Thursday, February 7, 2008

சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துக: இந்திய அமைச்சரிடம் பெரியார் திராவிடர் கழகம் நேரில் வலியுறுத்தல்




சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று 10 லட்சம் தமிழ் மக்கள் கையெழுத்திட்ட படிவங்கள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் வியாழக்கிழமை அன்று (07.02.2008) நேரில் வழங்கப்பட்டது.


புதுடில்லியில் ஏ.கே.அந்தோணியின் இல்லத்தில் மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச் செயலாளர்களான விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன், பெரியார் தி.க. தலைமைக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சா.துரைசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏ.கே. அந்தோணியை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்திய அரசு வழங்கக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் பல லட்சக்கணக்கானோர் கையெழுத்திட்ட படிவங்களும் ஏ.கே.அந்தோணியிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் நேற்று புதன்கிழமை இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான கண்டன ஆர்ப்பாட்டத்தையும் பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: