Monday, March 16, 2009

ராஜபக்ஸ அரசுக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி, ஜனநாயக குரல்வளையை நசுக்கிறது: செய்தியாளர்களிடம் வைகோ

இலங்கை அரசுக்கு உதவி வரும் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி வருகிறது. இது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் சீமானைப் பார்த்து விட்டு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த இயக்குநர் சீமானை புதுச்சேரி அரசு முதலில் சாதாரண குற்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் பாசிச ஆட்சி நடத்தும் முதல்வர் கருணாநிதி, சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தன் கையில் உள்ள காவல் துறையை ஏவி விட்டு ஏற்பாடு செய்தார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசியல்வாதிகள் பேசாததையா இயக்குநர் சீமான் பேசிவிட்டார்?

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்குக் காரணம் இலங்கை கடல் எல்லையில் கண்ணி வெடி வைத்துள்ளனர். இலங்கை இராணுவம் சுட்டதில் இதுவரை தமிழக மீனவர்கள் 500 பேர் இறந்துள்ளனர். இதுவரை யாரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் பணம் வட்டியில்லாமல் கொடுத்துள்ளது. இலங்கை அரசுக்கு உதவி வரும் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது. ராஜபக்ஷ அரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி வருகிறது.

இந்தியா மட்டுமன்றி பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷியா போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆயுத உதவி செய்து வருகின்றன. இது ஜனநாயகக் குரல்வளையை நசுக்குவது போல் உள்ளது. இப் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடையும்.

காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வார்கள் என்று சீமான், நாஞ்சில்சம்பத், கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தந்திரமாக கைது செய்துவிட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை 11 இளைஞர்கள் தீக்குளித்து இறந்துள்ளனர். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை என்ற தீ தமிழர்கள் மனதில் கொழுந்து விட்டு எரிகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மதிமுக சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் கோவையில் நான் பங்கேற்க உள்ளேன் என்றார் வைகோ.

பேட்டியின் போது மதிமுக மாநில அமைப்பாளர் மணிமாறன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் மற்றும் மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நன்றி: தமிழ்வின்.காம்

No comments: