Sunday, March 22, 2009

இலங்கையில் போரில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை விவர ஐ.நா. ஆவணம் வெளியிடப்பட்டது

இலங்கையில் இவ்வருடம் ஜனவரி 20ஆம் திகதியில் இருந்து மார்ச் 7ஆம் திகதி வரையில் 2683 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் தெரிவித் திருக்கின்றது.

ஐ.நாவின் ஆவணம் ஒன்று தற்செய லாக (உத்தியோகபூர்வமற்ற வகையில்) வெளிப்பட்டுவிட்டதில் இந்த விவரம் காணப்படுகிறது. இன்னர் சிற்றி பத்திரிகையில் இந்த ஆவணம் வெளியிட்டுள்ளது.

இப்போது இந்த ஆவணம் பல பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள், தூதுவர்கள் கைகளிலும் மூத்த ஐ.நா. அரசியல் மற்றும் மனித உரிமை அதிகாரிகளின் கைகளுக்கும் கிடைத்துள்ளது. வன்னிப் போரினால் பொதுமக்கள் இறந்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த தகவலை கொழும்பில் மனித உரிமைகள் அமைச்சர் மறுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த ஓர் அறிக்கையில் இலங்கையில் அரசாங்கமும் தமிழ்ப் புலிகளும் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதற்கு சாத்தியம் என்ற வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடுக்க இயலாது.
நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றீர்களா என்று அந்த நீதிமன்றத்தின் வழக்குத் தொடுனரான லூயிஸ் மோரேனோ ஏகாம்போவிடம் இன்னர் சிற்றிப் பிளேஸ் செய்தியாளர் கேட்டார்.

ஒகாம்போ அதற்கு பதிலளிக்கையில் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்ட தரப்பினராக இல்லை என்றார்.

மேலும் மிக அண்மையில் தாம் ஆபிரிக்காவில் மாத்திரமே போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முயற்சிப்பதாக ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தம்மீது குற்றஞ்சாட்டியிருந்தாகக் கூறினார்.

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோப்பு ஒன்றை அல்லது விவர ஆவணம் (Data Base) ஒன்றைத் திறந்திருக்கிறது என்ற தகவலை ஒகாம்போவுடன் பிரயாணங்களில் ஈடுபடும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அலுவலர் ஒருவர் இன்னர் சிற்றி பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெற்றிருக்காமையால் சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும் பாலஸ்தீனியர்களைப் போன்று இலங்கைத் தமிழர்கள் தமக்கு நியாயாதிக்கம் அதாவது சட்டப் பாதுகாப்பு (Jurisdiction) வழங்கும்படியாகவும் கூட இன்னும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி: புதினம்.காம்

No comments: