Thursday, February 7, 2008

சிறிலங்காவுக்கான ஆயுத உதவியைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான ஆர்ப்பாட்டம்


சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்திய நாடாளுமன்றம் முன்பாக புதன்கிழமை அன்று (06.02.008) முற்பகல் 11:30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 700-க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுடில்லி வாழ் தமிழர்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை தமிழ்- ஆங்கிலம்- ஹிந்தி ஆகிய மும்மொழிகளிலும் எழுப்பினர்.

பேரணி நடைபெற்ற பகுதி எங்கும் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தினது இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் பதாகைகளாக தொங்க விடப்பட்டிருந்தன.

இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்து-

இனப்படுகொலைக்குத் துணை போகாதே!

ஆயுத உதவி வழங்காதே!

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை தமிழ்- ஆங்கிலம்- இந்தி ஆகிய மும்மொழிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் சித்தரிக்கும் வகையில் குழந்தைகள், பெண்கள் ஆகியோர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.


பெருந்திரளாக அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துக: இந்திய அமைச்சரிடம் பெரியார் திராவிடர் கழகம் நேரில் வலியுறுத்தல்




சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று 10 லட்சம் தமிழ் மக்கள் கையெழுத்திட்ட படிவங்கள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் வியாழக்கிழமை அன்று (07.02.2008) நேரில் வழங்கப்பட்டது.


புதுடில்லியில் ஏ.கே.அந்தோணியின் இல்லத்தில் மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச் செயலாளர்களான விடுதலை இராசேந்திரன், கோவை கு.இராமகிருட்டிணன், பெரியார் தி.க. தலைமைக் குழு உறுப்பினர் சட்டத்தரணி சா.துரைசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏ.கே. அந்தோணியை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்திய அரசு வழங்கக்கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் பல லட்சக்கணக்கானோர் கையெழுத்திட்ட படிவங்களும் ஏ.கே.அந்தோணியிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுடில்லியில் நேற்று புதன்கிழமை இந்திய நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சியான கண்டன ஆர்ப்பாட்டத்தையும் பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, February 2, 2008

என் உறவே
உன் இன்னல்கண்டு
என்னால் அழமட்டுமே
முடியும்...

ஒரு அடிமையிடம்
இதைத்தவிர
வேறெதுவும்
எதிர்பார்த்து
ஏமாறாதே...

உன் இலக்கு
உன் நெஞ்சுரத்தில்
கூர்மையடைந்திருப்பதையும்
நீ அடையும்
தூரத்திலேயே
அது இருப்பதையும்
நானறிவேன்...

முன்னேறு...

உன் மகிழ்ச்சியிலும்
என்னால் பங்கெடுக்க
முடியாது...

அடிமை
மகிழ்ச்சியோடு
இருப்பதை
எந்த முதலாளியும்
விரும்பமாட்டான்...

அனைத்திற்கும்
என்னால்
கண்ணீர்சிந்த மட்டுமே
முடியும்...

கங்காணி
பார்த்துவிடப்போகிறான்...

தமிழ்நாடன்

புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து தமிழக மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்: தொல்.திருமாவளவன்



தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்து ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


கச்சத்தீவு கடற்பரப்பில் கண்ணிவெடி புதைப்பு மற்றும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு ஆகியவற்றுக்காக சிறிலங்கா அரசு மீது இந்திய அரசு போர் தொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.


சிறிலங்காவைக் கண்டித்து முழக்கங்களை திருமாவளவன் எழுப்ப திரண்டிருந்தோரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் திருமாவளவன் பேசியதாவது:
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவ தமிழர்கள் கடந்த 20ஆம் நாள் 599 படகுகளில் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையினர் சுற்றி வளைத்திருக்கிறார்கள். ஏராளமான மீனவத் தமிழர்கள் தங்களது படகுகளை விரைந்து ஓட்டி வந்து கரையேறிவிட்டாலும் சில படகுகள், சிங்கள இனவெறிக் கும்பலின் கடற்படையின் சுற்றிவளைப்புக்குட்பட்டு 12 பேர் பிடிபட்டனர்.


அந்த 12 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நிறுத்தி சிங்கள இனவெறி அரசு சிறைபிடித்து வைத்தது. படகுகளையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இந்த நிலையில்தான் இராமேஸ்வரம் மீனவத் தமிழர்கள் கடந்த 25 ஆம் நாள் முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலே ஈடுபட்டனர். அப்போதுதான் இந்த அதிர்ச்சிகரமான செய்தியும் கசிந்தது.


என்ன செய்தி?


சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள்- சிங்க இனவெறி கடற்படையினர் கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருக்கிறார்கள் என்ற செய்தி.
ஒரு உண்மையை இங்கு நாம் உணர வேண்டும்
இந்திய அரசுக்கு தெரியாமல் சிங்கள அரசு கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருக்க முடியாது. ஏனெனில் சிங்களக் கடற்படையினர் கடலிலே கண்ணிவெடிகளை மிதக்க விட்ட செய்தி அறிந்ததும் எதிர்வினையாற்றி இருக்க வேண்டும் இந்திய அரசு.


ஆனால் இந்திய அரசு ஆற்றிய எதிர்வினை என்ன?
"தமிழ்நாட்டு மீனவர்களே நீங்கள் மீன்பிடிக்கச் செல்லாதீர்கள்- சிங்கள அரசு கடலில் கண்ணிவெடிகளை போட்டிருக்கிறது" என்று சொல்லுகிறார்கள். இது எவ்வளவு கேவலமானது- அருவருப்பானது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.


முதல் உலக யுத்தத்தின் போதுதான் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் உண்டு.
இரண்டாவது உலக யுத்தம் நடைபெற்ற 1945-1949 வரையிலான காலகட்டத்தில் பாரசீக வளைகுடாக் கடற்பரப்பில் கடல் கண்ணிவெடிகளை போட்டிருந்ததாகவும் அந்த கண்ணிவெடிகளை 1988 ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல் ஒன்று மிதித்ததாகவும் அதில் அந்தக் கப்பல் சேதமடைந்ததாகவும் செய்திக்குறிப்புகள் சொல்லுகின்றன.


கடல் கண்ணிவெடிகள்- நிலக்கண்ணிவெடிகளைப் போன்றதல்ல. ஆனால் கடல் கண்ணிவெடிகள் மிதந்து கொண்டே- நகர்ந்து கொண்டே இருக்கும். ஓரிடத்தில் இருக்காது.


ஆகவே மிகப் பெரிய ஆபத்து அது. தீங்கு விளைவிக்கக்கூடியது.
இரண்டாவது- நிலத்தில் புதைக்கப்படுகிற கண்ணிவெடிகளின் ஆயுட்காலம் குறைவு.


ஆனால் கடலிலே மிதக்க விடுகிற- புதைக்க விடுகிற அந்தக் கண்ணிவெடிகளின் ஆயுள் மிக நீண்டது என்பது பாரசீகுடா வளைகுடா கண்ணிவெடிகள் வெடித்ததிலிருந்து உணரமுடிகிறது.
யாழ்ப்பாணத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு என்பது சிறிலங்காவுக்குச் சொந்தமானது.


கச்சதீவு என்பது இந்திய அரசுக்குச் சொந்தமானது.
ஆனால் இந்திய அரசு- தமிழ்நாட்டைக் கேட்காமல்- தமிழ்நாட்டு முதலமைச்சரைக் கேட்காமல்- தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தாமல் தமிழ்நாட்டினது ஒப்புதல் பெறாமல் 1970-களின் தொடக்கத்திலே கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது இந்திய அரசு.


கச்சத்தீவு கடற்பரப்பில் கண்ணிவெடிகளைப் போடுவதற்கு சிங்கள அரசுக்கு யார் அதிகாரம் தந்தது? எதற்காகக் கண்ணிவெடிகளைப் போடுகிறீர்கள்?
கண்ணிவெடிகளைப் போடுவது என்பதுகூட போர் நடைபெறுகிற சூழல்தான்.
இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே போர் மூளுகிற நடைபெறுகிற சூழலா உள்ளது?


விடுதலைப் புலிகளுக்கு எதிராக கண்ணிவெடிகளைப் போடுகிறீர்கள் என்றால் அது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இடையூறு இல்லாது இருக்க வேண்டும் அல்லவா?


அப்படிக் கண்ணிவெடிகளைப் போட்ட பின்னரும் கூட இந்திய அரசு ஆத்திரப்படவில்லை.


இந்திய அரசு - கண்டன அறிக்கை வெளியிடவில்லை.
கண்ணிவெடிகளை அகற்ற இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களை எச்சரிக்கிறது. மிகக் கேவலமான அணுகுமுறை இது.


கடலிலே கண்ணிவெடிகளை போட்டிருப்பது என்பது சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டிய ஒரு நடவடிக்கை.


இந்நேரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.


சிங்கள இனவெறி அரசானது பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கூடிக் குலாவினாலும் இந்திய அரசுக்கு எதிராக செயற்திட்டங்களை முன்னெடுத்தாலும் வலிந்து வலிந்து சிங்கள அரசுக்குத் துணை போகிறது.அதற்கு என்ன காரணம் எனில் தமிழீழம் அமைவதைத் தடுப்பதுதான்.


ராஜீவ் காந்தி கொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்படவில்லை என்பதே உண்மை.


உண்மையில் தமிழீழம் அமைவதில் இந்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை.


தமிழீழம் அமைவதை இந்திய அரசு விரும்பவில்லை.
சிங்கள அரசு - ஒரு கட்டத்திலே போனால் போகட்டும்- நம்மிடத்திலே இருப்பவன் கூலி வாங்கிக் கொண்டு போரிடுகிறான் - புலிகளோ உயிரைக் கொடுத்து சண்டை போடுகிறார்கள். எனவே ஈழத்தை பிரித்துக் கொடுத்துவிடுவோம் என்று அவன் கீழிறங்கி வந்துவிட்டால் தனக்கு ஆபத்து என இந்தியா நினைக்கிறது.


இரு பெரிய அரசுகளுக்கு தமிழீழம் அமைவதிலே விருப்பம் இல்லை.


1. அமெரிக்க அரசு.


2. இந்தியப் பேரரசு.


தமிழீழம் அமைவதை அவர்கள் விரும்பவில்லை- அதனாலேயே தடை விதித்திருக்கிறார்கள்.


ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்காக புலிகள் மீது தடை விதிக்கவில்லை.
அப்படியானால் ராஜீவைக் கொன்றதற்காக அமெரிக்கா தடை விதித்தது? கனடா தேசம் ஏன் தடை விதித்தது? ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தது ராஜீவைக் கொன்றதற்கா?


ஏன் தடை விதித்திருக்கிறார்கள் என்றால் "அமெரிக்க ஏகாதிபத்திய"த்தின் நெருக்கடியால்தான் தடை விதித்திருக்கிறார்கள்.


இந்திய அரசு தடை விதித்திருப்பதற்கு 2 காரணங்கள் உண்டு.


1. இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்பது தமிழீழத்துக்கு எதிராக இருக்கிறது- தமிழீழம் வந்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் எழுச்சிப் பெற்றுவிடுவார்கள் என்ற அச்சம் உள்ளது.


2. இந்திய அரசாங்கமும் அமெரிக்க அரசாங்கமும் கட்டுப்பட்ட அரசாங்கம். இந்தியாவின் பொருளாதார- வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்ற இடத்தில் அமெரிக்கா உள்ளது.


இதெல்லாம் காங்கிரசின் ஞானசேகரனுக்கும் அண்ணன் இளங்கோவனுக்கும் தெரியாமல்தான் ராஜீவ் காந்தி- ராஜீவ் காந்தி என்று எதற்கெடுத்தாலும் சொல்லுகின்றனர்.


இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தவறு என்றுதான் சொல்லுகிறோம்.


என் இனத்திற்கு எதிராக நீ முடிவெடுக்கிறாய்- யாரைக் கேட்டு நீ முடிவெடுப்பது?


வெளிவிவகாரக் கொள்கை என்றால் 4 அதிகாரிகளை வைத்து முடிவெடுப்பதா?


அந்த அதிகாரிகளில் ஒருவனாவது தமிழன் உண்டா?


தமிழ்நாட்டு மக்களிடத்தில் கருத்து கேட்டீர்களா?


தமிழ்நாட்டு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் கருத்து கேட்டீர்களா?


தமிழ்நாட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்டிருக்கிறீர்களா?


நாடாளுமன்ற மக்களவை- மாநிலங்களவையிலே விவாதித்திருக்கிறீர்களா?


தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்கிற வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களிடத்தில் கருத்து கேட்டீர்களா?


யாரிடத்திலே கேட்டீர்கள்?


