Friday, December 19, 2008

புதுச்சேரியில் சட்டத்தை வன்புணர்ச்சி செய்யும் சட்டத்தின் காவலர்கள்

“இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது” என்று ஆட்சியாளர்களால் சொல்லப்படுகிறது. மக்களும் நம்புகிறார்கள். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காகத்தான் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் சட்டத்தை உருவாக்கும் பணியையும் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் அதை நடைமுறைப்படுத்தும் பணியையும் நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே தொடர்புடையவர்கள் உறுமொழி ஏற்றுக்கொண்டு பணியாற்றுகிறார்கள். ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப இவர்கள் நடந்துகொள்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க; மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை கேளிக்கூத்தாக்கி ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் வலைத்து நெளித்து தன்னலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது நாட்டுமக்கள் அனைவரும் அறிந்ததே.

இத்தகைய இழிச்செயல்களை மிஞ்சும் வகையில் புதுச்சேரி காவல்துறையினர் நேற்று ஒரு செயலைச் செய்தனர். இச்செயல் “சட்டத்தின் மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சி” என்று குறிப்பிடுவது மிக்கச் சரியாக இருக்கும்.








புதுச்சேரியைச் சேர்ந்த இரமேசு என்பவர், புதுச்சேரி காவலர்கள் தன்னிடம் கையூட்டு கேட்பதாக கொடுத்த புகார் தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துணை ஆய்வாளர் சறீதர், வழக்கறிஞர் அம்பலவாணன் ஆகியோரை நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் பொறிவைத்து கையும் களவுமாக வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேர்நிறுத்துமாறு நீதிபதி ஆணையிட்டார். இதன் பேரில் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் நடுவண் குற்றப் புலனாய்வு காவலர்கள் கைது செய்யப்பட்ட இருவரையும் நேர்நிறுத்தினர். அப்போது வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினர். தலைமை நீதிபதி கிருட்டிணராசா, வழக்கறிஞர் அம்பலவாணணுக்கு பிணை வழங்கினார். ஆனால் துணை ஆய்வாளர் சறீதருக்கு பிணை வழங்கவில்லை.

ஒரே வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞருக்கு பிணை கிடைத்த நிலையில் துணை ஆய்வாளருக்கு பிணை அளிக்காததால், ஆத்திரமடைந்த புதுச்சேரி காவலர்கள் திரண்டுவந்து ரகளையில் ஈடுபட்டனர்.

தலைமை நீதிபதி கிருட்டிணராசா அறை முன் காவலர்கள் திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒருசில காவல்நிலையங்களுக்கு பூட்டும் போட்டுவிட்டு ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர், காவலர்கள், ஆயுதப்படை பிரிவினர் என சுமார் 750- க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய காவலர்களே ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலையங்களிலும், போக்குவரத்துப் பணிகளிலும் பணியாற்ற போதுமான காவலர்கள் இல்லை.

இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. இதற்கிடையில் காவலர்களின் குடும்பத்தினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் காவலர்களுடன் வந்து, நீதிமன்ற வளாகத்தில் திரண்டனர். துணை ஆய்வாளருக்கு பிணை வழங்காத நீதிபதி வெளியில் செல்ல முடியாத வகையில் ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

காவலர்களின் ரகளைக்கு பணிந்த நீதிபதி கையூட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட துணை ஆய்வாளர் சறீதருக்கு வெள்ளிக்கிழமை மாலை பிணை வழங்கினார். இதையடுத்து காவலர்கள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புதுச்சேரி காவலர்களின் சட்டத்திற்கு புறம்பான இச்செயல் காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 வரை நீடித்தது.

இதற்கிடையில் காவலர்களின் ரகளையை படம் பிடிக்க முயன்ற ஊடகவியலாளர்கள் செல்வராசு, சேகர், பாலா ஆகியோரை காவலர்கள் தாக்கினர். அவர்களின் படக்கருவிகளும் உடைக்கப்பட்டன. காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேரும் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட ஊடகவியலாருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சியினருடனும் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெற்ற காவலருக்கு ஆதரவாக புதுச்சேரி காவல்துறையே முழுமையாக செயல்பட்டதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களாட்சி தத்துவத்தின் மீதும் சட்டத்தின்மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தற்போது எழுந்துள்ள ஐயம் என்னவென்றால்,

காவலர்கள் கடமையைச் செய்வதற்காக கையூட்டு பெறுவது சட்டப்படி ஏற்கப்பட்டுள்ளதா என்பதுதான்? (ஆம், என்றால் வெளிப்படையாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இந்த வேலைக்கு இவ்வளவு தொகை என்று விலைப்பட்டியல் வைக்கட்டும். இல்லை, என்றால் நேற்று நீதிமன்றத்தில் அத்துமீறிய காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும்.)

காவல்துறை உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு பணியாமல் கட்டளைகளை புறக்கணித்த காவலர்களின் மீது காவல்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

நீதிபதி அறையை முற்றுகையிடவும், நீதிமன்ற வளாகத்தில் ரகளையில் ஈடுபடவும் காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி உண்டா? இல்லை, என்றால் ரகளையில் ஈடுபட்ட காவலர்கள் மீதும் அவர்களின் உறவினர்களின் மீதும் நீதிமன்றமும் அரசும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

கையூட்டு வழக்கில் அரசு அதிகாரிகளோ அரசு ஊழியர்களோ கைது செய்யப்படும்போது அரசு ஊழியர் சங்கங்கள் நீதிமன்றத்தை முற்றுகையிட அனுமதிக்கப்படுமா? அப்படி முற்றுகையிட்டால் நீதிபதிகள் உடனடியாக பிணை வழங்குவார்களா?

எதிர்காலத்தில் புதுச்சேரி அரசியல்வாதிகளும், குற்றவாளிகளும் தங்களுக்கு பிணை வேண்டும் என்பதற்காக நீதி மன்றத்தில் கும்பல் கூட்டி ரகளையில் ஈடுபட்டால் நீதிபதிகள் உடனே பிணை வழங்கிவிடுவார்களா?

தங்களைத் தாக்கிய காவலர்களுக்கு எதிராக ஊடவிலாளர்கள் எப்படி எதிர்வினை புரியப்போகிறார்கள்?

இப்படி பல்வேறு ஐயத்துடன் புதுச்சேரி மக்கள் அச்சத்தோடு நடமாடுகிறார்கள்...

“வலிமையானது நிலைக்கும்” என்ற டார்வின் கோட்பாட்டைப் போல சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக சொல்லப்படும் இந்த நாட்டில் “கும்பல் கூட்டி ரகளை செய்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என்ற புதிய கோட்பாட்டை புதுச்சேரி காவல்துறையும் நீதித்துறையும் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

வாழ்க! சட்டத்தின் ஆட்சி!

படங்கள்: தினகரன்

4 comments:

thamizham said...

அன்பரே உங்களது வலைப்பூவைப் பார்த்தேன் இளங்கோவன் அறிமுகப் படுத்தினார். மக்களுக்காக மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிற வகையில் எழுதுகோலைப் பயன் படுத்துவது வணங்குதற்குரியது. வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்
தொடர்க.. வரலாறு காட்டுக
அன்புடன் பொள்ளாச்சி நசன்

இரா.சுகுமாரன் said...

கிரிமினல் குற்றத்தை நியாயப்படுத்தி சட்ட ரீதியான கிரிமினல் கும்பலான காவல் துறையும் போராடுகிறது.

கவிமதி said...

வணக்கம் தோழர்
உங்களது வலைப்பூவைப் பார்த்தேன் இளங்கோவன் அறிமுகப் படுத்தினார்.

எல்லாத் துறைகளைப்போல் காவல்துறையும் போராட்டத்தில் குதிக்கலாம் ஆனால் தங்களுக்கு கையூட்டு வாங்கும்வகையில் சட்டம் வேண்டும் என்பதுபோல் புதுச்சேரி காவலர்கள் நடந்துகொண்டிருப்பது வெட்கக்கேடுதான்.

என்ன செய்வது தனிமனித ஒழுக்கம் இல்லையெனில் எத்தனை பயிற்சி எடுத்தும் என்ன பயன் எல்லாம் சடங்காகதானே கடைப்பிடிக்கப்படுகிறது.

காவலர்கள் திருந்தவில்லையெனில் மக்கள் மதிக்கமாட்டார்கள் என்பதை உணரவேண்டும்.

திருந்துவார்கள் என்கிற நம்பிக்கையோடு
கவிமதி/துபாய்
www.kavimathy.blogspot.com

அரியாங்குப்பத்தார் said...

தோழர் கவிமதி அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

காவல்துறையினர் தங்கள் உரிமைக்காக போராடுவது தவறில்லை. அவர்கள் உண்மையான மக்கள் பணியாளர்களாக பணியாற்ற காவல்துறை நிர்வாகம் உடனடியாக ஒருசில பணி வரைமுறைகளை உடனடியாக செய்தாகவேண்டும்.

குறிப்பாக,

அவர்களின் பணிநேரத்தை குறைக்க வேண்டும்.

காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.

காவல் துறையில் பணியாற்றும் அனைவரும்; சமூகத்தில் தங்கள் பங்களிப்பு என்ன? பணி என்ன? மனித உரிமை என்றால் என்ன? என்பதை அவர்கள் உணரவேண்டும் அல்லது அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படவேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது அவர்கள் தங்களை மீள்பார்வை செய்துகொள்ளவேண்டும்.

காவல்துறையினரின் சமூகக்கடமையை உணர்ந்து பிற அரசுத்துறைகளைவிட அவர்களின் மாதச்சம்பளத்தை உயர்த்த வேண்டும். (அவர்கள் கையூட்டு வாங்குவது இதனால் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது)

குறிப்பிட்ட காவலர் அல்லது காவல்துறை அதிகாரி சட்டத்துக்கு புறம்பாக செயல்படும்போதோ அவரின் மீது பொதுமக்கள் புகார் அளித்தால் விசாரணை நடத்தி அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகள் காவலர்கள் சிறப்பாக பணியாற்ற உதவும்.

காவலர்கள் ஆட்சியாளர்களால் பாதிக்கப்படும் போதும் பழிவாங்கப்படும்போதும் பொதுமக்களும் காவலர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். தங்கள் உரிமைக்காக பொதுமக்கள் போராடும் போது அவர்கள் வன்முறையில் ஈடுபடாத வரை எந்தவொரு தாக்குதல்களையும் காவலர்கள் மேற்கொள்ளாமல் இருந்தால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்ல உறவு இருக்கும்.