழ.நெடுமாற‌ன் கண்டனம்; வைகோவும் குற்றச்சாட்டு

''ஐ.நா. சபை ம‌னித உ‌ரிமை‌க்குழு‌வி‌ல் இல‌ங்கை அரசு‌க்கு எ‌திராக கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு இ‌ந்‌தியா ஆதரவு அ‌ளி‌த்தது த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்‌தியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது'' எ‌ன்று இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இல‌ங்கை‌யி‌ல் ஒரு இல‌ட்ச‌த்து‌க்கு மே‌ற்ப‌ட்ட அ‌ப்பா‌வி த‌மி‌ழ் ம‌க்க‌ள் ‌சி‌ங்க இராணுவ‌த்‌தினரா‌ல் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு கொலை‌க்கு ஆளா‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌‌க்‌கிறா‌ர்க‌ள். 3 இல‌ட்ச‌த்‌தி‌ற்கு மே‌ற்ப‌ட்ட ம‌க்க‌ளி‌ன் ‌வீடுக‌ள் கு‌ண்டு ‌வீ‌ச்‌சினா‌ல் அடியோடு தக‌ர்‌க்க‌ப்ப‌ட்டு, சொ‌ந்த ம‌ண்‌ணிலேயே அக‌திகளாக‌ ஆ‌க்கப்ப‌ட்டு இராணுவ முகா‌ம்க‌ளி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு தொட‌ர்‌ந்து ‌சி‌த்திரவதை செ‌ய்ய‌‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

25,000-க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்து மரு‌த்துவ வச‌தி இ‌ல்லாம‌ல் இற‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். சமாதான‌ம் பேச வருமாறு இராணுவ‌த்‌தினரா‌ல் அழை‌க்க‌ப்ப‌ட்டு வெ‌ள்ளை‌க்கொடி ஏ‌ந்‌தி வ‌ந்த ‌விடுதலை‌ப்பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள் நடேச‌ன், பு‌லி‌த்தேவ‌ன் உ‌ள்பட அவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தினரு‌ம் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு இரு‌க்‌கிறா‌ர்க‌‌ள்.

இ‌வ்வாறு அ‌ப்ப‌ட்டமாக ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களை செ‌ய்த ராஜப‌க்சவை போ‌ர் கு‌ற்றவா‌ளியாக ‌விசா‌ரி‌க்க வே‌ண்டு‌ம் என அமெ‌ரி‌க்காவு‌ம், மே‌ற்கு நாடுகளு‌ம் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு எ‌திராக இ‌ந்‌‌தியா வா‌க்க‌ளி‌த்து அதை தோ‌ற்கடி‌த்‌திரு‌ப்பது த‌மிழ‌ர்களு‌க்கு பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இது வெ‌ந்த பு‌ண்‌ணி‌ல் வே‌ல் பா‌ய்‌ச்சுவதாக உ‌ள்ளது

இல‌ங்கை‌க்கு ‌மிக அரு‌கி‌ல் இரு‌க்க‌க்கூடிய ஒரே நாடான இ‌‌ந்‌தியாவு‌க்கு இ‌ந்த உ‌ண்மைக‌ள் தெ‌ரியாம‌ல் இரு‌க்க முடியாது. எ‌‌ல்லா உ‌ண்மைக‌ளு‌ம் தெ‌ரி‌ந்து‌ம் மனசா‌ட்‌சி‌க்கு எ‌‌திராக இ‌ந்‌தியா ‌சி‌ங்கள வெ‌றி அரசு‌க்கு ஆதரவாக செய‌ல்ப‌ட்டிரு‌ப்பதை த‌மி‌ழ்‌ச் சமுதாய‌ம் ஒருபோது‌ம் ம‌‌ன்‌னி‌க்காது.

த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்‌தியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது. போ‌ர் கு‌ற்ற‌ம் பு‌ரி‌ந்த ராஜப‌‌க்சவை பாதுகா‌‌ப்ப‌தி‌ன் மூல‌ம் அ‌ந்த கு‌ற்ற‌த்தி‌ற்கு இ‌ந்‌‌தியாவு‌ம் உட‌ந்தையாக இரு‌க்‌கிறது எ‌ன்பதை உலக‌ச் சமுதாய‌ம் உண‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இ‌ந்‌திய அர‌சி‌ன் இ‌ந்த போ‌க்கை நா‌ன் வ‌ன்மையாக க‌ண்டி‌க்‌கிறே‌ன்'' எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌‌தியா‌ ‌மீ‌ண்டு‌ம் தவறு செ‌ய்து‌ள்ளது : வைகோ

ஐ.நா.சபை‌யி‌ல் ந‌ட‌ந்த ஓ‌ட்டெடு‌ப்‌பி‌ல் இல‌‌ங்கை‌க்கு ஆதரவாக ஓ‌ட்டு போ‌ட்டு‌ள்ளத‌ன் மூல‌ம் இ‌ந்‌திய அரசு இ‌ப்போது ‌மீ‌ண்டு‌ம் ஒரு தவறை செ‌ய்து‌ள்ளது'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் இ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ பேசுகை‌யி‌ல், ஈழ‌த்‌தி‌‌ல் நடைபெ‌ற்ற துயர‌ங்களு‌க்கு இ‌ந்‌‌திய அரசுதா‌ன் காரண‌ம். துயர‌ம் ‌எ‌‌ன்றவுட‌ன் வேறு எதையு‌ம் க‌ற்பனை செ‌ய்து‌விட வே‌ண்டு‌ம். துயர‌ம் எ‌ன்று நா‌ன் சொ‌ன்னத‌ற்கு காரண‌ம் இல‌ங்கை த‌மிழ‌ர்களை கருவறு‌க்கு‌ம் இ‌ந்த செயலு‌க்கு இ‌ந்த அரசு துணை போகு‌ம்போது நா‌ம் எதுவு‌ம் செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பதை‌ தா‌ன் துயர‌ம் எ‌ன்றே‌ன்.

இ‌ந்‌திய ‌விடுதலை‌க்கு முத‌லி‌ல் போராடியது தெ‌ன்னாடுதா‌ன். அ‌ந்த ‌வீர ச‌ரி‌த்‌திர‌ம் இ‌ந்த ம‌ண்ணு‌க்கு உ‌ண்டு. அ‌ப்படி‌ப்ப‌ட்ட இ‌ந்த ம‌‌ண்‌ணி‌ல் இ‌ன்று த‌மி‌ழ் உண‌ர்வு அ‌ழி‌க்க‌ப்படு‌கிறது. ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் வரலா‌ற்‌றி‌ல் இது ஒரு ‌சி‌றிய இடைவெ‌ளி. நாடாளும‌ன்ற‌த்திி‌ல் எ‌ன் குர‌ல் ஒ‌லி‌க்கா ‌வி‌ட்டாலு‌ம் ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்தில்‌ல் எ‌ன் குர‌ல் ஓ‌ங்‌கி ஒ‌லி‌க்கு‌ம்.

இ‌ந்‌திய அரசு இ‌ப்போது ‌மீ‌ண்டு‌ம் ஒரு தவறு செ‌ய்து‌ள்ளது. ஐ.நா.சபை‌யி‌ல் ந‌ட‌ந்த ஓ‌ட்டெடு‌ப்‌பி‌ல் இல‌‌ங்கை‌க்கு ஆதரவாக இ‌ந்‌தியா ஓ‌ட்டு போ‌ட்டு‌ள்ளது. உல‌கி‌ல் யாரு‌க்கு‌ம் ஏ‌ற்படாத கொடுமை த‌மிழ‌ர்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு இது த‌ற்கா‌லிக வெ‌ற்‌றிதா‌ன். அதுவு‌ம் இ‌ந்‌தியா உத‌வி செ‌ய்து ஆயுத‌ங்களை, ‌வீர‌ர்களை அனு‌ப்‌பியதா‌ல் ‌கிடை‌த்த வெ‌ற்‌றி.

கட‌ந்த 5 மாத‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் ஒரு இல‌ட்ச‌த்து 45 ஆ‌யிர‌ம் த‌மிழ‌ர்க‌ள் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மூ‌ன்றரை இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் பாதுகா‌ப்பு இ‌ல்லாம‌ல் உ‌ள்ளன‌ர். இது இ‌ந்‌‌திய அர‌சி‌ன் துரோக‌ம். இ‌தி‌லிரு‌ந்து அவ‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌மீ‌ளுவா‌ர்க‌ள். எ‌ன்று வைகோ பே‌சினா‌ர்.
நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, March 31, 2009

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் முதல்வர்: நெடுமாறன் கண்டனம்

ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியில் தமிழீழம் உருவானால் அதைப் பார்த்து என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் கடந்த 50 ஆண்டு காலமாக ஈடுபட்டு வருவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வருக்கு, இலங்கையின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்களவர் என்பதும், 30 சதவீதமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாதா?

ஈழத் தமிழரிடையே வாக்கெடுப்பு என்று கூறாமல் இலங்கை மக்களிடையே வாக்கெடுப்பு என்று கூறுவது பிரச்சினையை வேண்டுமென்றே குழப்புவதாகும்.

1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ பிரச்சினை முன்வைக்கப்பட்டு மிகப்பெருவாரியான தமிழர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குப் பின் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் தமிழீழ ஆதரவு வேட்பாளர்களையே தமிழர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தமிழீழம் வேண்டும் என ஈழத்தமிழர்கள் தேர்தல் மூலம் பலமுறை தீர்ப்பளித்திருப்பதை ஏற்று அதற்கு அங்கீகாரம் தர இந்திய அரசு முன்வர வேண்டும் என வற்புறுத்த வேண்டிய தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் செயல்படும் கருணாநிதியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

Thursday, March 26, 2009

இலங்கைக்கு நாங்கள் செல்லத் தயார்: கருணாநிதிக்கு நெடுமாறன் சவால்

தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவ செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம். முதலமைச்சர் கருணாநிதி, அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையை நோக்கி இராணுவ அணிவகுப்பு நடத்தட்டுமே! அந்த நாட்டின் அரச தலைவர் ராஜபக்சவை முறியடித்துத் திரும்பட்டுமே! இங்கே யார் குறுக்கே நிற்கிறார்கள்? நாளைக்கே தோணிகளை தயார் செய்யட்டும். அவை கள்ளத் தோணிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அவற்றில் படைகளை ஏற்றிச் செல்லட்டும். கோழைகளாகிய நாங்கள் கண்கொட்டாமல் அவற்றைப் பார்த்து களிக்கிறோம் கைதட்டி ஜெயகோசம் போடுகிறோம்" என முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இப்போது இவ்வாறு கூறுபவர் கடந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். யாழ். மக்களுக்கு உணவு அனுப்பாமல் சிங்கள அரசு பட்டினி போட்ட போது அந்த மக்களுக்கு உதவ 2007 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 12 ஆம் நாள் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் ஆகிய இடங்களிலிருந்து படகுகள் மூலம் உணவு - மருந்துப் பொருட்களை ஏற்றிச் செல்ல நாங்கள் முயன்ற போது எங்களுக்கு படகுகள் தரக்கூடாதென மீனவர்களை மிரட்டி, எங்களைப் போக விடாமல் தடுத்து கைது செய்தவர் இதே முதலமைச்சர் கருணாநிதி என்பதை அவருக்கு நினைவுப் படுத்துகிறேன்.

இவ்வளவுக்கும் நாங்கள் போர்ப் படைத் திரட்டிச் செல்லவில்லை. மனித நேயத்துடன் எங்கள் சகோதரத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லத்தான் முயன்றோம்.

அதையே தடுத்தவர், இப்போது படகுகளில் ஏறி நாங்கள் செல்வதற்கு குறுக்கே நிற்கப் போவதில்லை என அவர் கூறுவது உண்மையாக இருந்தால் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவச் செல்வதற்குத் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் அதற்குரிய நாளைக் குறிக்கட்டும் என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த பல்கலைக்கழகத்தின் ஒரு அரங்கில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் அவரை நோக்கி செருப்பை வீசி “இது ஒரு மோசடி’ என்று கத்தினார். “இந்த சர்வாதிகாரி இங்கே பொய்கள் சொல்லிக் கொண்டிருப்பதை எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடியும்” என்று அந்த இளைஞர் தெரிவித்தார். ...

விரிவு...

Tuesday, March 24, 2009

போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது: அமைச்சர் நிமால்

இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததேயில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஒத்துழைப்புக் காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவு முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்புக்கு ஏற்ப இலங்கை அரசியல் நகர்வை மாற்றியமைக்க முடியாது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் நிமால் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகபெரும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆகியோரே இவ்வாறு கூறினர்.


அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா இது தொடர்பாகக் கூறியவை வருமாறு:

இந்தியாவின் தலையீட்டுடன்தான் 13ஆவது திருத்தச்சட்டம் இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி அதிகாரப் பகிர்வு என்ற இந்தியாவின் ஆசை அப்போது இந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது நிலைமைவேறு.

இலங்கையில் யுத்தம் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. அதற்கான உதவியையும் அது எமக்குச் செய்கின்றது. ஆனால், எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் எமக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.

இந்தியா எமக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அந்நாடு மருந்துப் பொருள்களையும் வைத்தியர்களையும் எமக்குத் தந்துள்ளது. இன்னும் உதவ முன்வந்துள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திங்கட்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினார். பல உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா தயராக இருப்பதாக தூதுவர் என்னிடம் கூறினார் என்றார்.


ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுயதாவது:

இந்தியா எமது யுத்த நடவடிக்கையை ஏற்றுள்ளது. எமது படையினர் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்யும் அதேவேளை, அப்பாவி மக்களையும் காப்பாற்றுகின்றனர் என்றார்.
யுத்தம் நடைபெறும் எந்தவொரு நாட்டிலும் எமது படையினர் போல் மனிதாபிமானத்துடன் எவரும் செயற்படுவதில்லை. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இதை நன்கு விளங்கி வைத்துள்ளன. அவை ஒருபோதும் யுத்தத்தை நிறுத்த முற்படமாட்டா என்றார்.


அங்கு வைத்து விமல் வீரவன்ஸ கூறியவை வருமாறு:

இந்தியா நினைத்தால் யுத்தத்தை நிறுத்தவும் முடியும். அதைத் தொடர வைக்கவும் முடியும். ஆனால், இது தொடர்பில் இந்தியா எமக்கு எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. இது தொடர்பாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

அதேவேளை, நாம் ஏனைய நாடுகளின் தேவைக்கு ஏற்ப எமது அரசியல் நடத்தைகளை மாற்றியமைக்க முடியாது.

அரசியல் நடத்த வேறு கோஷம் எதுவும் இல்லாதவர்களே இந்தியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்திய வைத்தியர்கள் இங்கு வந்தமை பிழை என்கின்றனர் என்றார்.

நன்றி: தமிழ்வின.காம்

Monday, March 23, 2009

5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்: வைகோ

இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர்.

இந்த துரோகத்திற்கு நாம் பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளா வைகோ தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் பாலசுந்தரம் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார்.

பாலசுந்தரத்திற்கு மலரஞ்சலி செலுத்துவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்தார். பாலசுந்தரத்திடம் மனைவி செல்வத்திற்கு 10ஆயிரம் பணம் கொடுத்தார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பண உதவிகள் வரும் என வைகோ தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், இலங்கையில் வன்னிப் பகுதியில் ‘’ சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று எல்லோரையும் கொன்று குவிக்கிறது சிங்கள இராணுவம்.

உலக நாடுகள் எல்லாம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறது. அப்படி இருந்தும் இலங்கை அரசு சம்மதிக்க மறுக்கிறது.

இப்படிப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவுகிறது. இந்திய கப்பலில், இந்தியா இராணுவத்தினர் 5ஆயிரம் பேர் இலங்கை சென்றுள்ளனர்.

இந்த துரோகத்திற்கு நாம் நல்ல பாடம் புகட்டியே ஆகவேண்டும்’’ என்று வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Sunday, March 22, 2009

இலங்கையில் போரில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை விவர ஐ.நா. ஆவணம் வெளியிடப்பட்டது

இலங்கையில் இவ்வருடம் ஜனவரி 20ஆம் திகதியில் இருந்து மார்ச் 7ஆம் திகதி வரையில் 2683 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் தெரிவித் திருக்கின்றது.

ஐ.நாவின் ஆவணம் ஒன்று தற்செய லாக (உத்தியோகபூர்வமற்ற வகையில்) வெளிப்பட்டுவிட்டதில் இந்த விவரம் காணப்படுகிறது. இன்னர் சிற்றி பத்திரிகையில் இந்த ஆவணம் வெளியிட்டுள்ளது.

இப்போது இந்த ஆவணம் பல பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள், தூதுவர்கள் கைகளிலும் மூத்த ஐ.நா. அரசியல் மற்றும் மனித உரிமை அதிகாரிகளின் கைகளுக்கும் கிடைத்துள்ளது. வன்னிப் போரினால் பொதுமக்கள் இறந்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த தகவலை கொழும்பில் மனித உரிமைகள் அமைச்சர் மறுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த ஓர் அறிக்கையில் இலங்கையில் அரசாங்கமும் தமிழ்ப் புலிகளும் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதற்கு சாத்தியம் என்ற வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடுக்க இயலாது.
நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றீர்களா என்று அந்த நீதிமன்றத்தின் வழக்குத் தொடுனரான லூயிஸ் மோரேனோ ஏகாம்போவிடம் இன்னர் சிற்றிப் பிளேஸ் செய்தியாளர் கேட்டார்.

ஒகாம்போ அதற்கு பதிலளிக்கையில் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்ட தரப்பினராக இல்லை என்றார்.

மேலும் மிக அண்மையில் தாம் ஆபிரிக்காவில் மாத்திரமே போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முயற்சிப்பதாக ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தம்மீது குற்றஞ்சாட்டியிருந்தாகக் கூறினார்.

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோப்பு ஒன்றை அல்லது விவர ஆவணம் (Data Base) ஒன்றைத் திறந்திருக்கிறது என்ற தகவலை ஒகாம்போவுடன் பிரயாணங்களில் ஈடுபடும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அலுவலர் ஒருவர் இன்னர் சிற்றி பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெற்றிருக்காமையால் சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும் பாலஸ்தீனியர்களைப் போன்று இலங்கைத் தமிழர்கள் தமக்கு நியாயாதிக்கம் அதாவது சட்டப் பாதுகாப்பு (Jurisdiction) வழங்கும்படியாகவும் கூட இன்னும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி: புதினம்.காம்

கச்சத் தீவை மீட்க வேண்டும்: ஜெயலலிதா

சென்னை, மார்ச் 22: இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு 1974-ம் ஆண்டு இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் இலங்கைக்கு அளிக்கப்பட்டது. எனினும் இந்திய மீனவர்கள் அங்குள்ள அந்தோணியார் கோயிலில் வழிபடவும், கச்சத் தீவில் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் உரிமை உண்டு என அந்த உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அந்த உடன்படிக்கைக்கு மாறாக கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்படுவது தொடர்கிறது.

கச்சத் தீவை மீட்க வேண்டும் என இந்திய அரசை ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போவதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1895 மற்றும் 1930-ம் ஆண்டுகளின் வரைபடங்களின்படி கச்சத் தீவு இந்தியாவிற்கே சொந்தமானது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவு 26.6.1974-ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியால், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

அப்போது தமிழகத்தின் முதல்வராக கருணாநிதிதான் இருந்தார். ஆனால் கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவதை அவர் எதிர்க்கவில்லை. அவரது துரோகச் செயலால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிகுப்ப படையாச்சி என்பவரால் கட்டப்பட்ட புனித அந்தோணியார் கோயில் கச்சத் தீவில் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை அங்கு நடத்தப்படும் திருவிழாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும், மீன் வலைகளை அங்கு உலர்த்தவும், நமக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் கூட பறிபோய்விட்டன.

எனது ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991-ம் ஆண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியபோது, கச்சத் தீவை மீட்போம் என அறிவித்தேன்.

இது குறித்து பல முறை மத்திய அரசையும், இந்திய பிரதமரையும் வலியுறுத்தினேன். 16.9.2004 அன்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கச்சத் தீவில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 1974-ம் ஆண்டு ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தேன்.

இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு பதில் மனு கூட தாக்கல் செய்ததாகத் தெரியவில்லை. இதுதான் தமிழக மீனவர்களின் மீது கருணாநிதிக்கு உள்ள அக்கறை.

கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிக்கப் போகிறோம் என தன்னிச்சையாக இலங்கை அரசு அறிவித்தும், அது குறித்து மாநில தி.மு.க. அரசும், மத்திய அரசும் வாய் திறக்காதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இலங்கைத் தமிழர்களை அழிக்க உறுதுணையாக இருந்தது போல், கச்சத் தீவை புனிதப் பகுதியாக அறிவிப்போம் என்ற இலங்கை அரசின் இந்த அறிவிப்புக்கும் மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும் உறுதுணையாக இருக்கின்றனவோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக மீனவர்களை காப்பாற்றும் வகையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பை முளையிலேயே கிள்ளி எறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி தினமணி.காம் (23.03.2009)

Tuesday, March 17, 2009

இந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது.

அதனையடுத்து, சபாநாயகரின் இணக்கத்துடன் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அறிக்கையினை சபையில் வெளியிட்டு விளக்கம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இந்திய அரசாங்த்திற்கு புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவ குழு இந்திய இராணுவ மருத்துவ குழு அல்ல, இந்திய இராணுவத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழுதான் இங்கு வருகை தந்துள்ளது என தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மருத்துவ குழு இங்கு சேவையாற்றும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் கூட சிறிலங்காவின் இறையான்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜே.வி.பி.யின் சந்தேகங்களுக்கு பதிலளித்து கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என இந்திய அரசின் உயர்பீடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்த நிலையில் சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது இந்திய உயர்பீடத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானது என்பதையே நிரூபித்திருக்கின்றது.

நன்றி: புதினம்.காம்

Monday, March 16, 2009

ராஜபக்ஸ அரசுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி, ஜனநாயக குரல்வளையை நசுக்கிறது: செய்தியாளர்களிடம் வைகோ

இலங்கை அரசுக்கு உதவி வரும் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி வருகிறது. இது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் சீமானைப் பார்த்து விட்டு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த இயக்குநர் சீமானை புதுச்சேரி அரசு முதலில் சாதாரண குற்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் பாசிச ஆட்சி நடத்தும் முதல்வர் கருணாநிதி, சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தன் கையில் உள்ள காவல் துறையை ஏவி விட்டு ஏற்பாடு செய்தார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகள் பேசாததையா இயக்குநர் சீமான் பேசிவிட்டார்?

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்குக் காரணம் இலங்கை கடல் எல்லையில் கண்ணி வெடி வைத்துள்ளனர். இலங்கை இராணுவம் சுட்டதில் இதுவரை தமிழக மீனவர்கள் 500 பேர் இறந்துள்ளனர். இதுவரை யாரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் பணம் வட்டியில்லாமல் கொடுத்துள்ளது. இலங்கை அரசுக்கு உதவி வரும் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி வருகிறது.

இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷியா போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. இது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. இப் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடையும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வார்கள் என்று சீமான், நாஞ்சில்சம்பத், கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தந்திரமாக கைது செய்துவிட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை 11 இளைஞர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை என்ற தீ தமிழர்கள் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மதிமுக சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் கோவையில் நான் பங்கேற்க உள்ளேன் என்றார் வைகோ.

பேட்டியின் போது மதிமுக மாநில அமைப்பாளர் மணிமாறன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி: தமிழ்வின்.காம்

ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களை தோலுரித்துக் காட்டுவோம்: பழ.நெடுமாறன்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதுச்சேரியில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களைத் தோலுரித்துக் காட்டுவோம் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 48 நாள்களில் பல ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், மக்கள் திரள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆறரை கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதித்து நடக்கிறோம். இதுவரை 11 இளைஞர்கள், உயிரை துச்சமென மதித்து தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்திய அரசு எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் தர வேண்டும் என்றா கேட்கிறோம். யுத்தத்தை நிறுத்தச் சொல்கிறோம். பிரதமர் மன்மோகன் சிங் ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போரை நிறுத்தச் சொல்லியிருந்தால் போர் நிறுத்தப்பட்டு இருக்கும்.

1983-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மூவாயிரம் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தில்லி செங்கோட்டையில் இந்திரா காந்தி தேசியக் கொடி ஏற்றி விட்டு இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது. இதைப் பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இருக்காது என்றார். இதைக் கேட்ட ஜெயவர்த்தனே தில்லிக்கு வந்து விட்டார்.

இந்திராகாந்தியிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது. இதை மன்மோகன்சிங்கிடம் எதிர்பார்க்க முடியாது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சொல்கிறார் பிரணாப் முகர்ஜி.

இந்திராகாந்தி வழங்கிய ஆயுதங்கள்தான் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இந்த உண்மை காங்கிரஸ் கட்சியினருக்குத் தெரியாது. அவர்களுக்கு உலக வரலாறும், இந்திய வரலாறும் தெரியவில்லை. காங்கிரஸ் வரலாறும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு பாரம்பரியம் உண்டு. மிகப் பெரிய தலைவர்கள் தியாகம் செய்து வளர்த்த கட்சியாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மனிதாபிமான அடிப்படையில் கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை. உள்துறை அமைச்சராக உள்ள ப.சிதம்பரம் பிரதமருக்கு அடுத்த பொறுப்பில் இருப்பவர். அவர் சென்னையில் பேசும்போது தமிழர்களுக்கு ஆறுதலாக 4 வார்த்தை கூறுவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் மாறாகப் பேசியுள்ளார். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில் இலங்கைப் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை, அதில் நாம் தலையிட முடியாது என்கிறார்.

காங்கிரஸ்காரர்கள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதை தமிழ் இதயங்கள் மன்னிக்காது. இதற்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ளவர்கள் பல்வேறு அணிகளில் இருந்தாலும் 48 நாட்கள் மக்களை ஒற்றுமையாகச் சந்தித்து வருகிறோம்.

தேர்தல் வரும் போகும். வரப்போகும் தேர்தல் களத்தை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றுவோம். யார் யார் துரோகம் செய்தார்கள் என்று தோலுரித்துக் காட்டுவோம் என்றார் அவர்.

நன்றி தமிழ்வின்.காம்

Thursday, March 12, 2009

சிறீலங்காவின் உண்மை நண்பன் இந்தியா - இலங்கை அமைச்சர் நிமால் பாராட்டு

உலகின் பல நாடுகள் இங்கு நடப்பது தெரியாது எமக்கு பல கட்டளைகள் போடுகின்றது, ஆனால் இந்தியா எமது நிலையை நன்கு புரிந்து கொண்ட நண்பனாக செயற்பட்டு வருகின்றது என சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து சிறீலங்கா சென்றுள்ள இந்திய இராணுவ மருத்துவக் குழுவினரைச் சந்தித்து அவர்கள் கொண்டு சென்றுள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் இக்கருத்தை அவர் தொவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் உலக நாடுகள் பல சிறீலங்காவின் நிலையை புரிந்து கொள்ளாது எம்மை அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அதைக்கைவிடு, இதைக்கைவிடு என தொடர்ந்து அழுத்தம் தந்துகொண்டு இருக்கையில் இந்தியா எதுவும் பேசாது தானாக எமக்கு உதவ முன்வந்துள்ளது.

இந்தியா முன்னரும் உதவியுள்ளது. இந்தியாதான் எமது உண்மை நண்பன் அவர்களுக்கு எமது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

இதே நிகழ்வில் கருத்து தெரிவித்துள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், சிறீலங்கா மற்றும் இந்தியாவின் நெருங்கிய உறவின் வெளிப்பாடே இந்த உதவி எனவும், இதில் இருந்து சிறீலங்கா இந்தியாவிற்கிடையான நெருக்கமான உறவைப்பற்றி புரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

தமது மருத்துவப்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் வலுப்பெற்றது எனவும், அவர்கள் முழுமையான மருந்து மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளனர் எனவும் அலோக் கூறினார்.

சிறீலங்காவில் போர் உச்சமடைந்து தமிழர் தாயகப் பகுதிகளில் சிறீலங்கா படைகளின் எறிகணை மற்றும் கொத்துக்குண்டு வீச்சில் சிக்கி தினமும் பல மக்கள் மடிந்து கொண்டுள்ள நிலையில் இந்தியா மருத்துவ உதவிகளை வன்னிக்குள் அனுப்பாது சிறீலங்காவிற்குள் அனுப்பியுள்ளதன் மூலம் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்து நிற்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நன்றி: பதிவு.காம்

த‌மி‌ழின‌த் துரோ‌கி கருணா‌நி‌தி : ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று

தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, தன்னுடைய அறிக்கையின் மூலம் தான் ஒரு "தமிழினத் துரோகி' என்பதை நிரூபித்து விட்டார் எ‌ன்று அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல்'; "பிரதமருக்கு தந்தி'; "இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி, என்னுடைய அறிக்கையை நகைச்சுவை என்று கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றவுடன், ஒரே நாளில் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தயார் செய்து, விமானமும் ஏற்பாடு செய்து, அன்றைய தினமே ஒரு அரசின் சார்பில் அனுப்புவது சாத்தியமா? என்று தன்னுடைய அறிக்கையில் வினவியிருக்கிறார் தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்ற அறிவிப்பு 5.3.2009 அன்றே வெளிடப்பட்டு விட்டது. அதற்கான ஏற்பாடுகளை மூன்று, நான்கு நாட்களில் மத்திய அரசு தாராளமாக செய்யலாம். அனைத்தையும் தெரிந்திருந்தும், ஒன்றும் தெரியாதது போல் நடிக்கும் கருணாநிதியை என்னவென்று சொல்வது?

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்காக மத்திய அரசு ஆயுதங்களையும், அதிநவீன சாதனங்களையும் அளித்த போதும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளித்த போதும் வாய்திறக்காத கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர்கள் குறித்து யாரையும் விமர்சிக்க அருகதை இல்லை என்பதை முதலில் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏதோ இரண்டு இடங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதை வாழ்த்தியதாக தெரிவித்துள்ள கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்க ஒத்துழைப்பு கொடுத்ததற்காக தமிழக மக்கள் கருணாநிதியை விரட்டி அடிக்கத் தயாராகி விட்டார்கள் என்பதை உணரவில்லை போலும்!

தனிப்பட்ட ஒரு நபரோ, ஒரு நிறுவனமோ, வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய செஞ்சிலுவை சங்கம் மூலமாக மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தத் தொகையையும் அனுப்ப இயலாது என்ற உண்மையைக் கூட தெரிந்துகொள்ளாமல் நான் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதியினுடைய அறிக்கையின் வரிகளைப் பார்த்தால், அ.இ.அ.தி.மு.க சார்பில் திரட்டப்பட்ட நிதி இலங்கைத் தமிழர்களை சென்றடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. நல்லது செய்வதைக் கெடுப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதி தான். கருணாநிதியின் தீய எண்ணத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். "வில்லன்' கருணாநிதியின் வேடம் கலைந்துவிட்டது. எனக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் எதிராக கருணாநிதி ஏற்படுத்திய எத்தனையோ தடைகளை நான் முறியடித்திருக்கிறேன்.

அந்த வகையில், இந்தத் தடையையும் நான் முறியடிப்பேன் என்பதை கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வதோடு, அ.இ.அ.தி.மு.க.வால் திரட்டப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான நிதி முறையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை சென்றடையும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.

தமிழர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் தான் செய்த துரோகத்தை மறைக்க என்னை வசைபாடி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ், தமிழன், தமிழ்ப் பண்பாடு என்று சொல்லி தன்னுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட கருணாநிதி, தன்னுடைய அறிக்கையின் மூலம் தான் ஒரு "தமிழினத் துரோகி' என்பதை நிரூபித்து விட்டார். துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை " எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

(மூலம் – வெப்துனியா)

Tuesday, March 10, 2009

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திடம் பிரான்ஸ் துணைத் தூதுவர் உறுதி

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திடம் பிரான்ஸ் துணைத் தூதுவர் உறுதி

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட் உறுதியளித்துள்ளார்.


இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக மனு அளிக்கச் சென்ற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்களிடம் அவர் இந்த உறுதிமொழியை அளித்தார்.

இலங்கையில் போரை நிறுத்துவதற்காக போராடி வரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் முனைவர் இராமதாஸ், சட்டப்பேரவை உறுப்பினர் அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ந.ரா.கலைநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமார், பாரதிய ஜனதா கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் விஸ்வேஸ்வரன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் புதுச்சேரியில் உள்ள இந்தியாவுக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட்டை சந்தித்து உரையாற்றினர்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து அவரிடம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் விரிவாக விளக்கினர். ஈழத் தமிழர் நலனில் அக்கறை செலுத்தி வரும் பிரான்ஸ் அரசு இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மனுவையும் அவர்கள் அளித்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட், இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு, அதனால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்ததாகப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரியும், அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரியும், மருத்துவமனையில் மருத்துவம் பெறும் அப்பாவித் தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப்படுவதைத் தடுக்கக் கோரியும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும், ஐரோப்பிய கூட்டணி நாடுகளும், பிரான்ஸ் நாடும் சேர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளோம். ஈழத் தமிழர்களுக்கு உலக நாடுகளில் அதிகம் பாதுகாப்புக் கொடுத்த நாடு பிரான்ஸ் நாடு. இதற்குக் காரணம் புதுச்சேரியில் தமிழ் மக்களுடன் பிரான்ஸ் நாடு அதிக நெருக்கத்தைக் கொண்டுள்ளதுதான். தமிழின மக்கள் இலங்கையில் வாழ்வதால் தான் அவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு பாதுகாப்பு அளித்தனர். இதன் அடிப்படையிலியே பிரான்சிடம் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம் என்றும் வைகோ தெரிவித்தார்.

இலங்கை இனப்படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இரண்டு முறை விவாதம் நடைபெற இருந்தது. ஆனால் சீனாவும், ரசியாவும் அந்த விவாதத்தை தடுத்து நிறுத்திவிட்டனர். இதற்குக் காரணம், இந்திய அரசின் தூண்டுதல்தான் என்றும் வைகோ குற்றம் சாட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்ற வகையில் பிரான்ஸ் அரசு அனைத்துலக அளவில் செல்வாக்கு பெற்றிருக்கிறது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிலையான உறுப்பினர்களில் பிரான்சும் ஒன்று என்ற முறையில், போரை நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் சபை மூலமாக பிரான்ஸ் வலியுறுத்த முடியும். எனவேதான் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரான்சிடம் வலியுறுத்துகிறோம் என்று பிரான்ஸ் துணைத் தூதுவரிடம் பாட்டாளி மக்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவர் முனைவர் இராமதாஸ் கூறினார்.

நன்றி புதினம்.காம்

Friday, March 6, 2009

ராஜீவ் கொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஆதரவளித்திருக்காது: தமிழருவி மணியன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03.03.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு தமிழருவி மணியன் வழங்கிய நேர்காணல்:


தமிழக மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாரிய உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுமிடத்து இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் உணர்வலை மிகப்பெரியளவில் பெருகியிருக்கிறது என்பதைத்தான் நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான செய்திகள் வலம் வந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வே தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரிதாக இருந்தது. தமிழர்களின் இருதயங்கள் ரணப்பட்டன. விடுதலைப் புலிகள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்பது போல மக்களிடையே ஒரு மிகப்பெரிய சோர்வு இருந்தது. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு தமிழக மக்களால் ஆராதிக்கப்பட்டார்களோ அதனைவிடக் கூடுதலான அளவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. ஈழத்தமிழர்களின் இன்னல்கள் துடைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களிடையே இன்று என்றுமில்லாதளவுக்கு உருவெடுத்திருக்கிறது.

தமிழகத்தில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களின் 12 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதுதான் வரலாற்று உண்மை.


ராஜீவ் காந்தி படுகொலையை சுற்றியே இலங்கை தொடர்பான இந்திய காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை பின்னப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையில் நீங்கள் பார்க்கிறீர்கள்?

காங்கிரஸ் அரசின் தலைமையில் இன்றுள்ள மத்திய அரசின் கருத்தோட்டமாயினும் –

வெளியுறவுக் கொள்ளை என்றாலும் –

இனி எந்தக் கட்சி மத்தியிலே ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வந்தாலும் –

வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது அவர்கள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுவார்கள்.

ஏனெனில், பாகிஸ்தான் ஒருபக்கம் பகையோடு இருக்கின்றபோது, வங்கதேசம் இன்னொரு பக்கம் பகையோடு இருக்கின்றபோது, சீனா எந்த நேரத்தில் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருக்கின்றபோது அதன் தெற்குப் பக்கம் இருக்கின்ற இலங்கைத் தீவு தனக்கு பகையாக மாறி விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தியா பாசிச ராஜபக்ச அரசுக்கு பின்னால் நிற்கின்றது என்பதுதான் உண்மை.

எனவே, ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கலாம். ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்கும் என்று நான் நம்பவில்லை. அதனை செய்தவர் இந்திரா காந்தி.

இந்திரா காந்திக்கு இருந்த நம்பிக்கை, இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சல், இந்திரா காந்திக்கு இருந்த ஈடுபாடு இந்திரா காந்திக்கு பின்னால் வந்த எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.


ராஜபக்ச அரசாங்கம் எப்போதும் தமக்கு சார்பாக இருக்குமென்று இந்திய மத்திய அரசு எப்படி நம்புகிறது?

அதுதான் இந்திய மத்திய அரசு செய்யும் மிக மோசமான தவறு. அதாவது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையின் பக்கமாக நின்று விடக்கூடாது என்பதற்காக இலங்கை எதைச் செய்தாலும் இந்தியா அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தானின் பிடியில் இருந்தும் சீனாவின் பிடியில் இருந்தும் இலங்கையை விடுவித்து தனது பக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இது மிக மோசமான கண்ணோட்டம். வெளிவிவகாரத்துறை சார்ந்த மிகப்பெரிய பிழையான முடிவு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுக்கு துணையாகவோ, சார்பாகவோ, நன்றி உணர்வோடோ இருந்தது கிடையாது.

வங்க தேசத்தை உருவாக்க இந்திரா காந்தி முனைந்தபோது பாகிஸ்தானின் வானூர்திகள் தரித்து நிற்க உதவி செய்ததுதான் இலங்கை என்பதை இன்றைய இந்திய அரசு மறந்து விட்டது.

பாகிஸ்தான் கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

சீனா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

இந்தியா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பாசிச அரசாக இன்று ராஜபக்ச அரசு இருக்கிறது. இந்த வெறிபிடித்த ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இந்திய மத்திய அரசு துணை நிற்பதை தமிழ்நாட்டிலே இருக்கும் எவரும் விரும்பவில்லை - அங்கீகரிக்கவில்லை - ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இங்குள்ள வருந்தத்தக்க செய்தி என்னவெனில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12 கோடி கைகளும் ஈழத் தழிழர்களின் துயர்துடைக்க தயாராக இருந்தாலும் இங்கு அவரவர் சுயநலம் சார்ந்து சிந்திக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாத அளவுக்கு அவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வரவிருக்கும் தேர்தலில் யார் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் நீங்கள் நெஞ்சம் புண்ணாகிப் போவீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக இன்று சொல்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது. வீதி வீதியாக கூட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும் மனிதச் சங்கிலி நடத்துவதுமாக ஈழத் தமிழருக்காக ஆதரவான ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது.

ஆனால் எந்த மத்திய அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறதோ அந்த மத்திய அரசே இதுவரை அது குறித்து சிறிதும் கவலைப்படாத நிலையில் - அந்த மத்திய அரசை இயக்குகின்ற, தலைமை தாங்குகின்ற காங்கிரசோடு எப்படியாவது தன்னுடைய தேர்தல் கூட்டணியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிறது - தவிக்கிறது - தவமிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தமது சுயநலனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அளவில் காங்கிரசோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. இது ஒரு பக்கம்தான்.

அதேநேரம் உலகத் தமிழர்களின் உரத்துக் குரல் கொடுக்கும் வைகோ. சென்னைக்கு பிராணப் முகர்ஜி வந்தபோது கறுப்புக் கொடி காட்டி சிறை சென்று வெளியே வந்திருக்கிறார், உலகத் தமிழர்களுக்காக ஓங்கிக்குரல் கொடுக்கிறார்,

ஈழத் தழிழர்களுக்காக அவர் மிகப் பெரிய அளவுக்கு போராடுகிறார்,

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்காக தான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் என்று கூறுகிறார். அவரது தமிழின உணர்வு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அதேநேரத்தில் முழுக்க முழுக்க தமிழின உணர்வு அற்றவராகவும் தமிழினத்திற்கு விரோதியாகவும், ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதில் ராஜபக்ச அரசுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுப்பவராகவும் இருக்கின்ற ஜெயலலிதாவின் பக்கமாக போய் நின்று குறைந்தது ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்று அதில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக வைகோ மேற்கொள்ளும் அரசியல் சமரசம் இருக்கிறதே அது மிகவும் பரிதாபகரமானது - வருந்தத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் இராமதாஸ் காலையில் இருந்து மாலை வரை ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் - குரல் கொடுக்கிறார். ஆனால் இன்றைக்கும் அவரது பிள்ளை மத்திய அரசில் தான் இடம்பெற்றிருக்கிறார். காங்கிரசிலிருந்து அவர் வெளியே வரவில்லை. அவரின் கட்சி மீண்டும் காங்கிரசோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் கூட்டணி அமைக்க மறைமுகமாகப் பேச்சு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் அணி திருமாவளவன் தலைமையில் இயங்குகிறது. பிரபாகரனை 1980 தொடங்கி நான் நேசிப்பவன், பிரபாகரனின் அன்புக்குரியன் என்று சொல்கின்ற திருமாவளவன் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடரும் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்றால் யாருடன் கூட்டணி? காங்கிரசுடன் சேர்ந்துதானே கூட்டணி. திருமாவளவனை சிறைக்குள் தள்ள வேண்டுமென காங்கிரஸ் கூறுகிறது, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனினும் அவரை கைது செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் இருந்தால்தான் தேர்தல் நேரத்தில் தனக்கு பலம் கிடைக்கும் என்று கருணாநிதி நம்புகிறார். எனவே ஒரு பக்கத்தில் விடுத்தலைச் சிறுத்தைகளுக்கும் இன்னொரு பக்கத்தில் சோனியா காந்திக்கும் பாலமாக கருணாநிதி இருக்கின்றார்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியைப் பெற்று அதில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக சோனியா காந்தியின் உறவை திருமாவளவனால் ஏற்றுக்கொள்ள முடிகிறது எனில் –

தமிழ்நாட்டில் நெடுமாறன் என்கிற ஒரு மனிதனைத் தவிர ஈழத்தமிழர்களுக்காக, புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு பாடுபடுகிற ஒருதலைவர் இந்த தமிழ்நாட்டில் இல்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறிவைக்கிறேன். காரணம் நெடுமாறனுக்கு அரசியல் நிர்ப்பந்தம் இல்லை.

அரசியல் கடந்து நிற்கக்கூடிய அத்தனை பேரும் ஈழத் தமிழர்களுக்காக உண்மையாகப் போராடுகிறார்கள். ஆனால் அரசியல் அரங்கத்திற்குள்ளே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களை வைத்துக்கொண்டு தங்களது அரசியல் நாடாகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நம்மை ரணப்படுத்துகிற கசப்பான உண்மை.


தாயகத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் இந்த நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தமிழக மக்களா அல்லது அரசியல் தலைவர்களா?

இன்றல்ல என்றுமே ஆதரவாக இருப்பவர்கள் மக்கள்தான். ஆனால் மக்களைக் குழப்புகின்ற வேலையைச் செய்துகொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.

ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர், ஆனந்த விகடன் மற்றும் மேடைப் பேச்சுகளில் நான் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் - ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க வேண்டுமென நீங்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டால், தமிழகத்து மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினால், எல்லாக் கட்சி தலைவர்களும் கட்சி மாற்றங்களை மீறி, கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழின உணர்வொடு ஒரே குரலாக நீங்கள் முழங்குங்கள் - ஓரணியில் நில்லுங்கள்.

காங்கிரஸ் என்பது இன உறுதிப்பற்றற்ற சுயநலவாதிகளின் கூடாரமாக தமிழகத்தில் தன்னிலை தாழ்ந்து விட்டது என்பதை நாற்பதாண்டு காலம் தமிழகத்து அரசியலில் பெருந்தலைவர் காமராஜரின் காலம் தொட்டு இன்றுவரை காந்திய வழியில் நெறி சார்ந்து - நேர்மை தவறாது - நேர்கோடாய் நடந்த நான் அந்த கட்சியின் மூலமாக இனிமேல் இனப்பற்றையும், மொழிப்பற்றையும் வளர்த்தெடுக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையிலேதான் அந்த கட்சியை விட்டே வெளியே வந்திருக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்த வரை என்ன செய்ய வேண்டும். ஜெயலலிதா இன உணர்வு அற்ற ஒரு பெண்மணி. ஜெயலலிதாவின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் உருவாக்கிவிட முடியாது. அதேநேரம் அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி என்பது கடந்த மூன்றாண்டு காலமாக ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாக எல்லா வகையிலும் துணைநின்று இன்று எனது தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படுகிற இழி நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

எனவே, அந்த காங்கிரஸ் அது யாரோடு கைகோர்த்து வந்து நின்றாலும் நாற்பது தொகுதிகளிலும் அது முற்றாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. வாக்காளர்களுக்கு இருக்கிறது.

அந்த வாக்களர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டுமெனில் சூழ்நிலையில் தெளிவிருக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் ஜெயலலிதாவும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கட்டும். கருணாநிதிக்கு நான் அதையே மீண்டும் மீண்டும் கூறினேன்.

காங்கிரசை கைகழுவி விடுங்கள் என்றேன். நீங்கள் கைகழுவி விட்டால் காங்கிரஸ் அடுத்த கணமே ஜெயலலிதாவிடம் போய் நிற்கும். ஜெயலலிதாவும் காங்கிரசும் சேர்ந்து தமிழின விரோதக் கூட்டணியை உருவாக்குவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருக்கும் இடதுசாரி இயக்கங்கள் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகப் பக்கமாக வருவார்கள்.

எனவே திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என்று மிக வலிமையான கூட்டணி அமைக்க முடியும். அரசியலுக்கு பின்னாலுள்ள தமிழின உணர்வாளர் அமைப்புக்கள் அனைத்தும் இந்த கூட்டணிக்கு பின்னாலே நிற்கும். எனவே மிகப்பெரிய கூட்டணியை இது உருவாக்க முடியும். இது தமிழின உணர்வை வெளிப்படுத்துகின்ற கூட்டணியாக இருக்கும்.

காங்கிரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழின எதிர்ப்பு கூட்டணியாக இருக்கின்ற போது வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டோடு வரும் வாக்காளனுக்கும் ஒருதெளிவு இருக்கும். இது தமிழினத்தின் நலன் காக்கும் கூட்டணி, இது தமிழினத்தை வேரறுக்கும் கூட்டணி என்ற தெளிவான சிந்தனையோடு அவன் வாக்களிப்பான்.

ஆனால் இன்றுள்ள சூழ்நிலை எப்படி? கலைஞர் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். வைகோ ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத்திற்காக கண்ணீர் வடிக்கின்றார். இராமதாஸ் ஜெயலலிதாவுடன் போவதா, கலைஞருடன் போவதா என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கலைஞரைக் கைவிடுவதாக இல்லை.

ஈழத் தமிழர்களை பற்றி பேசும் இவர்களே இப்படி அணி பிரிந்து நின்றால் இதில் எந்த அணி ஈழத் தமிழர்களுக்காக உண்மையாக இருக்கும் அணி என்று மக்களுக்கு தெளிவு வரும்? யாருக்கு வாக்களிப்பது என்று அவர்கள் எந்த நிலையில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்?

மக்கள் இங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழீழம் கிடைப்பதுதான் தீர்வு என்றால் அந்த தீர்வும் உருவாகட்டும் என்று இங்கிருப்பவர்கள் வேள்வி நடத்துகிறார்கள். ஆனால் இன்று அந்த வேள்வித் தீயை அணைப்பதிலும் அழிப்பதிலும் அவரவர் கட்சி நலன் கருதி - அவரவர் சொந்த நலன்கருதி - அவரவர் பதவிகளுக்காக - அவரவர் சுகங்களுக்காக இன்று அரசியலையும் குழப்பி, அதன் ஆரோக்கியத்தையும் கெடுத்து, இன உணர்வை அழித்து ஒட்டுமொத்தமாக மக்களிடையே இன விரோதிகளாக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.

அரசியல் சாணக்கியன் என்று கருதப்படும் முதல்வர் கருணாநிதி எதற்காக இப்படியான ஒரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு பின்நிற்கிறார்?

"ஒரு இராஜதந்திரி தன்னுடைய அதிகபட்ச இராஜதந்திரத்தாலேயே அழிந்து விடுகிறான்." கலைஞரும் தமிழ் மக்களை மனதில் நிறுத்தினால் இந்த கூட்ணியை உருவாக்குவதற்கு அவர் முனையலாம். ஆனால், கலைஞருக்கு வைகோவின் மீது கோபம். வைகோவுக்கு கலைஞரின் மீது கோபம். வைகோவுடன் இருக்கும் கோபத்தை தணித்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் கலைஞர் வைகோவுடன் கரம் கோர்த்து நிற்க தயாராக இருப்பார். அது எனக்கு தெரிந்த விடயம்.

ஆனால் கலைஞர் போடும் கணக்கு என்னவெனில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய ஆதரவு இல்லாமல் போனாலும் ஓட்டுமொத்த இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் எதிர்பார்த்தது போல வெற்றியைப் பெறத் தவறியதால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமென்று கலைஞர் கணக்குப் போடுகிறார்.

எனவே காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்தியிலே கூட்டணி அரசு வருமானால் அந்த கூட்டணியில் தன்னுடைய அரசும் வரவேண்டுமென கலைஞர் விரும்புகிறார். மீண்டும் ஆறு அல்லது ஏழு அமைச்சர்கள் மத்தியிலே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தனது குடும்ப நலனிற்கும் கட்சி நலனிற்கும் உகந்ததாக இருக்கும் என்பது கலைஞருடைய கணிப்பு.

இதற்கு மாறாகு அவர் கணக்கு போட்டு தமிழகத்தில் அவர் வெற்றிபெற்றாலும் கூட ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் அடுத்த நிமிடமே கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியை திரும்ப பெற்றுக்கொண்டால் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது வரலாற்று உண்மை. அதனை மறுக்க முடியாது.

அத்துடன், கலைஞரின் குடும்பத்திற்கு ஓராயிரம் தொல்லைகள் ஜெயலலிதாவின் மூலமாக உருவாகக் கூடும். எனவே ஜெயலலிதா எந்த சந்தர்ப்பத்திலும் சோனியா காந்தியின் பக்கத்தில் போய் நின்றுவிடக் கூடாது என்றே கலைஞர் நினைக்கிறார். ஜெயலலிதாவின் சக்தி இந்திய அரசியலிலே வலுப்பெற்றுவிடக்கூடாது, மத்திய அரசில் ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றுவிடக் கூடாது, எனவே கலைஞரின் எல்லா கவலைகளும் போயஸ் தோட்டத்தை சுற்றித்தான் அமைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் எல்லா பார்வைகளும் கோபாலபுரத்தை சுற்றித்தான் இருக்கிறது. எனவே கலைஞர் ஜெயலலிதாவை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. ஜெயலலிதாவும் கலைஞரை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தமிழகத்தின் விதி மட்டும் நிர்ணயிக்கப்படும் சூழல் இருக்குமானால் சாணக்கியராக இருக்கும் கலைஞருக்கு தெரியாமல் இல்லை. கலைஞர் நிச்சயமாக இப்படியான வலுவான கூட்டணியை அமைப்பார், தமிழினத்திற்காக குரல் கொடுப்பார், "வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழினமாக இருக்கட்டும்" என்று சொல்வார். இருப்பது ஒரு உயிர் அது போகப் போவதும் ஒரு முறைதான் என்று மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை வெவ்வேறு இராகங்களில் பாடுவார், உணர்சியை தூண்டுவார், வெற்றிக் கனியை சுவைப்பார். ஆனாலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த கூட்டணியில் நின்று தான் விலகி நின்றது பிழையாகிவிடுமே என்ற அச்சம்தான் அவரை காங்கிரசில் இருந்து வெளியேவராது பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்துலகத்தில் இருந்து தமக்கு சார்பான ஒரு ஆதரவு நிலை வருமென்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியானால் அந்த எதிர்பார்ப்பு தவறானதா?

அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. காரணம் அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு. எனவே இந்த தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் தமது அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் மத்திய அரசுக்கு கொடுத்தால் –

அந்த மத்திய அரசு முன்னின்று முனைப்பாக உலக நாடுகளின் கருத்துக்களை எல்லாம் திரட்டி, ராஜபக்ச அரசுக்கு எதிராக அணிவகுக்கச் செய்தால் –

நிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்கும். அந்த நம்பிக்கை பிழை இல்லை. அது மிகச் சரியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிறைவேற வேண்டும் என்றால் இந்திய அரசு உடனடியாக காரியமாற்ற வேண்டும். இந்திய அரசு காரியமாற்ற வேண்டுமெனில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இருந்து தெரிவு செய்யப்படும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கட்சிகளை மறந்துவிட்டு ஈழத் தமிழர் குறித்த நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும். இவ்வளவும்தான். இதில் ஒரு இரகசியமும் இல்லை.

எனவே இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இனநலன் சார்ந்து தெரிவு செய்வதற்கு தமிழகத் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த கூட்டணிக் குழப்பங்களில் இவர்கள் மாறிமாறி முகம் காட்டினால் யாரை பார்த்து எப்படி வாக்களிப்பது?

எனவே தேர்தல் வரட்டும். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் நான் தெளிவாகச் சொல்கிறேன் தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கு தொண்ணூறு சதவீத மக்கள் தேர்தலுக்கு பின்னாலும் ஈழத் தமிழர்களின் இன்னலை துடைப்பதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்தும் போராடுவார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஈழத்திற்கு உறுதுணையாக நிற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கும். அந்த நம்பிக்கையோடு இருக்கலாம் நீங்கள். புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் எனது தமிழினச் சகோதரர்களே என் இன மக்களே! உங்களை தமிழன் ஒருபோதும் கைவிட மாட்டான். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். இங்குள்ள அரசியல்வாதிகளை ஒருபோதும் நம்பாதீர்கள். ஆனால் அரசியலுக்கு அப்பால் இந்த இனம் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களை ஆதரிக்ககூடிய சூழல் நிச்சயம் விரைவில் வரும்.


ஈழத் தமிழர்கள் தங்களுக்காக இந்த அரசியல்வாதிகள் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

கலைஞர் ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் அன்பு கூர்ந்து அவரிடம் "அய்யா நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுங்கள்" என்று கூறினேன். நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினால் தேசிய அளவில் மிகப்பெரிய அழுத்தம் உருவாகும். அப்போதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு விரைவாக காரியமாற்றும் என்று கூறினேன்.

மகுடங்கள் என்பவை இடம் மாறக்கூடியவை. இன்று ஒரு தலையில் இருக்கக்கூடிய மகுடம் நாளை இன்னொருவர் தலைக்கு தானாக இடம் மாறலாம். ஆனால் புகழ் மகுடம் ஒன்றை ஒருவன் உருவாக்கிக்கொண்டால் அது என்றும் அவனையே அலங்கரிக்கும்.

எனவே இடம்மாறக்கூடிய மகுடங்களைக் பற்றி கவலைப்படாது தமிழினத் தலைவர் என்ற புகழ் மகுடம் உங்கள் தலையில் என்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களது முதல்வர் பதவியை விட்டு விலகுங்கள் என்று அவரிடம் தொலைபேசியில் கூறினேன்.

அதன் பின்னர் கலைஞர், வைகோ, திருமாவளவன், இராமதாஸ் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து தமிழர் நலனுக்காவது நீங்கள் ஓரணியாக நின்று ஒன்றுபட வேண்டுமென்று சொல்வதற்கு முயன்றேன். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. காங்கிரசை நோக்கி திராவிட முன்னேற்ற கழகம் சென்று விட்டது. ஜெயலலிதாவை நோக்கி வைகோ சென்றுவிட்டார். இனிமேல் இவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் தனியாளாகச் சென்று என்னுடைய கருத்துக்களை சொல்லி வருகிறேன். தமிழக மக்கள் அனைவரும் அரசியல் சார்ந்து சிந்திக்காமல் இந்த அரசியல் வாதிகளின் முகமூடிகளைக் கழற்றி அவர்களின் சுயமுகங்களைப் பார்த்து அவர்களிடம் இருந்து விலகி நின்று ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக ஆதரவுக் குரல்கொடுக்க நீங்கள் அத்தனை பேரும் இணைய வேண்டும் என்று நான் முனைப்பளவில் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னளவில் என்னால் இதனைத்தான் செய்ய முடியும்.

இராமன் சேது மண்டலம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு அணில் மணல் சுமந்தது. அணில் சுமக்கின்ற மணலில் பாலமாகி விடாது என்பது அணிலுக்கு தெரியும். ஆனாலும் அதன் பங்களிப்பை அதன் மனச்சான்றுக்கு மாறில்லாமல் அது செய்தது போல் நான் செய்து கொண்டிருக்கிறேன் - என்று அந்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

நன்றி: புதினம்.காம்

Wednesday, March 4, 2009

இலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குறித்து கவலைப்பட மாட்டேன்: திருமாவளவன்

இலங்கை தமிழர் பிரச்சினையே முக்கியம், நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. கூட்டணி குறித்து நான் கவலைப்பட மாட்டேன். என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தமிழக மக்களை தட்டி எழுப்பும் வகையில் நாம் தமிழர் நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வாலாஜாபாத்தில் நாம் தமிழர் நடைப்பயண நிகழ்ச்சி தொடக்க விழா புதன்கிழமை நடக்கின்றது.

மாவட்டச் செயலர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் த.பார்வேந்தன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் அம்பேத்கர் வளவன், சோகன்பிரபு, கராத்தே பாண்டியன், முன்னிலை வகித்தனர்.

மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சி.இ. சத்யா, மாவட்டச் செயலர் பாலவாக்கம் சோமு, பாமக எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கே.ஆறுமுகம், ஒன்றியக் குழுத் தலைவர் பரந்தூர் சங்கர், பாசறை செல்வராஜ், மக்கள் மன்றம் மகேசு, இளைஞர் எழுச்சி இயக்கம் காஞ்சி அமுதன் வாழ்த்திப் பேசினர்.

திருமாவளவன் பங்கேற்று பேசியது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கள் நடந்தன. மேலும் தற்போது அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் போராடி வருகிறோம்.

இலங்கை தமிழர் பிரச்சினையின் தீவிரத்தை சாதாரண பொதுமக்கள், பாமர மக்களை உணரச் செய்யும் வகையில் நாம்தமிழர் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 800 குழுக்கள் இதில் கலந்து கொள்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 8 நகரங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை தான் எனக்கு முக்கியமே தவிர, நாடாளுமன்றத் தேர்தல் இல்லை. கூட்டணி குறித்து நான் கவலைப்பட மாட்டேன்.

மத்தியில் காபந்து அரசு இருந்தாலும், அதிகாரிகள் மனது வைத்தால் இலங்கை பிரச்னையை தீர்க்க முடியும் என்றார் திருமாவளவன்.

வாலாஜாபாத்தில் நாம் தமிழர் நடைப்பயணத்தை பாவலர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். 20 கி.மீ. தூரம் வெங்குடி, ராஜாம்பேட்டை, கருக்குப்பேட்டை, ஐயம்பேட்டை வழியாக காஞ்சிபுரத்தில் நடைப்பயணம் முடிவடைகிறது.

மாலையில் வணிகர் வீதியில் பொதுக் கூட்டம் நடக்கிறது.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காஞ்சிபுரத்தில் தொடங்கி வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் நடைப்பயணம் நிறைவடைகிறது.

நன்றி: தமிழ்வின்.காம்

Monday, February 23, 2009

உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார்-பழ.நெடுமாறன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல் துறை தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அப்போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறை மறுத்து விட்டது.

இந்நிலையில் தங்களின் அடுத்தகட்ட போராட்டம் பற்றி அந்த இயக்கத்தின் தலைவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அறிவித்தனர்.

பழ.நெடுமாறன்: மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:

முதல்வரின் உத்தரவின்பேரில்தான் காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இந்த உண்மையை மறைப்பதற்காக முதல்வர் உண்ணாவிரத நாடகத்தை நடத்துகிறார். அத்துமீறி செயல்பட்ட காவல்துறை தலைவர், சென்னை மாநகர் ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வற்புறுத்தும் கோரிக்கை மிகமிக நியாயமானது. இதைச் செய்யாமல் பிரச்னை தீராது.

தவறு செய்யும் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார். வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையிலும் உயர் அதிகாரிகளை காப்பாற்றவும் தான் உத்தரவிட்டதை மூடிமறைக்கவும் முயற்சி செய்கிறார்.

மரு. ச.இராமதாசு கூறியதாவது:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்ட போதே இந்த இயக்கம் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான பணிகளில் கவனம் செலுத்தாது என தெளிவாக தெரிவித்தோம்.

இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பல தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த இயக்கத்துக்குப் பின்னால் தமிழக மக்கள் அணிவகுப்பதை பொறுக்க முடியாத முதல்வர் கருணாநிதி, தி.மு.க. ஆட்சியைக் கலைக்க நாங்கள் சதி செய்வதாகக் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நீடிக்கும் வரை தி.மு.க. அரசை யாராலும் கலைக்க முடியாது. இந்நிலையில் நாங்கள் எவ்வாறு சதி செய்ய முடியும் என்பதை கருணாநிதி விளக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலால் கொதித்துப் போயுள்ள வழக்கறிஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே, காவல் துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும்.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுத்து, தீர்வு காண வேண்டியவர் முதல்வர் கருணாநிதிதான்.

ஆனால் அவரே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார். இது வெறும் நாடகம்.

இலங்கைப் பிரச்னையிலிருந்து தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார் என ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

தா. பாண்டியன்: இலங்கையில் குண்டு போடுவதை நிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக அறவழியில் நாங்கள் போராடி வருகிறோம். இந்நிலையில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாங்கள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கலாம் என அரசு கருதினால், எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி அதனை முறியடிப்போம்.

வைகோ: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி, கைதாவதில் எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், நீதிமன்றத்தில் நடந்தது போலவே, இன்னொரு வன்முறைச் சம்பவத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்தே, எங்கள் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.

வரும் 27-ம் தேதி சென்னை மற்றும் அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் எங்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

திருமாவளவன்: நீதிமன்ற வன்முறை சம்பவத்துக்கு சுப்பிரமணியன் சுவாமிதான் முழு பொறுப்பு. அடியாட்களுடன் நீதிமன்றத்துக்கு சென்ற அவர், வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார். அதன் பிறகே வன்முறை வெடித்துள்ளது. எனவே அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி தினமணி (24.02.2009)

Thursday, February 19, 2009

போரை நிறுத்த வற்புறுத்த முடியாது என்று பிரணாப்முகர்ஜி கூறியதற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்த முடியாது என்று கூறிய மத்திய மந்திரி பிரணாப்பு முகர்ஜிக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கூறிய வார்த்தைகளை திரும்ப பெறாவிட்டால் மத்திய மந்திரியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் மு.கண்ணப்பன், பாரதீய ஜனதா துணைத்தலைவர் எச்.ராஜா, பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சுசி.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இலங்கை தமிழர்களுக்காக கடலூரில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழ்வேந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடலூரில் நடைபெறும் அவரது இறுதி ஊர்வலத்தில் அனைத்து தலைவர்களும் கலந்துகொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

20-ந் திகதி(இன்று) காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் அனைவரும் சென்று, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி கையெழுத்திட்ட மனுவை தூதரகத்தின் மூலம் அமெரிக்க குடியரசு தலைவருக்கு அளிக்க இருக்கிறோம். மற்ற நாடுகளின் தூதரக அலுவலகங்களிலும் மனு அளிப்போம்.

இந்தியாவின் தற்காலிக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் பேசுகையில், போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை, இந்தியா வற்புறுத்த முடியாது என்று அறிவித்து இருப்பது 61/2 கோடி தமிழர்களின் ஒன்றுபட்ட வேண்டுகோளை, துச்சமாக மதித்து தூக்கி எறியும் போக்காகும். இந்திய அரசின் இந்த நிலைப்பாடு குடியரசு தலைவர் உரையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இருந்ததற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அரசின் வாக்குறுதியை நம்பி, பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த மக்கள் குண்டுவீசப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களும், நர்சுகளும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இலங்கை அரசு வெளியேற்றி உள்ளது. மேற்கண்டவற்றை எல்லாம் குறித்து சிறு கண்டனம் கூட தெரிவிக்காத பிரணாப்முகர்ஜி விடுதலைப்புலிகள் மீது பொய்யான பழிகளை சுமத்தி, பிரச்சினையை திசை திருப்ப முயல்வதை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பிரணாப்முகர்ஜியின் அறிவிப்பின் காரணமாக இலங்கையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவிக்கும் துணிவை இலங்கை அரசு பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து இனப்படுகொலை செய்யப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பேசியதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், இல்லையேல் இந்திய அரசுக்கு எதிராக பெரும் போரட்டம் தமிழகத்தில் வெடிக்கும் என்றும் பிரணாப்முகர்ஜிக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை விடுக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று வற்புறுத்தி, தமிழ்நாடு முழுவதும் வருகிற 23-ந்தேதி முதல் ஒரு வார காலத்தில் 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெறப்படும். இந்த கையெழுத்து பிரதிகளை ஐ.நா.பேரவை செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க, ரஷிய குடியரசு தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மக்கள் திரள் பேரணி கோவை, கடலூர், மதுரை பகுதிகளில் நடைபெற்றுள்ளது. வருகிற 28-ந்தேதி திருச்சியிலும், மார்ச் 2-ந்தேதி தூத்துக்குடியிலும் நடத்தப்படும். சேலம், புதுச்சேரியில் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். என்று பழ.நெடுமாறன் கூறினார்.

அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாசிடம், `போரை நிறுத்த வற்புறுத்த மாட்டோம் என்று கூறிய மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியின் பேச்சு வேதனை அளிப்பதாக கூறி உள்ள நீங்கள். தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகிப்பது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து ராமதாஸ் பேசும்போது, எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசினார்கள். வாக்குவாதம் செய்தனர். இதனால் 2 முறை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் கேள்வி நேரத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை கிளப்பி உள்ளனர். பிரணாப்முகர்ஜியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் சோனியா காந்தியை வற்புறுத்தி உள்ளோம். இந்த தீர்மானம் வெள்ளிக்கிழமை (இன்று) கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பு, ராஜபக்சேவுக்கு மிகப்பெரிய துணிச்சலையும், தெம்பையும் அளித்துள்ளது. இதனை கண்டித்துள்ளேன் என்று ராமதாஸ் கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான போர் காரணமாக, நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் அணிகள் மாறுமா? என்று வைகோவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பொருத்திருந்து பாருங்கள், இதற்கு மேல் என்னிடம் இருந்து வேறு எந்த பதிலும் வராது என்று தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Monday, February 16, 2009

தமிழக மக்களை ஏமாற்றுகிறார் சிதம்பரம்: வைகோ

திருச்சி, பிப். 16: மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றுகிறார் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினத்தையே அழிக்க முப்படைகளையும் ஏவிவிட்டு போரை நடத்தி வருகிறார் ராஜபட்ச. உலகில் வேறெங்கும் நடைபெற்றிராத பேரழிவை அங்கே நடத்தி வருகிறார். இந்த இன அழிப்புப் போரை இந்தியா பின்னால் இருந்து இயக்கி வருகிறது. இதற்கு சாட்சியங்கள், ஆதாரங்கள் உள்ளன. இதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், தமிழக மக்களை ஏமாற்றுகிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால், பேச்சுவார்த்தைக்கு இந்தியா உதவும் என்கிறார் அவர். ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தெரிவித்த மோசடிக் கருத்தையே சிதம்பரம் இப்போது வழிமொழிந்திருக்கிறார்.

ஒரு தரப்பை மட்டும் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது உலகில் வேறெங்கும் நடைபெற்றிராத ஒன்று. பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்களில் போராளிகளின் ஆயுதங்களை கீழே போடச் சொல்லி இந்தியா உள்பட யாரும் கேட்கவில்லை.

2002-ல் முதலில் போர் நிறுத்தம் அறிவித்ததே விடுதலைப் புலிகள்தான். இதுவரை அவர்கள் அந்த ஒப்பந்தத்தை மீறவில்லை. ராணுவம்தான் இதை மீறி இப்போது போரைத் தொடுத்திருக்கிறது. புலிகள் தற்காப்புத் தாக்குதல்களைத்தான் மேற்கொண்டிருக்கின்றனர்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே போர் நிறுத்தத்துக்குத் தயார் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்டனர். ஆனால், ராணுவத் தாக்குதல் நடத்த இந்தியா ஆயுதங்களையும், ராடார்களையும் வழங்கி வருகிறது.

இடையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்றார்கள். அது போர் நிறுத்தமல்ல; குண்டுவீசிக் கொல்லப்போகிறோம், தப்பித்துக் கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட கெடு. அப்போதும்கூட குண்டுவீச்சு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு பல்வேறு வகையான போராட்டங்களாக உருவெடுத்துள்ளன. இதைச் சமாளிக்க, மக்களை ஏமாற்ற, இந்தப் பிரச்னைகளில் இருந்து எப்படித் தப்புவது என்றுதான் மத்திய அரசும், தமிழக முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காகத்தான் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற பெயரில் குழுவை அமைத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட இக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கெனவே, அந்தக் கவுன்சில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த முடிவு செய்திருந்தது.

ரஷியா மட்டும் இதை எதிர்த்தது; ஆனால், இப்போது ரஷியாவும் ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த சில நாள்களில் நடைபெறும் கூட்டங்களில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படலாம். அப்போது, எங்களின் முறையீட்டை அடுத்துதான் ஐநா சபை இந்த முடிவை எடுத்தது என்று கருணாநிதி கூறுவார்.

இப்போதாவது போரை நிறுத்துங்கள் என்று, ஒப்புக்காவது இந்தியா கோருமானால், அடுத்த சில நாள்களில் உலக நாடுகள் முழுவதும் அதை வலியுறுத்த தயாராக உள்ளன.

அதைவிட்டுவிட்டு, விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று சிதம்பரம் கூறுவது மக்களை முட்டாளாக்கும் செயல் என்றார்.

நன்றி: தினமணி

இலங்கைப் பிரச்னை மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும்: பழ. நெடுமாறன்

திருச்சி, பிப். 16: இலங்கை பிரச்னை மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

திருச்சியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

""இலங்கையில் போர் நிறுத்தம் கோரி செவ்வாய்க்கிழமை நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

பிரபாகரனை இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியா என்று கேட்கிறார்கள். அங்கு கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும், தமிழ்த் தேசிய முன்னணி அமைக்கப்பட்டு அந்த முன்னணியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே பிரபாகரன்தான் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதி என்று அறிவித்திருக்கின்றனர். இலங்கை மக்களின் முடிவை, இங்குள்ளவர்கள் ஏற்க மறுத்து கேள்வி எழுப்புகின்றனர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால் முழு தமிழ் இன அழிப்புக்கு வழிவகுத்துவிடும். ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களைக் காக்கும் நோக்கம் கொண்டதல்ல; இலங்கைக்கு உதவுவதை மீண்டும் உறுதிப்படுத்துவதே.

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்துமாறு, இந்தியா சொல்லுமென்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை முடக்கும் நிலை தொடருமென்றால், அது மாநில அரசுக்கு எதிரான போராட்டமாகவும் மாறும்.

தமிழகத்தின் பெரிய கட்சிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலின்போதுதான் உண்மை நிலவரம் தெரியும் என்றார் நெடுமாறன்.

நன்றி: தினமணி

Tuesday, February 10, 2009

இதயமே இல்லாத மன்மோகனுக்கு இதய அறுவை சிகிச்சை...

தோழர் ஒருவர் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி:

இதயமே இல்லாத மன்மோகனுக்கு
இதய அறுவை சிகிச்சை...

முதுகெலும்பே இல்லாத கருணாநிதிக்கு
முதுகெலும்பு அறுவை சிகிச்சை...

இந்தியாவுக்கு சிங்கள இனவெறியர்கள் நன்றி தெரிவித்தனர்

பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேவேளை, சிறிலங்கா படையினருக்கு உதவி புரிவதாக கூறி இந்தியா, சீனா, ரசியா ஆகிய நாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

சிறப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சிறிலங்கா மக்களின் நன்றிகள் உரித்தாகட்டும் என்றும் அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் உதவி புரிய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.

முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தலைமை தாங்கினார்.

நூற்றுக்கனக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பௌத்த குருமாரும் கலந்து கொண்டனர்.

மகிந்த அரசாங்கத்தின் போர் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இடையூறு விளைவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போர் நிறுத்தம் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இதனை சிறிலங்கா மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினர். அந்த நாடுகளின் பிரதிநிதிகளை கிண்டல் செய்யும் கேலிச் சித்திரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் கிலறி கிளிண்டனையும், பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டையும் விடுதலைப் புலிகளின் உடையில் சித்தரிக்கும் கேலிச் சித்திரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

கிலறி கிளிண்டன் இரட்டை வேடம் போடுகின்றார் என்றும் உரக்க முழக்கமிட்டனர்.

அதேவேளை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் பௌத்தலோக மாவத்தையில் இருந்து கனத்தை சந்தி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

பிரித்தானிய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் எவரும் வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தினை பார்வையிடவில்லை.

நன்றி: புதினம்.காம் (10.02.2009)

Monday, February 9, 2009

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்பு திருப்தியளிக்கின்றது: இராஜபக்சே

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்திற்கு இந்தியா அளித்து வரும் ஒத்துழைப்பு திருப்தியளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் த வீக் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை இலக்கு வைத்தே தமிழக அரசியல்வாதிகள் இலங்கை விவகாரங்களில் அதிக முனைப்பு காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இனங்களைப் போன்றே தமிழர்களுக்கும் இலங்கையில் சமவுரிமை காணப்படுவதாகவும், அதனை மறுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் யுத்தம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அர்த்தப்படாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று குறித்த தமது அர்ப்பணிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், நிச்சயமாக அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படக்கூடிய வகையில் இந்திய மத்திய அரசு ஒருபோதும் செயற்படாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நன்றி: புதினம்.காம்

Wednesday, January 28, 2009

"இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" தொடக்கம்: நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம்

இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம் நடத்த "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" முடிவு செய்துள்ளது.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்பினரும், மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக, ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை தியாகராய நகரில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவர் மருத்துவர் இராமதாஸ்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மல்லை சி.சத்யா

வழக்கறிஞர் கே.இராதாகிருஷ்ணன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், நிரந்தர அமைதி ஏற்படவும் தமிழகத்தில் என்னென்ன போராட்டங்களை நடத்துவது என்று இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த விவாதம் நடந்தது.

அதன் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இன்று கூடி கலந்து ஆலோசித்ததில் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளை வெளியிடுவதற்காக அந்த அமைப்பு இருக்கும். அந்த அமைப்பில் பங்கேற்பதற்காக மற்றவர்களையும் அழைக்க வேண்டும். இப்போது இங்கே வந்திருப்பவர்கள், "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் இப்போதிருந்து எங்களின் நடவடிக்கைகளை தொடங்குகிறோம். அதற்கு ஒருங்கிணைப்பாளராக இருக்க, பழ.நெடுமாறனை வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

காந்திமறைந்த நாளில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக நாளை இங்கே இருக்கின்ற 5 பேரும், மற்றும் இங்கே வர முடியாமல் இருக்கக்கூடிய மற்ற தலைவர்கள், அமைப்புக்கள் அனைவரையும் அழைத்து, இலங்கையில் எமது சகோதர தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்ற அந்த வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அதனை தெரியப்படுத்துகின்ற வகையில் நாங்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான தோழர்களும் கையில் கறுப்புக்கொடி ஏந்தி, அமைதியாக அங்கே மாலை 4:00 மணியில் இருந்து 6:00 மணி வரைக்கும் எமது மௌன விரதத்தை நடத்தவுள்ளோம்.

சென்னையில் ஒரு மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10:00 மணிக்கு ஒரு விரிவான கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் வகுக்க இருக்கிறோம்.

அனைத்து அரசியல் கட்சிகள்

அனைத்து சமுதாய சங்கங்கள்

வணிகர் சங்கங்கள்

மகளிர் சங்கங்கள்

மகளிர் சுய உதவிக்குழுக்கள்

இளைஞர் சங்கங்கள்

தொண்டு நிறுவனங்கள்

வழக்கறிஞர்கள்

மருத்துவர்கள்

பொறியிலாளர்கள் சங்கம்

அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம்

திரைப்பட நடிகர், நடிகைகள்

திரைப்பட இயக்குனர் சங்கம்

பத்திரிகையாளர் சங்கம்

விவசாய சங்கங்கள்

என அனைத்து தரப்பினரையும் அழைத்து ஒரு விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை அந்த கூட்டத்தில் நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்.

தொடர்ந்து, எமது இந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களை திரட்டி நாங்கள் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அது தொடர்பாக எல்லோரிடமும் பேசிவிட்டு அறிவிக்கப்படும் என்றார் பழ.நெடுமாறன்.

நன்றி: புதினம்.காம்

Friday, January 23, 2009

சிறிலங்காவுக்கான அனைத்து உதவிகளையும் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்: டி.ராஜா

சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் இந்திய மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

"சிறிலங்கா அரசே, இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்து''

'' இந்திய அரசே, போர் நிறுத்தத்திற்கு சிறிலங்கா அரசை நிர்ப்பந்தம் செய்''

என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மெமோறியல் மண்டபம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், சென்னை மாவட்ட செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் போர் ஒரு குரூரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. கிளிநொச்சி, ஆனையிறவு பகுதிகளை கைப்பற்றியதற்கு பின்னால் முல்லைத்தீவை சிறிலங்கா இராணுவம் முற்றுகையிட்டிருக்கிறது. பல லட்சம் தமிழ் மக்கள் ஒரு சின்ன நிலப்பகுதியில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில்தான், வானூர்தி தாக்குதல், தரைவழித் தாக்குதல், கடல்வழி தாக்குதல் என இத்தாக்குதல்கள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கை போர் இந்த நிலையை எட்டியிருக்கிற போது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சும்மாயிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சிறிலங்கா அரசுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இலங்கை போரில் இந்திய இராணுவத்தை சேர்ந்தவர்களே பங்கெடுத்து வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாது இந்திய கப்பற்படை சிறிலங்கா கடற்படைக்கு தேவையான இரகசிய தகவல்களை சொல்லி வருவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை ஆளும் தி.மு.க. அங்கே நடைபெறுவது இனப்படுகொலை என்று தொடர்ந்து கூப்பாடு போடுகிறது. ஒப்பாரி வைக்கிறது. கூக்குரலிடுகிறது. சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மன்மோகன் அரசு சட்டமன்ற தீர்மானத்தை சட்டை செய்வதாக இல்லை.

அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றும் தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை போட்டிருக்கின்றனர். என்ன, இறுதி வேண்டுகோள்.

கெஞ்சி வாழ்வதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல.
உரிமையோடு வாழ்வதுதான் ஜனநாயகம்.


சிறிலங்காவுக்கு கொடுத்து வருகிற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி உதவிகள் நிறுத்தவில்லையானால், நாம் அவர்கள் ஆள்வதை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்பதையும் எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

முல்லைத்தீவு வீழ்வதற்கு முன்னால், அங்கு கிளஸ்டர் குண்டுகள் மழை போல் குவிவதற்கு முன்னால், மக்கள் பிணங்களாக குவிக்கப்படுவதற்கு முன்னால், இந்திய அரசு போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து போராடும். தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமாக அது வளரும். இந்திய நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அது நடைபெறும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் ஓரணியில் திரள்வோம்: இயக்குநர் பாரதிராஜா

ஈழத் தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஓரணியில் திரள்வோம் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா இராணுவம் தமிழர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. 3 லட்சம் தமிழர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இல்லை எனில், உலகிலேயே கொடூரமான மனித படுகொலை முல்லைத்தீவு காட்டில் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.

முதலமைச்சர் கருணாநிதி பல சமயங்களில் கோரிக்கை வைத்தும், அசைந்து கொடுக்காத மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோளை தற்போது சட்டசபை மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.

ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பிரச்சினை என்றால், அனைவரும் ஓரணியில் திரள்வோம். ஒட்டுமொத்த சமூகமும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து, இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவர வழிவகை செய்யவேண்டும் என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Thursday, January 22, 2009

தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசின் நிலை மாறவே மாறாது: சிறிலங்கா

இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசாங்கத்தின் நிலை மாறவே மாறாது என்று சிறிலங்காவின் அமைச்சர் லக்ஸ்மன் அபேயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

வடக்கில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விடுதலைக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதன் முதற் கட்டமாக இராமநாதன் சுதந்திரபுரம், அருணாசலம் வெற்றிபுரம், கதிர்காமர் எழுச்சிநகர் போன்ற பெயர்களில் மூன்று விடுதலைக் கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.

தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் சிறிலங்கா மீதான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லை. இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு சார்பாகவே உள்ளது.

வடக்கில் போர் நடைபெறும் பிரதேசங்களுக்கான அரசாங்கத்தின் உணவுப் பொருள் விநியோகம் குறித்து இந்தியா திருப்தி அடைந்துள்ளது என்றார் அவர்.

நன்றி: புதினம்.காம்

Tuesday, January 20, 2009

சிங்கள அரசுக்கு துணை போகும் இந்திய அரசினைக் கண்டித்து தமிழகத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

சிங்கள அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசாங்கத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் கே.வெங்கடாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் புதன்கிழமை (21.01.09) முதல் தமிழகம் எங்கும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி புதினம்.காம்.

Monday, January 19, 2009

இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் மாபெரும் கண்டனப் பேரணி

அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


தமிழீழத்தின் வன்னிப் பகுதி மீது தற்போது சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வரும் பாரிய படையெடுப்பின் ஊக்க சக்தியாக இந்தியா இருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) முற்பகல் 11:00 மணிக்கு பேரணி நடைபெறவுள்ளது.

மிகவும் முக்கியமான இன்றைய காலத்தின் தேவை கருதி போதிய முன்னறிவுப்பு வழங்க அவகாசம் ஏதும் இல்லாததால் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தப்படும் இப்பேரணியில் அமெரிக்கத் தமிழர்கள் அனைவரையும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தற்போது நிகழும் தமிழின படுகொலைப் போரை உடனடியாக நிறுத்தும் படியும் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் அனைத்து விதமான போர் தொடர்பான உதவிகளையும் புலிகள் இயக்கம் தொடர்பான உளவுத் தகவல்களையும் உடனடியாக நிறுத்தும்படியும் இந்தியாவைக் கோருவதுடன்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவில் இருக்கும் தடையை உடனடியாக நீக்கும் படியும் இப்பேரணியின் போது அமெரிக்கத் தமிழர்கள் இந்தியாவைக் கோருவர் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் முடிவில் மேற்கூறப்பட்ட கோரிக்கைகளுடன், தமிழீழம் எப்போதும் இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் என்ற வாதத்தையும் வலியுறுத்தும் மனுவொன்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவரிடமும் அவர் ஊடாக இந்தியப் பிரதமர் மற்றும் சோனியா காந்தி அம்மையாரிடமும் கையளிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நன்றி புதினம்.காம்.

Friday, January 16, 2009

என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன்: திருமாவளவன்

தமிழ்நாடு காவல்துறை என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன் என்று உண்ணாநிலை போராட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்டு வரும் திருமாவளவன் தண்ணீரை மட்டுமே அருந்துகின்றார். இதனால் அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.


திருமாவளவனின் உடல்நிலையை இன்று பரிசோதித்த மருத்துவர்கள் குழு இன்சுலின் அளவு சற்று குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இரவு மேடையிலேயே உறங்கினார். அவரது கட்சியின் தொண்டர்கள் விடிய, விடிய விழித்து இருந்தனர்.

தொண்டர்களிடம் அவர், "நீங்கள் யாரும் உண்ணாநிலை இருக்க வேண்டாம். நான் மட்டும் இருக்கிறேன்." என்று கேட்டுக்கொண்டார்.

"இந்த போராட்டம் தி.மு.க.வுக்கு எதிராகவோ, தமிழக அரசுக்கு எதிராகவோ கிடையாது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது.


பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரிடம் வலியுறுத்தினோம். ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றி பேசமாட்டார். சார்க் மாநாடு பற்றி பேசவே சிறிலங்கா வருகிறார் என்று அந்நாட்டின் அமைச்சர் சொல்கிறார். இதனை மத்திய அரசாங்கமும் மறுக்கவில்லை.




இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனால் என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட மாட்டேன். அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டாலோ, வேறு நெருக்கடி உண்டானாலோ தொண்டர்கள் அமைதியுடன் கட்டுப்பாடு காக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்றும் கூறினார்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

நாளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மகளிர் விடுதலை சிறுத்தைகளும் இதில் ஒருங்கிணைந்து பங்கேற்க வேண்டும்.

காவல்துறையினர் ஒருவேளை என்னை கைது செய்தாலும், இலங்கை போர் நிறுத்தத்தை கைவிட கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறேன்.

நேற்று என்னை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தித்தார். அப்போது உண்ணாநிலைப் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராதாஸ் இன்று தொலைபேசி என்னிடம் பேசினார். அப்போது, "இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு வேறு முறையில் முயற்சி செய்வோம். எனவே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் என்பதை கைவிட வேண்டும்'' என்று கூறினார். இது குறித்து எங்கள் அமைப்புடன் கலந்து பேசி முடிவு செய்வேன் என்றார் அவர்.

திரையுலகத்தைச் சேர்ந்த விஜய டி.இராஜேந்தர், இயக்குநர்களான பாரதிராஜா, செல்வமணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம், மூர்த்தி உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.

உண்ணாநிலைப் போராட்ட மேடையில் நடிகர் மன்சூர் அலிகான், நிர்வாகிகள் கலைக் கோட்டுதயம், சிந்தனை செல்வன், திருமாறன், வன்னியரசு, பாவரசு, பாவலன், ஆர்வலன், உஞ்சை அரசன், சேகுவேரா, பார்வேந்தன் உள்பட பலர் அமர்ந்திருந்தனர்.

நன்றி புதினம்.காம்