தமிழ்நாட்டு மக்களிடத்திலே பொது வாக்கெடுப்பு நடத்துங்கள்-


இந்தியப் பேரரசுக்கும்


இந்திய தேசிய காங்கிரசுக்கும் துணிச்சல் இருந்தால் "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்று அறிவித்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்! முடியாது உங்களால்.


"தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை" பகிரங்கமாக பிரகடனம் செய்துவிட்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க துணிச்சல் இருந்தால் சந்தியுங்கள்!


காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரன் தனியாக நின்றால் 4 வாக்குகள் வாங்குவாரா?


காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் தனியாக நின்றால் 3 வாக்குகள் வாங்குவாரா?


தி.மு.க.வின் தயவிலே வெற்றி பெற்றுவிட்டு இன்று தி.மு.க. அரசுக்கே நெருக்கடி கொடுப்பதா?


தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1967ஆம் ஆண்டு சட்டம் பற்றி சொல்லியிருக்கின்றார்கள். அ.தி.மு.க, காங்கிரஸ் பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.


உங்கள் தயவு இல்லாமல் அவர்களால் வெற்றி பெற முடியாது. காங்கிரசுக்கு இருக்கிற வாக்கு வங்கி என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கிதான்.
இந்தத் திருமாவளவன் எழுப்பியிருக்கும் கருத்துரிமை பிரச்சினை என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கருத்துரிமைக்காக.


நாங்கள் கருத்துரிமை மீட்பு மாநாடு நடத்தியதே முதல்வர் கலைஞருக்காகத்தான்.


தமிழ்நாட்டு முதல்வர்- 4 வரி கவிதை எழுதினால் அது "அம்மா"வுக்குப் பொறுக்கவில்லை.


ராஜீவ் கொலைக்கும்- புலிகள் மீதான தடைக்கும் இந்திய அரசினது வெளிவிவகாரக் கொள்கைதான் காரணம். இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை அச்சப்படுகிற கொள்கை.


தமிழீழம் அமைந்துவிட்டால் தமிழ்நாடு- தனிநாடாக விடும் என்று கற்பனையில் அச்சப்படுகிறார்கள்.


தமிழ்நாடு தனிநாடாகி விடும் என்று நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்-?
அப்படியானால் அதற்குரிய தேவை இருக்கிறது என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?


அதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளன என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்களா?
தமிழ்நாடு- தனிநாடாகது என்று சொல்லக்கூடிய திராணியும் தெம்பும் ஏன் உங்களுக்கு இல்லை-


மறுபடியும் சொல்கிறேன்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக இருந்தால் தமிழ்நாட்டின் ஆறரைக் கோடி மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துங்கள். இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோள்.
தமிழ்நாட்டு மக்கள் சொல்லட்டும்- புலிகள் இயக்கத்தை தடை செய்யுங்கள் என்று-


தமிழ்நாட்டு மக்கள் சொல்லட்டும் தமிழீழம் அமைவதனை நாங்கள் விரும்பவில்லை என்று-
நாங்கள் வாயை மூடிக்கொள்கிறோம். "புளி"யை கரைத்து ரசம் வைப்பதைக் கூட நாங்கள் நிறுத்தி விடுகிறோம்.


தமிழ்நாட்டு மக்களினது உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழினத்தினது எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?
சட்டம் கொண்டு வந்தால் அதற்கு கட்டுப்பட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை-


அது தவறு என்றால் தவறு என்று சொல்லக்கூடிய உரிமை எங்களுக்கு உண்டு.


அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு.


இந்திரா அம்மையாருக்கும் சிறீமாவுக்கும் இடையேயான ஒப்பந்தமானாலும் சரி தமிழ்நாட்டு மக்களினது கருத்து கேட்கப்பட்டதா?


கடல் எல்லைகள் வரையறை தொடர்பில் தமிழ்நாட்டு அதிகாரிகளின் கருத்து கேட்கப்பட்டதா?


கச்சத்தீவை தாரை வார்க்கிற அந்த ஒப்பந்தம் தொடர்பில் தமிழ்நாட்டு மக்களினது கருத்து கேட்கப்பட்டதா? தமிழ்நாடு முதல்வராக அப்போதிருந்த கலைஞரிடத்திலே சொல்லிவிட்டா செய்தீர்கள்?


ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் போடப்பட்டதே- அது தமிழீழம் தொடர்பிலானது. அந்த விடுதலைப் போராளிகளிடத்தில் கருத்து கேட்டா போட்டீர்கள்?


அந்த ஒப்பந்தத்திலே மேதகு பிரபாகரன் கையெழுத்திட்டாரா?


ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகள் கட்டுப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? என்ன நீதி?


அந்த ஒப்பந்தத்தின்படி வடக்கும் கிழக்கும் ஒரே மாகாணமாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை சிங்கள அரசு மதித்திருக்கிறதா? நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்போகிறார்கள்?


கச்சத்தீவு கடற்பரப்பில் எமது மீனவ தமிழர்கள் சுதந்திரமாக மீன்பிடித்துவிட்டுத் திரும்ப வேண்டும்.


அதற்காக சிங்கள இனவெறி அரசு இந்திய அரசு போர் தொடுக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.


கடலடியில் மிதக்கவிடப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அப்புறப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கண்டன உரையாற்றினார்.

Thursday, January 24, 2008

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தவே கருத்துரிமை மீட்பு மாநாடு: தொல். திருமாவளவன்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில்தான் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (25.01.08) "கருத்துரிமை மீட்பு மாநாட்டை" நடத்துகிறோம் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு தொலைபேசியூடாக இன்று வியாழக்கிழமை (24.01.08) அவர் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: "கண்டனமும் இரங்கலும் தேசத்துரோகமா?" என்ற தலைப்பில் கருத்துரிமை மீட்பு மாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை சென்னையில் நடத்த உள்ளதாக அறிகிறோம். இத்தகையதொரு மாநாட்டை நடத்த வேண்டிய அவசிய சூழல் என்ன?

பதில்: 17 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜீவ் தமிழ்நாட்டில் மரணமடைய நேரிட்டது. அந்த ஒரு சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் தமிழீழத்தை ஆதரித்துப் பேசுவது- அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது இந்திய அரசுக்கு எதிரான குற்றம் என்று பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வருகின்றனர். கருத்தைச் சொல்லுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஏனெனில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள்-ஆகவே தமிழீழத்தைப் பற்றியே தமிழகத்தில் பேசக்கூடாது. அப்படிப் பேசுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கே அ.தி.மு.க.. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுகவின் தலைவர் வைகோ, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரை கைது செய்து விடுதலைப் புலிகளைப் பற்றி பேசியதே இந்திய அரசுக்கு எதிரான குற்றம் என்று பொடா சட்டத்தில் சிறைப்படுத்தினார்கள்.

பிறகு பொடாச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கான குழு தமிழகம் வந்தது. பொதுக்கூட்டங்களில் அவர்கள் அவ்வாறு பேசியது குற்றம் இல்லை- தன்னுடைய கருத்துகளைக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது கூட, திறந்தவெளி நீதிமன்றத்தில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதனைப் பற்றி கருத்துச் சொல்லக்கூடாது என்பது முறையல்ல. ஆதரித்தோ மறுத்தோ பேசலாம் என்று நீதிபதி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு இருக்க, தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதனை அரசியலாக்க ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகவும் இத்தகைய எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிற இயக்கங்களாக இருந்தாலும் தமிழீழத்துக்கு அல்லது விடுதலைப் புலிகளுக்கு தார்மீகமான ஆதரவைத்தான் வழங்க முடியுமே தவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு பொருளாதார உதவிகளோ ஆயுத உதவிகளோ அல்லது எரிபொருள், மருந்து பொருள், உணவுப் பொருள், உடைகள் போன்ற வகையிலான உதவிகளைச் செய்ய முடியாது. யாரும் செய்யவும் இல்லை. ஆகவே தார்மீகமான முறையிலான ஆதரவைத் தெரிவிப்பது, கருத்து தெரிவிப்பது கூட குற்றம் என்றும் தேசத்துரோகம் என்றும் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில் இந்த மாநாட்டை கூட்டியுள்ளோம்.

கேள்வி: தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் தோழமைக் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. அப்படியான நிலையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் இது பற்றி நீங்கள் எடுத்துக் கூறியுள்ளீர்களா?

பதில்: முதல்வரிடம் இதனைப் பற்றி நாங்கள் விரிவாகப் பேசவில்லை. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணிப் பொறுப்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டு விடுதலை ஆன பின்னர் தமிழக முதல்வரைச் சந்தித்தோம்.
அப்போது "இந்திய அரசியல் சூழலுக்கு ஏற்ப நாம் எல்லாம் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. தமிழர்கள் மீது- ஈழத்தின் விடுதலையின் மீது எல்லோருக்கும் ஈடுபாடு இருக்கிறது என்பதனை யாரும் மறுத்துவிட முடியாது. சூழலுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு நாங்கள் எதனையும் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி: இந்த மாநாடு யாருக்கு எதிராக?

பதில்: இந்த மாநாடு தமிழக அரசுக்கு எதிராக ஒருங்கிணைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசுக்கு எதிராகவும் இந்த மாநாட்டை நாங்கள் நடத்தவில்லை. ஈழத்தைப் பற்றியோ புலிகளைப் பற்றியோ இங்கே வாயே திறக்கக்கூடாது என்று சில அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயத்துக்காக திசை திருப்ப முயற்சிக்கின்றன. அதனை முறியடிப்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகின்றோம்.

கேள்வி: இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் போன்றவர்கள் புலிகள் நடமாட்டம் இல்லை என்ற கூறியபோதும் அண்மையில் புலிகள் கைது என பல்வேறு செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இது பற்றி?

பதில்: இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனும், தென்னக இராணுவ தளபதி நோபுள்தம்புராஜூம் தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் இல்லை என்பதனை தெளிவுபடுத்தியிருக்கின்றனர். ஆனாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கக்கூடிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மறுபடியும் மறுபடியும் புலிகள் நடமாட்டம் இங்கிருக்கிறது என்று அவர் அறிக்கை விடுகிற காரணத்தால், இங்கே அது அரசியலாக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டு உளவுத்துறை மட்டுமின்றி மத்திய அரசாங்கத்தின் உளவுத்துறையும் பெருமளவில் தவறான செய்திகளை- திசை திருப்பும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது.

காரணம் எதிர்வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள விடுதலைப் புலிகள் மீதான தடையை மறுபடியும் நீட்டிக்க வேண்டும் என்ற தேவை இருப்பதால் இங்கே புலிகள் நடமாட்டம் இருப்பதாக வதந்தியைப் பரப்பி உண்மை என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

அதற்காகத்தான் அப்பாவி ஈழத்து இளைஞர்களை- அகதிகளாக வந்திருப்பவர்களைப் பிடித்து அவர்கள் எல்லாம் புலிகள்தான் என்று பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: புலிகள் மீதான தடையை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தேவை இன்னமும் உள்ளதா?

பதில்: இதற்கு அடிப்படையான இரண்டு காரணங்கள் இருப்பதாக அறிகின்றோம்.

1. தமிழீழம் என்கிற தனிநாடு உருவாகவே கூடாது என்ற அரசியல் கொள்கை. அப்படித் தனித் தமிழீழம் உருவானால் இந்திய நாட்டில் வாழ்கிற தமிழர்களும் தனிநாடு கோரிக்கையை நகர வாய்ப்பிருக்கின்றது என்றும் அது இந்திய ஒருமைப்பாட்டு எதிரான சிக்கலை உருவாக்குவதாக அஞ்சுவதாக நாம் அறிகிறோம்.

2. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க வல்லரசு முன்னெடுத்திருக்கின்றது. அமெரிக்க வல்லரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதனை தனது கடமையாக இந்திய அரசு கருதுகின்றது. உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க அரசின் முடிவுகளை ஆதரிக்கக் கூடிய வகையில் அச்சுறுத்தப்படுகின்றனர். அந்த வகையில் இந்திய அரசும் அமெரிக்க அரசாங்கத்தின் பிடியிலே சிக்கி உள்ள காரணத்தால் அமெரிக்க அரசாங்கத்துக்கு ஒத்து ஊதக் கூடிய வகையிலே விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்துக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி: நாளைய மாநாட்டிற்கு யேர்மனிய பேராசிரியர், சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணி கட்சியின் நிர்வாகி, ஈழத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் என முற்றிலும் வெளிநாட்டவரையே அழைத்துள்ளமைக்கு ஏதாவது குறிப்பிடும்படியான காரணம் உண்டா?

பதில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்களை வைத்து பல கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியிருக்கின்றோம். மறுபடியும் அவர்களை வைத்தே- எங்களுக்கு கருத்துரிமை உண்டு என்று சொல்வதனை தமிழக ஊடகங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. வழக்கம் போல் ஆதரிப்பவர்கள் ஒன்று கூடி பேசியிருக்கிறார்கள்- கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்று உதாசீனப்படுத்திவிடுவார்கள் எனக்கருதிய காரணத்தால் உண்மையிலேயே அனைத்துலக அளவில் மனித உரிமைகள் மீதும் கருத்துரிமை மீதும் நம்பிக்கை வைத்து அதற்காக வாதாடக் கூடியவர்களை அழைத்து கருத்துரிமையை வலியுறுத்த வேண்டியது அவசியம் எனக் கருதிய காரணத்தால் அவர்களை மட்டும் அழைத்திருக்கின்றோம். ஆனாலும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

கேள்வி: தமிழ்நாடு சட்டப்பேரவை தற்போது நடைபெறுவதாக நாங்கள் அறிகின்றோம். அதில் கருத்துரிமை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்களா?

பதில்: கட்டாயமாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் பேசுவார்கள்.

கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாக பல்வேறு பொய்ச் செய்திகளை தமிழக ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிடும் நிலையில் தமிழ்நாட்டு மக்களினது உணர்வுகள் எப்படியாக உள்ளது?

பதில்: இந்த மாதிரி பலமுறை பொய்யான செய்திகளை தமிழக ஊடகங்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 1989 இல் ஒருமுறை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது அவர் இறந்துவிட்டார். ஆனால் மூடி மறைக்கிறார்கள் என்று சிங்களவர்கள் பரப்பிவிட்டனர். அதன் பின்னர் அடுத்தடுத்து இம் மாதிரியான பொய்ச்செய்திகள்- வதந்திகளை பரப்புகின்றனர்.

இம் மாதிரியான பொய்ச்செய்திகளை- வதந்திகளை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. திடீரென்று பிரபாகரன் குண்டுவீச்சில் காயம்- அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளார் என்றெல்லாம் கட்டுக்கதைகளை கட்டிவிட்டார்கள். அது ஒன்றுமே உண்மையில்ல என்பது புலிகளின் மறுப்புச் செய்திகள் மூலமாக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெல்ல வேண்டும்- தமிழீழம் வெல்லப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு- அதற்கான பேராதரவு தமிழக மக்களிடம் வலுவாக உள்ளது.

கேள்வி: எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் எங்கள் தாயக விடுதலைக்காக தார்மீக ஆதரவளித்து வரும் தாங்கள், தமிழீழத் தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன?

பதில்: தமிழீழத் தாயகத்தைச் சேர்ந்த மக்கள், உலக நாடுகளில் பல்வேறு துருவங்களில் புலம்பெயர்ந்து சிதறிக் கிடக்கிறார்கள். தமிழீழம் என்றைக்கு மலரும்- மறுபடியும் தாயகம் என்றைக்கு திரும்புவோம் என்கிற ஏக்கத்தோடு எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களின் கனவு நனவாகக் கூடிய வகையில் மேதகு பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் கடுமையான விடுதலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மேதகு பிரபாகரனின் வேண்டுகோளை அல்லது கட்டளையை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தமிழீழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கையோடு பொருளாதார அடிப்படையிலான முழுப் பங்களிப்பு அவசியம் தேவை என்றார் தொல். திருமாவளவன்.

சிங்கள அரசுக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஈரான், இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகள்- அதுவும் அரசுகள் உதவி செய்கின்றன.

ஆனால் சிங்கள அரசை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிற விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு உலகில் எந்த நாடும் அரசும் இல்லை. இருக்கிற ஒரே மூலாதார சக்தி புலம்பெயர் தமிழர்கள்தான். கடந்த 25 ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து உதவி வருவதைப் போல் தொடர்ந்து உதவ வேண்டும்- ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழீழத் தாயக மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாம் விடுக்கிற வேண்டுகோள்.

நன்றி: www.puthinam.com

மொழிப்போர் ஈகியர்நாள்

திருவள்ளுவராண்டு 2039 சுறவம் 11
மொழிப்போர் ஈகியர் நாள்
மொழிப்போர் ஈகியருக்கு
வீரவணக்கம்