Tuesday, February 10, 2009

இந்தியாவுக்கு சிங்கள இனவெறியர்கள் நன்றி தெரிவித்தனர்

பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேவேளை, சிறிலங்கா படையினருக்கு உதவி புரிவதாக கூறி இந்தியா, சீனா, ரசியா ஆகிய நாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

இந்தியா, சீனா, ரசியா போன்ற நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

சிறப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சிறிலங்கா மக்களின் நன்றிகள் உரித்தாகட்டும் என்றும் அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் உதவி புரிய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.

முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தலைமை தாங்கினார்.

நூற்றுக்கனக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான பௌத்த குருமாரும் கலந்து கொண்டனர்.

மகிந்த அரசாங்கத்தின் போர் நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இடையூறு விளைவிக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போர் நிறுத்தம் செய்யுமாறு வற்புறுத்துகின்றனர். இதனை சிறிலங்கா மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம் சாட்டினர். அந்த நாடுகளின் பிரதிநிதிகளை கிண்டல் செய்யும் கேலிச் சித்திரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

குறிப்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் கிலறி கிளிண்டனையும், பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டையும் விடுதலைப் புலிகளின் உடையில் சித்தரிக்கும் கேலிச் சித்திரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

கிலறி கிளிண்டன் இரட்டை வேடம் போடுகின்றார் என்றும் உரக்க முழக்கமிட்டனர்.

அதேவேளை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் பௌத்தலோக மாவத்தையில் இருந்து கனத்தை சந்தி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

பிரித்தானிய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் எவரும் வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தினை பார்வையிடவில்லை.

நன்றி: புதினம்.காம் (10.02.2009)

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்