Tuesday, January 20, 2009

சிங்கள அரசுக்கு துணை போகும் இந்திய அரசினைக் கண்டித்து தமிழகத்தில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

சிங்கள அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசாங்கத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் கே.வெங்கடாசலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்து கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் புதன்கிழமை (21.01.09) முதல் தமிழகம் எங்கும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி புதினம்.காம்.

No comments: